உயிர்த்தெழுகிறது! அந்த யமஹா பைக் மறுபடியும் வரப்போகுதா! நம்ம அப்பா, தாத்தாலாம் இதுமேலதான் பைத்தியமா இருந்தாங்க
இந்திய சந்தையில் கடந்த 1980 மற்றும் 90களில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த பைக்குகளில் ஒன்று யமஹா ஆர்டி 350 (Yamaha RD 350). கிளாசிக் டிசைன் மற்றும் சக்தி வாய்ந்த இன்ஜின் ஆகிய காரணங்களால்தான், வாடிக்கையாளர்கள் மத்தியில் யமஹா ஆர்டி 350 பைக் மிகவும் பிரபலமாக விளங்கியது.
இன்றும் கூட யமஹா ஆர்டி 350 பைக்கை அப்படியே புதிது போல் வைத்திருப்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். ஐபிஎல் (IPL) தொடரின் ஜாம்பவான் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் கேப்டன் எம்.எஸ். டோனியிடம் (MS Dhoni) கூட தற்போதும் யமஹா ஆர்டி 350 பைக் இருக்கிறது.

யமஹா ஆர்டி 350 பைக்குகளின் உரிமையாளர்கள் சமூக வலை தளங்களில் ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கும் நிலையில், யமஹா ஆர்டி 350 பைக் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
யமஹா நிறுவனம் ஜப்பானில் தற்போது யமஹா ஆர்இஸட் 350 (Yamaha RZ 350) என்ற பெயரை பதிவு செய்வதற்காக விண்ணப்பித்துள்ளது. எனவே யமஹா ஆர்டி 350 பைக் இந்திய சந்தையில் யமஹா ஆர்இஸட் 350 என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் ரெட்ரோ ஸ்டைல் பைக்குகளுக்கான டிமாண்ட் தற்போது அதிகரித்து வருகிறது.

எனவே முன்னணி நிறுவனங்கள் பலவும் பல்வேறு புதிய ரெட்ரோ ஸ்டைல் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. அத்துடன் விற்பனை நிறுத்தப்பட்ட தனித்துவமான பைக்குகளை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டும் உள்ளன. எனவேதான் யமஹா நிறுவனமும் இந்திய சந்தையில் ஆர்டி 350 பைக்கை ரீ-லான்ச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த யூகங்களுக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில்தான் தற்போது ஆர்இஸட் 350 என்ற பெயரை பதிவு செய்ய யமஹா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஆர்டி 350 பைக் இந்திய சந்தையில் ஆர்இஸட் 350 என்ற பெயரில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், அது மாடர்ன் கிளாசிக் பைக்காக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதாவது தற்போது உள்ள வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ற வகையிலும், கடுமையான மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையிலும் இந்த பைக் இருக்கும். பழைய யமஹா ஆர்டி 350 பைக்கில், 347 சிசி ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இதன் பவர் அவுட்புட் 39 பிஹெச்பி-யாக இருந்தது. அதே சமயம் இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருந்தது.
இது 2 ஸ்ட்ரோக் இன்ஜின் ஆகும். ஆனால் புதிய மாடலில் 4 ஸ்ட்ரோக் இன்ஜின் வழங்கப்படலாம். இதுதவிர ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ட்ராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், அஸிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச், ட்யூயல் சேனல் ஏபிஎஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் போன்ற அதிநவீன வசதிகளும் வழங்கப்படலாம்.
இந்திய சந்தையில் இந்த பைக் களமிறக்கப்பட்டால், ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் 350 சிசி பைக்குகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும். அதாவது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350), ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) மற்றும் ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350) ஆகிய மாடல்களுக்கு பெரும் குடைச்சல் கொடுக்கலாம்.
இதுதவிர ஹோண்டா ஹைனெஸ் சிபி350 (Honda H'ness CB350), ஜாவா (Jawa) மற்றும் யெஸ்டி (Yezdi) மாடல்களுக்கும் இது விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம். தற்போதைய நிலையில் இந்தியாவின் 350 சிசி பைக் செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கொடிதான் உயர பறக்கிறது. யமஹா ஆர்டி 350 பைக் மீண்டும் வந்தால், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஆதிக்கம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக பைக் நிறுவனங்கள் பெயர் பதிவிற்கு விண்ணப்பம் செய்கிறது என்றால், அந்த பெயரில் நிச்சயமாக ஒரு பைக் வரும் என கூறி விட முடியாது. வந்தாலும் வரலாம். வராமலும் போகலாம். முன் கூட்டியே அவை பெயரை பதிவு செய்து வைத்து விடுகின்றன. அவ்வளவுதான்.
எனவே ஆர்இஸட் 350 என்ற பெயரில் யமஹா நிறுவனம் புதிய பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை இந்த பெயரில், யமஹா ஆர்டி 350 பைக் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டால், அது நிச்சயமாக இந்திய வாடிக்கையாளர்களின் ஏகோபித்த வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை. (இந்த செய்தியில் நாங்கள் பயன்படுத்தியிருப்பது ப்ளூ ஸ்மோக் கஸ்டம்-ன் புகைப்படமாகும்).


Click it and Unblock the Notifications









