யுலு பிராண்டில் இரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! எடை ரொம்ப குறைவு... டெலிவிரிகளுக்கு பயன்படுத்தலாம்!
இந்தியாவின் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான யுலு அதன் இரு புதிய எலக்ட்ரிக் 2-வீலர்களை மிராக்கிள் ஜிஆர் (Miracle GR) மற்றும் டெக்ஸ் ஜிஆர் (DeX GR) என்கிற பெயர்களில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யுலு நிறுவனம் இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ உடன் கூட்டணியில் உள்ளது. இந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் தான் தற்போது புதியதாக மிராக்கிள் ஜிஆர் மற்றும் டெக்ஸ் ஜிஆர் என்ற இரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் புதிய பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் லாஸ்ட்-மைல் மொபைலிட்டி பணிகளுக்கும், டெலிவிரி பணிகளுக்கும் ஏற்றவையாக இருக்கும். முற்றிலும் இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டு உருவாக்கப்படுவதால், இந்த இரு யுலு ஸ்கூட்டர்களும் இந்திய மக்களின் தேவைகளுக்கும், நம் நாட்டு காலநிலை மற்றும் தரத்திற்கும் ஏற்றவைகளாக இருக்கும்.
யுலு நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) தொழிற்நுட்பம் இந்த ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வழக்கம்போல் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் பஜாஜ் ஆட்டோவின் சாகான் தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்பட உள்ளன. இந்த இரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுகம் குறித்து யுலு நிறுவனத்தின் சிஇஓ-வும், துணை நிறுவனருமான அமித் குப்தா கருத்து தெரிவிக்கையில், "மொபைலிட்டியின் தேவைகளும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளும் வேகமாக மாறி வருகின்றன.
ஓர் குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான வாகனங்களும், அதிக ஆற்றல் கட்டமைப்பும் போதுமான அளவிற்கான நீண்ட கால மதிப்பை உருவாக்குகின்றன" என்றார். யுலு ஆனது ஓர் மொபைல் தொழிற்நுட்ப நிறுவனம் என்று ஏற்கனவே கூறிவிட்டோம், பஜாஜ் ஆட்டோ ஆனது இந்தியாவின் முன்னணி 2-வீலர் பிராண்ட் இவ்வாறான இரு நிறுவனங்களுக்கு இடையே கூட்டணி ஏற்பட்டு இருப்பது உலகளவில் இதுதான் முதல்முறை என கூறப்படுகிறது.

இந்த கூட்டணியின் முக்கிய நோக்கமே அட்வான்ஸ்டு மாடர்ன் தொழிற்நுட்பங்கள் மூலம் பாதுகாப்பான எலக்ட்ரிக் வாகனங்களை வழங்க வேண்டும் என்பதாகும். இந்தியாவின் முக்கிய நகரங்களின் சாலைகளில் இத்தகைய எலக்ட்ரிக் வாகனங்களை குறைந்தது 1 லட்சம் யூனிட்கள் ஆவது வழங்கும் நோக்கத்தில் யுலு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அத்துடன் இந்த வருடத்திற்கு உள்ளாக வழக்கத்தை காட்டிலும் 10 மடங்கு அதிக வருவாயை ஈட்டும் நிலைக்கு சென்றுவிடவும் யுலு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
யுலு நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு சுழற்சி முறையிலான பேட்டரி சேவையை யுமா எனர்ஜி என்ற நிறுவனத்துடன் இணைந்து வழங்கி வருகிறது. இந்த சேவையின் மூலமாக யுலு வாடிக்கையாளர்கள் தங்களது பேட்டரிகளை சார்ஜ் செய்ய தேவை இல்லை, அதற்கு பதிலாக சார்ஜ் காலியான பேட்டரியை கொடுத்துவிட்டு, சார்ஜ் நிரம்பிய பேட்டரியை கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம்.
யுமா நிலையங்கள் எனப்படும் யுலு நிறுவனத்தின் இந்த பேட்டரி ஸ்வாப்பிங் மையங்கள் தற்சமயம் நமது சென்னையில் இல்லை, பெங்களூர், மும்பை மற்றும் டெல்லி நகரங்களில் மட்டுமே உள்ளன. இந்த மையங்களை கடந்த 3 மாதங்களில் இரட்டிப்பாக அதிகரித்து இருக்கும் யுலு நிறுவனம் 2024ஆம் ஆண்டில் இந்த மையங்களின் எண்ணிக்கையை 500 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








