உலகத்திலேயே முதல் ஆளாக இந்தியர்கள் பெற உள்ள டிரையம்ப் பைக்!! பஜாஜ் தொழிற்சாலையில்... டெலிவிரிக்கு தயார்!
டிரையம்ப் ஸ்பீடு 400 (Triumph Speed 400) பைக்குகள் புக் செய்த கஸ்டமர்களுக்கு டெலிவிரி செய்ய, தொழிற்சாலையில் இருந்து டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு செல்ல தயாராகி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் டிரையம்ப் இந்தியா நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. டிரையம்ப்பின் இந்திய தொழிற்சாலையில் இருந்து வெளியாகியுள்ள அந்த வீடியோவை இனி பார்க்கலாம்.
ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கிற்கு போட்டியாக, டிரையம்ப் நிறுவனம் இந்தியாவில் ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் என்ற இரு மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்டு சர்வதேச அளவில் வெளியீடு செய்யப்பட்ட பின்னர், விரைவாகவே முதல் நாடாக இந்தியாவில் இந்த புதிய டிரையம்ப் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கிற்கு போட்டியாக களமிறக்கப்பட்டாலும், இந்த இரு பைக்குகள் மூலம் ராயல் என்பீல்டின் 350சிசி பைக்குகளையே போட்டியாக டிரையம்ப் கருதுகிறது. ஸ்பீடு 400 & ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்குகளுக்கு முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் இந்த புதிய டிரையம்ப் பைக்குகளை டிரையம்ப் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் மையத்திற்கு சென்றோ முன்பதிவு செய்யலாம்.
ஆனால் இவை இரண்டில் ஸ்பீடு 400 பைக் முதலாவதாக இந்த ஜூலை மாத இறுதியில் இருந்து டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வரவுள்ளது. ஸ்க்ராம்ப்ளர் 400 பைக்குகளை அக்டோபர் மாதத்தில் இருந்தே ஷோரூம்களுக்கு அனுப்ப டிரையம்ப் திட்டமிட்டுள்ளது. ஆதலால், ஸ்க்ராம்ப்ளர் 400 பைக்கை இப்போது புக் செய்தாலும், அக்டோபர் மாதத்தில் தான் டெலிவிரி பெற முடியும்.

இதனாலேயே தற்போதைக்கு, ஸ்பீடு 400 பைக்கின் விலை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.33 லட்சம் ஆகும். இந்த குறைவான விலை ஆனது ஸ்பீடு 400 பைக்கை முன்பதிவு செய்யும் முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிவித்துள்ளது. டிரையம்ப்பின் வெப்சைட்டில் இன்னமும் இந்த விலையே குறிப்பிடப்பட்டு உள்ளதால், இன்னும் 10,000 வாடிக்கையாளர்கள் தாண்டவில்லை என்றே தோன்றுகிறது.
ஸ்பீடு 400 பைக்குகளின் டெலிவிரிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்ட ஜுலை மாத இறுதியில் நாம் உள்ளோம். அறிவித்தப்படி, பைக்குகளை புக் செய்தவர்களுக்கு டெலிவிரி செய்யும் பணியில் டிரையம்ப் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக, தொழிற்சாலையில் இருந்து புதிய டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்குகள் ஷோரூம்களுக்கு செல்ல துவங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக டிரையம்ப் மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் பதிவு ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
"புதிய டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கின் விநியோகங்கள் துவங்கப்பட்டு உள்ளன. உங்களுக்கு அருகில் உள்ள டிரையம்ப் டீலர்ஷிப்பிற்கு விரைவில் வரவுள்ளது" என இந்த புதிய டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள டிரையம்ப் நிறுவனம், தொழிற்சாலையில் ஸ்பீடு 400 பைக்குகள் அனைத்து விதங்களிலும் தயாராகும் வீடியோ ஒன்றையும் இந்த பதிவின் மூலம் வெளியிட்டுள்ளது.
டிரையம்ப்-பஜாஜ் ஆட்டோ நிறுவனங்கள் கூட்டணியில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். இந்த கூட்டணி கொள்கையின்படி, புனேவில் உள்ள பஜாஜின் சாகான் தொழிற்சாலையில்தான் புதிய டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதே பஜாஜ் தொழிற்சாலையில்தான் கேடிஎம் பைக்குகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியர்களுக்காக பார்த்து, பார்த்து டிரையம்ப் வடிவமைத்த பைக்குகள் இவ்வளவு விரைவாகவே நம் இந்திய மக்களின் கைக்கு வந்தடைய உள்ளது. ஆனால் எங்களை கேட்டால், 400சிசி-ஐ விட குறைந்த சிசி பைக்குகள் இந்தியர்கள் பலரை இன்னும் வெகுவாக கவரும். ஸ்பீடு 400 பைக்குகளை தொழிற்சாலையில் இருந்து பெற துவங்கிய அடுத்த நாளில் இருந்தே டீலர்கள் கஸ்டமர்ஸை அழைத்து டெலிவிரி கொடுக்க துவங்கி விடுவர்.


Click it and Unblock the Notifications









