300கிமீ பயணிக்கும் சிம்பிள் ஒன் முதல் ஆக்டிவா எச்-ஸ்மார்ட் வரை.. ஏப்ரல் மாசம் அறிமுகமாக இருக்கும் டூ-வீலர்கள்!
இந்தியர்களை மிகப் பெரிய இருசக்கர வாகன விரும்பிகள் என கூறலாம். இதனால்தான் ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் லட்சக் கணக்கில் டூ-வீலர்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. ஹீரோ மற்றும் ஹோண்டா இந்த இரு நிறுவனங்களே இதற்கு சான்று. இந்த இரு நிறுவனங்களின் இருசக்கர வாகனங்களே நாட்டில் மிக அதிக அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிறுவனங்களைப் போலவே மற்ற நிறுவனங்களும் இந்தியர்களின் மனம் கவர் நிறுவனமாக மாற முயற்சித்து வருகின்றன. அதேவேளையில், ஏற்கனவே இந்தியர்களை தங்களின் இருசக்கர வாகனங்களால் வசப்படுத்தி வைத்திருக்கும் நிறுவனங்களும் தொடர்ச்சியாக அவர்கள் பக்கமே வாடிக்கையளர்கள் இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனத்துடன் இருக்கின்றன.

இதன் அடிப்படையில் புதிய வாகனங்களை அவை தொடர்ச்சியாக களமிறக்கிய வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில், கடந்த காலங்களை போலவே வரும் ஏப்ரல் மாதத்திலும் குறிப்பிட்ட சில புதுமுக டூ-வீலர்களை இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றன. அவை எவை? மற்றும் புதுமுக இருசக்கர வாகனங்களின் சிறப்புகள் என்ன?, என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், நாட்டில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் இதுவும். இந்த மின்சார ஸ்கூட்டர் ஒரு முழு சார்ஜில் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த திறனுக்காகவே இந்த வாகனத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்போரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. நாளுக்க நாள் எதிர்பார்ப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

ஆனால், இந்த வாகனத்தை வெகு நாட்களாக விற்பனைக்குக் கொண்டு வருவதாக கூறி நிறுவனம் இழுத்தடிப்பு செய்துக் கொண்டிருக்கின்றது. நிறுவனத்தின் இந்த அலட்சியப் போக்கால் பலரை இந்த நிலை கவலையடைய செய்யத் தொடங்கி இருக்கின்றது. குறிப்பாக, புக்கிங் செய்துவிட்டு சிம்பின் ஒன் இ-ஸ்கூட்டருக்காக காத்திருப்போரின் நிலை சற்றே பரிதாபமாகவே உள்ளது.
இந்த நிலையிலேயே வரும் ஏப்ரல் மாதத்தில் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துவிடும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும் பணியில் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் புதிய மின் வாகன உற்பத்தி ஆலையை அமைப்பதிலும் நிறுவனம் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது.

ஹோண்டா ஆக்டிவா 125 எச்-ஸ்மார்ட், இந்தியர்களின் எதிர்பார்ப்பைப் பெரிதும் தூண்டி வரும் ஸ்கூட்டர் மாடல்களில் இதுவும் ஒன்று. ஹோண்டா நிறுவனம் கார்களில் காணப்படும் சில முக்கிய வசதிகளை இந்த டூ-வீலரில் வழங்கி இருக்கின்றது. ரிமோட் சாவி வசதியை இந்த ஸ்கூட்டருக்கு நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த சாவியை வைத்து லாக்/அன்-லாக் ஆகியவற்றை செய்து கொள்ள முடியும். இதுதவிர, எஞ்ஜினை ஸ்டார்ட் செய்யுதல், ஸ்டாப் செய்யுதல் ஆகியவற்றையும் செய்து கொள்ள முடியும்.
இத்தகைய அம்சத்தை பெறும் முதல் டூ-வீலர் ஹோண்டா ஆக்டிவா மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் காரணத்தினாலேயே இந்த வாகனத்தை எதிர்பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இதுதவிர, அதிகம் மைலேஜ் தரும் வாகனமாகவும் இதனை ஹோண்டா தயார் செய்திரப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வருகையே வரும் ஏப்ரலில் அரங்கேற இருக்கின்றது.

2023 டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் ஆர் மற்றும் ஆர்எஸ் பைக்கும் வரும் ஏப்ரல் மாதத்திலேயே அறிமுகமாக இருக்கின்றது. இந்த பைக் நடப்பு மார்ச் மாதத்திலேயே அறிமுகமாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அறிமுகத்தை அடுத்த மாதத்திற்கு நிறுவனம் ஒத்தி வைத்தது. நிறுவனத்தின் இந்த செயல் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்தது.
உலகின் கவர்ச்சிகரமான சூப்பர் பைக்குகளில் டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் ஆர் மற்றும் ஆர்எஸ் ஆகியவையும் அடங்கும். இதன் காரணமாகவே இதற்கு இந்தியாவில் எதிர்பார்ப்பு சற்று அதிகம். மிக அதிக திறனை வெளியேற்றக் கூடிய டூ-வீலராகவும் இவை இருக்கின்றன. இதுமட்டுமில்லைங்க, தொழில்நுட்ப வசதியிலும் நம்மை வாயை பிளக்கச் செய்யும் வகையில் இந்த மோட்டார்சைக்கிள்கள் இருக்கின்றன.

டுகாட்டி மான்ஸ்டர் எஸ்பி, டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டில் 9 புதிய மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த ஒன்பது மாடல்களில் ஒன்றாக விரைவில் மான்ஸ்டர் எஸ்பி இந்தியா வந்தடைய இருக்கின்றது. இதன் வருகை வரும் ஏப்ரலிலேயே அமைய இருக்கின்றது. ரூ. 15.95 லட்சத்திற்கும் அதிகமான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த இருசக்கர வாகனம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
இந்தியர்கள் மத்தியில் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் ஹோண்டா ஆக்டிவா எச்-ஸ்மார்ட் ஆகிய இரு இரண்டு சக்கர வாகனங்களுக்கும் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இவை விற்பனையில் எதிர்பார்த்திராத அளவு சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆக்டிவா தொழில்நுட்பத்திற்காகவும், சிம்பிள் ஒன் அதிக ரேஞ்ஜிற்காகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எங்களால் யூகிக்க முடிகின்றது.


Click it and Unblock the Notifications









