ஊழியர்களை தாமாக முன் வந்து வீட்டுக்கு போக கூறும் ஹீரோ.. பல்க்கான அமவுண்டை தருவதாக சமாதானம்!
இந்தியாவின் மாபெரும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் அதன் ஊழியர்களை தாமாக முன் வந்து வேலையை விட்டு செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கின்றது. இதற்காக ஓர் திட்டத்தையும் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
உலகின் மிகப் பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) இருக்கின்றது. இந்திய இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் என்றும் இந்த நிறுவனம் போற்றப்படுகின்றது. இத்தகைய பிரமாண்ட நிறுவனமே தன்னுடைய ஊழியர்களை தாமாக முன் வந்து வீட்டுக்கு கிளம்பும்படி அறிவுறுத்தி இருக்கின்றது.

அதாவது, வேலையில் இருந்து தாமாக விடுதலை (Voluntary Retirement Scheme) பெறுமாறு கூறி இருக்கின்றது. இதற்கான சிறப்பு திட்டம் ஒன்றையும் அந்நிறுவனம் அறிவித்திருக்கின்றது. அதாவது, வேலையை வேண்டாம் என தாமாக முன் வந்து எழுதிக் கொடுத்துவிட்டு கிளம்பும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்க இருப்பதாக ஹூரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
எதிர்காலத்திற்கு ஏற்ப நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கையில் ஹீரோ மோட்டாகார்ப் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால், வேகமாக வளர்ந்து வரும் சூழலுக்கு ஏற்ப வலுவான கட்டமைப்புகளை உருவாக்கும் நோக்கிலேயே விஆர்எஸ் திட்டத்தை தன்னுடைய ஊழியர்களுக்கு ஹீரோ மோட்டோகார்ப் அறிவித்து இருக்கின்றது.

இந்த திட்டம் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்கீழ் நிறுவனத்தைவிட்டு வெளியேறும் ஊழியர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன. குறிப்பாக, பெருந்தொகை நிறுவனம் சார்பில் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், அது எவ்வளவு என்கிற துள்ளியமான விபரம் அறிவிக்கப்படவில்லை.
இதுதவிர, பரிசு பொருட்கள், காப்பீட்டு திட்டம், நிறுவனம் வழங்கிய காரை அவர்களே வைத்துக் கொள்ள அனுமதி என பல்வேறு சலுகைகளை ஹீரோ மோட்டோகார்ப் வழங்க இருக்கின்றது. இதுமட்டுமின்றி, வேறு இடங்களுக்கு மாற உதவி செய்தல் மற்றும் புதிய தொழிலைத் தொடங்க ஆதரவு வழங்குதல் போன்ற சிறப்பான சேவைகளையும் வழங்க இருப்பதாக ஹீரோ நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ஆகையால், விரைவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தைவிட்டு பலர் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களால் ஏற்பட இருக்கும் வெற்றிடத்தை நிறுவனம் எவ்வாறு பூர்த்தி செய்ய இருக்கின்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. ஓர் நிறுவனம் தன்னுடை வர்த்தக பணிகளை முழுமையாக கை விடும்போதே இதுமாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
ஆனால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தை பலப்படுத்தும் விதமாக இந்த முயற்சியில் களமிறங்கி இருப்பதாக கூறப்படுகின்றது. எனவே ஒட்டுமொத்த இந்திய வாகன உலகின் பார்வையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பக்கம் திரும்பி இருக்கின்றது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் உயர் பொருப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
முன்னதாக இந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்த நிரஞ்ஜன் குப்தா, அண்மையில் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த மறு சீரமைப்பு அரங்கேறி சில நாட்களே ஆகின்றன. இந்த நிலையிலேயே அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தக் கூடிய வகையிலான ஓர் அறிவிப்பாக விஆர்எஸ் திட்டத்தை ஹீரோ மோட்டோகார்ப் அறிவித்து இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:
நிறுவனத்தின் இந்த விஆர்எஸ் திட்டம் அதன் எதிர்பார்ப்பை எந்த அளவிற்கு பூர்த்தி செய்யும் என்பது தெரியவில்லை. இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேவேளையில், முன்பு இருந்ததைக் காட்டிலும் கடந்த 2022-23 நிதியாண்டில் ஹீரோவின் புதிய வாகன விற்பனை பலமடங்கு அதிகரித்து இருக்கின்றது.
5.3 மில்லியனுக்கும் அதிகமான ஹீரோ இருசக்கர வாகனங்கள் கடந்த நிதியாண்டில் விற்பனையாகி இருக்கின்றன. இது முந்தைய 2021-22 நிதியாண்டைக் காட்டிலும் 8 சதவீதம் அதிக விற்பனை வளர்ச்சியாகும். அதேநேரத்தில், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியில் நிறுவனம் லேசான பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. இந்த நிலையிலேயே அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளும் முயற்சியில் ஹீரோ களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








