இவ்வளவு அவசரம் எதுக்குனே தெரியல.. யமஹா சொல்லும் முன்னரே புதிய பைக்கிற்கான புக்கிங்கை அவங்களாவே தொடங்கீட்டாங்க!
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் யமஹா-வும் ஒன்று. இந்த நிறுவனம் இப்போதைய நிலவரப்படி மோட்டார்சைக்கிள்கள் பிரிவில் ஆர்15எம், ஆர்15 வி4, ஆர்15எஸ், எம்டி-15 வெர்ஷன் 2.0, எஃப்இசட்எஸ் 25, எஃப்இசட் 25, எஃப்இசட்-எக்ஸ், எஃப்இசட்-எஸ் வெர்ஷன் 4.0 டிஎல்எக்ஸ், எஃப்இசட்எஸ்-எஃப்ஐ வெர்ஷன் 3.0 மற்றும் எஃப்இசட்-எஃப்ஐ ஆகியவற்றை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இதேபோல், ஸ்கூட்டர்கள் வரிசையில் ஏரோக்ஸ் 155, ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ரேல்லி 125 எஃப்ஐ, ரே இசட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் ஃபஸ்ஸினோ 125 எஃப்ஐ ஆகிய ஸ்கூட்டர் மாடல்களையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், மேலே பார்த்த பட்டியலிலேயே இல்லாத ஓர் பைக் மாடலுக்கு இந்தியாவில் புக்கிங் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

யமஹா இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்து வரும் டீலர்களே தன்னிச்சையாக இந்த புக்கிங் பணிகளைத் தொடங்கி இருக்கின்றனர். அவர்கள், யமஹா ஆர்3 எனும் பைக்கிற்கே புக்கிங்கைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யமஹா சமீபத்தில் சில உயர் வகை மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது.
எம்டி-03, ஆர்7, எம்டி-07, எம்டி-09, ஆர்1எம் மற்றும் ஆர்3 ஆகியவற்றையே அது காட்சிப்படுத்தியது. ஓர் டீலர்ஷிப் நிகழ்ச்சியின் வாயிலாக இவை அனைத்தையும் யமஹா அறிமுகப்படுத்தியது. வெறும் அறிமுகம் மட்டுமே அன்றைய தினத்தில் செய்யப்பட்டது. இது எப்போது விற்பனைக்குக் கொண்டு வரப்படும்?, என்ன விலையில் விற்பனைக்கு வரும்? என்பது போன்ற எந்த முக்கிய தகவல்களையும் அது அறிவிக்கவில்லை.

இந்த மாதிரியான சூழலிலேயே எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாவதற்கு முன்னரே யமஹா இருசக்கர வாகன விற்பனையாளர்கள் சிலர் ஆர்3 பைக்கிற்கான புக்கிங்கை தொடங்கி இருக்கின்றனர். அதாவது அதிகாரப்பூர்வமற்ற புக்கிங்கை அவர்கள் தொடங்கி இருக்கின்றனர். 5 ஆயிரம் ரூபாய் தொடங்கி 25 ஆயிரம் ரூபாய் வரையிலான முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களின் இந்த செயலினால் விரைவில் ஆர்3 இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு வரும் என்பது தெரிய வந்திருக்கின்றது. அது விற்பனைக்கு வரும்பட்சத்தில் நிறுவனத்தின் ப்ளூ ஸ்கொயர் விற்பனையகங்கள் வாயிலாக மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். இது, யமஹா நிறுவனம் அதன் பிரீமியம் தர மோட்டார்சைக்கிள்களுக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஷோரூம்கள் ஆகும்.

நாடு முழுவதும் சுமார் 200 ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்களை யமஹா அமைத்திருக்கின்றது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, மார்தாண்டம், ராமநாதபுரம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ப்ளூ ஸ்கொயர் யமஹா பைக் விற்பனையகம் அமைந்துள்ளன. யமஹா ஆர்3 ஓர் 321 சிசி, பாரல்லல் ட்வின் எஞ்ஜின் கொண்ட மோட்டார்சைக்கிள் ஆகும்.
இது லிக்யூ கூல்டு வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மோட்டாரால் 10,750 ஆர்பிஎம்மில் 41 பிஎச்பி பவரையும், 9,000 ஆர்பிஎம்மில் 29.5 என்எம் டார்க்கையும் வெளியேற்ற முடியும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், மிக சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக பைக்கின் முன் பக்கத்தில் இன்வெர்டட் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

பின் வீலில் வழங்கப்பட்டு இருக்கும் மோனோஷாக்கை ப்ரீலோடுக்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். இத்துடன், மிக சிறந்த பிரேக்கி அனுபவத்திற்காக யமஹா ஆர்3 பைக்கில் 298 மிமீ டிஸ்க் முன் பக்க வீலிலும், 220 மிமீ டிஸ்க் பின் பக்க வீலிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இவற்றுடன், இரு வீல்களிலும் ஏபிஎஸ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்த பைக்கில் பயணிக்கும்போது மிகவும் த்ரில்லான ரைடு அனுபவம் கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரிகின்றது. எனவே இந்த மோட்டார்சைக்கிளுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யமஹா ஆர்3 பைக் விற்பனைக்கு வரும்பட்சத்தில் அது கேடிஎம் ஆர்சி390க்கு கடும் போட்டியாக அமையும். ப்ளூடூத் இணைப்பு, செல்போன் இணைப்பு என பலதரப்பட்ட அம்சங்கள் இந்த பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றன. இன்னும் ஒரு சில தினங்களில் இந்த பைக்கின் வருகையை யமஹா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









