நம்ம சென்னை பசங்க செம்ம ஹாப்பி!! டிராக்கில் பைக் ஓட்ட விட்டால் யாருக்கு தாங்க குஷி இருக்காது!
சென்னை சர்வதேச மோட்டார் பந்தய களத்தில் யமஹா நிறுவனம் அதன் டிராக் டே நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளது. யமஹா பைக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள இந்த நிகழ்வு குறித்தும், இதில் கலந்துக் கொண்ட யமஹா பைக் உரிமையாளர்கள் குறித்தும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் பலர் விரும்பக்கூடிய பைக் பிராண்ட்களுள் ஒன்றாக யமஹா விளங்குகிறது. இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளில் பலருக்கு பரீட்சையமான பைக் நிறுவனம் யமஹா ஆகும். மிக நீண்ட கால வரலாற்றை கொண்ட இந்த ஜப்பானிய நிறுவனம் இந்த நீண்ட காலத்தை அவ்வளவு எளிதாக கடந்துவரவில்லை. பல்வேறு ஏற்ற, இறக்கங்களுக்கு பின்பே இந்த நிலையை எட்டியுள்ளது.

இத்தனை வருட காலத்தில் நிறைய விஷயங்களை யமஹா கற்றுக் கொண்டுள்ளது. அதில் ஒன்று, டிராக் டே நிகழ்வாகும். யமஹா பைக்குகள் பிரீமியம் தரத்திலானவை மற்றும் அதற்கு ஏற்ப செயல்படுதிறன்மிக்கவை ஆகும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், விரைவுச்சாலைகளில் கூட அவற்றின் முழு செயல்படுதிறனை நாம் உபயோகிப்பது இல்லை. அதாவது, உபயோகிப்பதற்கு நமக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
அந்த வாய்ப்பை, டிராக்கில் ஏற்படுத்தி கொடுக்கும் விதமாகவே டிராக் டே என்ற நிகழ்ச்சியை கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து யமஹா நடத்தி வருகிறது. "தி கால் ஆஃப் தி ப்ளூ" பிராண்ட் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சியை யமஹா நடத்தி வருகிறது. இந்தியாவில் யமஹாவின் டிராக் டே நிகழ்ச்சி முதல்முறையாக சென்னையில் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்தப்பட்டது.

அதன்பின், கோயம்புத்தூரிலும் டிராக் டே -ஐ நடத்திய யமஹா நிறுவனம் அதன்பின் நேரடியாக இந்தியாவின் வடக்கே டெல்லிக்கு அருகே கிரேட்டர் நொய்டாவில் டிராக் டே நிகழ்ச்சியை நடத்தியது. நொய்டாவில் அமைந்துள்ள புத் சர்வதேச மோட்டார் பந்தய களத்தில் நடந்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பெங்களூரில் யமஹாவின் டிராக் டே நடத்தப்பட்டது. கடந்த டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட இதுதான் 2022இல் நடந்த யமஹாவின் கடைசி டிராக் டே ஆகும்.
அதன்பின் 2023இல் கோயம்புத்தூரில் இருந்து டிராக் டே நிகழ்ச்சியை யமஹா துவங்கியது. கோயம்புத்தூரை தொடர்ந்து சென்னையில் கிட்டத்தட்ட 1.5 வருடத்திற்கு பிறகு யமஹாவின் டிராக் டே நடத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகே காஞ்சிப்புரம் மாவட்டத்தின் மேவளூர் குப்பத்தில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு எதிரே அமைந்துள்ள சர்வதேச மோட்டார் வாகன பந்தய களமான மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

2023 சென்னை யமஹா டிராக் டே நிகழ்ச்சியில் மொத்தம் 300 யமஹா ஒய்.இசட்.எஃப்-ஆர்15, எம்டி-15 மற்றும் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், சென்னை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களை சேர்ந்த 1000க்கும் அதிகமான யமஹா பைக் ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியை காண கலந்து கொண்டனர். டிராக்கில் தங்களது யமஹா பைக்குகளை இயக்கி பார்க்க, பெயர்களை பதிவு செய்தோர், நேர்த்தியான பந்தய கள சாலையில் பைக்குகளை இயக்கி பார்த்து மகிழ்ந்தனர்.
குறிப்பாக, தங்களின் யமஹா பைக்கின் லீன் ஆங்கிள்கள், வளைவுகளில் அதிவேகமாக திரும்பும் திறன் மற்றும் துல்லியமான பிரேக்கிங் போன்றவற்றை ஆராய்ந்து பார்த்ததோடு, அதிவேக இயங்கும்போது தங்களது உடல் அசைவுகளை எவ்வாறு மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் கற்று கொண்டனர். மூடிய பரப்பிற்குள் இதையெல்லாம் செய்து பார்த்தாலும், விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதால் டிராக்கில் பைக்குகளை சோதித்து பார்க்கும் முன்னதாக ரைடர்களுக்கு அனைத்து விதமான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

அத்துடன், பாதுகாப்பு உபகரணங்களும் யமஹா சார்பில் வழங்கப்பட்டது. யமஹா பைக்குகளில் குயிக் ஷிஃப்டர்கள் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டங்களின் பயன் என்ன என்பதை இந்த டிராக் டே மூலமாக தெரிந்துக் கொண்டதாக பங்கேற்ற ரைடர்கள் தெரிவித்துள்ளனர். 2023 சென்னை டிராக் டே நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விரைவில் யமஹாவின் அதிகாரப்பூர்வ இந்திய இணையத்தள பக்கத்தில் காணலாம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: யமஹா மேற்கொள்ளும் சிறப்பான நடவடிக்கைகளில் ஒன்று டிராக் டே எனலாம். குறிப்பாக, சென்னை மாநகரங்களில் வாழ்வோருக்கு தங்களது பைக்குகளின் முழு செயல்படுதிறனையும் காண பெரும்பாலான நேரங்களில் வாய்ப்பு கிடைப்பதில்லை. அத்தகைய நிலையில் இருப்பவர்கள் சில மணிநேரத்திற்கு ஜாலியாக டிராக்கில் தங்களது யமஹா பைக்கை ஓட்டி பார்க்க டிராக் டே ஓர் அருமையான வாய்ப்பாகும். அத்துடன், யமஹா நிறுவனத்துக்கும் கஸ்டமர்கள் உடனான பிணைப்பு வலுப்பெறும்.


Click it and Unblock the Notifications









