24வருஷம் போனதே தெரியல.. 3,620கிமீ தூரம் கடந்து வந்து புனித மண்ணை வழங்கிய இந்திய வீரர்கள்.. ஒரு சல்யூட் ப்ளீஸ்!
1999 ஆம் ஆண்டில் காஷ்மீரின் கார்கில் பகுதிக்குள் புகுந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய ராணுவத்தின் மீது திடீர் தாக்குதலை தொடுத்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த ராணுவமும் பதில் தாக்குதலை நடத்தியது. இந்த போர் சுமார் 3 மாதங்களாக நடைபெற்றது.
'ஆபரேஷன் விஜய்' என்கிற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு எதிரான போரை தொடுத்தது. தொடர்ந்து இந்த போரில் வெற்றியையும் அது கண்டது. ஜூலை 26-லேயே இந்த வெற்றியை இந்தியா பெற்றது. ஆகையால், ஜூலை 26 ஆம் தேதியை 'கார்கில் விஜய் திவாஸ்' என நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பாகிஸ்தானின் இந்த திடீர் தாக்குதலில் இந்திய வீரர்கள் சிலர் வீர மரணம் அடைந்தனர். இவர்களின் உயிர் தியாகம் அளப்பறியாதது. இதுபோன்று வீரர்கள் பலர் துணிச்சலாக செயல்பட்டதனாலேயே இந்த போரில் இந்தியாவால் வெற்றிக் காண முடிந்தது. இந்த வெற்றியின் 24 ஆம் ஆண்டு கொண்டாட்டமே இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
மேலும், கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு வீர வணக்கத்தைச் செலுத்தினர். முக்கியத் தலைவர்களைப் போல இன்னும் பலர் தங்களின் வீர வணக்கத்தை வீரர்களுக்கு செலுத்தினர்.

அந்தவகையில், போர் வீரர்களுக்கு மரியாதைச் செலுத்தும் விதமாக பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஜாவா-யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ், இந்திய ஆயுதப் படையுடன் இணைந்து 'கார்கில் விஜய் திவாஸ் ரைடு' எனும் இருசக்கர வாகன ரைடை தொடங்கி வைத்தது. இது மூன்றாம் பதிப்பு ஆகும்.
இந்திய ராணுவத்தின் 'நாகா ரெஜிமெண்ட்' மூலமே இம்முறை இந்த ரைடு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் இந்திய ராணுவப் படையைச் சேர்ந்த வீரர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். ஒட்டுமொத்தமாக 24 வீரர்கள் ரைடர்களாக பங்கேற்றனர் ஜாவா-யெஸ்டி மோட்டார்சைக்கிளை இயக்கினர்.

வீரர்களின் இந்த பயணம், வீரர்களின் தியாகம் மற்றும் அவர்களின் இறப்பை நினைவு கூறும் விதமாக ஜூலை 2ஆம் தேதி தொடங்கப்பட்டது. தற்போது இந்த ரைடு வெற்றிகரமாக நிறைவடைந்தும் இருக்கின்றது. இந்த நிகழ்வையே (பயணம் வெற்றிகரமாக முடிவடைந்திருப்பதையே) ஜாவா-யெஸ்டி நிறுவனம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.
நாகாலாந்தின் கோஹிமாவில் தொடங்கிய இந்த பயணம் கார்கில் நினைவிடத்தில் நிறைவடைந்தது. சுமார் 3,620 கிமீ தூர இடைவெளியைக் கடந்து வந்து வீரர்கள் கார்கில் நினைவிடத்தில் வீரர்களின் சமாதிகளுக்கு மரியாதைச் செலுத்தினர். 'முதல் மூச்சு முதல் கடைசி மூச்சு வரை' என்கிற தலைப்பின்கீழ் இந்த பயணத்தை வீரர்கள் மேற்கொண்டனர்.

அதாவது, உயிர் தியாகம் செய்த நாகலாந்து வீரர்கள் பிறந்த இடத்தில் இருந்து அவர்கள் கடைசியாக உயிர் தியாகம் செய்த கார்கில் இடத்தை இணைக்கும் வகையில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதையே இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றனர். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக புனித மண் என கருதப்படும் நாகலாந்து நிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கார்கில் நினைவிடத்தில் வைக்கப்பட்டது.
கார்கில் போரை போலவே வீரர்களின் இந்த 3,620 கிமீ தூர பயணமானது மிகுந்த சவாலானது ஆகும். இந்தியாவின் பலதரப்பட்ட சவாலான நிலபரப்பைக் கடந்து வந்தே வீரர்கள் கார்கில் நினைவிடத்தை வந்தடைந்தனர். இதைத்தொடர்ந்து, போரில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டு, மலர் வளையம் வைக்கப்பட்டது. போர் வீரர்களின் இந்த செயல் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் நெகிழ்ச்சியடையச் செய்யும் வகையில் அமைந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கார்கில் போரில் வீர மரணமடைந்த வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்வதற்காகவும், தேசத்தைப் பாதுகாக்கும் போது தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த நமது துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுமே ஜாவா-யெஸ்டி முன்னெடுத்த இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.


Click it and Unblock the Notifications









