அமெரிக்காவில் விற்கப்படும் இந்த எலெக்ட்ரிக் பைக் விரைவில் இந்தியாவிலும் கிடைக்கப்போகுது! ஹீரோவுக்கு நன்றி!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்கள் சிலவற்றுடன் இணைந்து, அந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றது. உதாரணமாக, உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹார்லி டேவிட்சன் (Harley Davidson) உடன் ஹீரோ மோட்டோகார்ப் இணைந்திருக்கின்றது.
இதன் இணைவில் உருவாக்கப்பட்ட முதல் ஹார்லி டேவிட்சன் பைக் சமீபத்திலேயே இந்தியாவில் விற்பனைக்கு வெளியீடு செய்யப்பட்டது. எக்ஸ்440 (X440) மாடலே இரு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த நிலையில், இந்திய இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் மற்றுமொரு நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜீரோ மோட்டோசைக்கிள்ஸ் (Zero Motorcycles) எனும் நிறுவனத்துடனேயே ஹீரோ இணைந்திருக்கின்றது. இது ஓர் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். உயர் செயல்திறன் கொண்ட எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பதில் பெயர்போன நிறுவனமே இது ஆகும். இந்த நிறுவனத்தின் இ-பைக் தயாரிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியாகவே ஜீரோ மோட்டோர்சைக்கிள்ஸ் உடன் ஹீரோ இணைந்திருக்கின்றது.
ஜீரோ மோட்டார்சைக்கிள் ஓர் கலிஃபோர்னியாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏற்கனவே ஹீரோ மோட்டோகார்ப் விடா எனும் பிராண்டின்கீழ் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையை மேற்கொண்டு வருகின்றது. இதுதவிர, ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் 35 சதவீத பங்கினையும் இந்த நிறுவனம் தன் வசம் வைத்திருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே நிறுவனம் சென்ற ஆண்டின் இறுதியில் ஜீரோ மோட்டோர்சைக்கிள்ஸ் நிறுவனத்தில் 60 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தது. சுமார் 491 கோடி ரூபாயையே ஹீரோ மோட்டோகார்ப் முதலீடு செய்திருக்கின்றது. இந்த நிலையிலேயே ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் தன்னுடைய வருடாந்திர அறிக்கை வாயிலாக உறுதி செய்து உள்ளது. இது இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஏற்கனவே எலெக்ட்ரிக் பைக் பிரிவில் செயல்பட்டு வரும் கபிரா, ரிவோல்ட் மற்றும் ஆடம் உள்ளிட்ட எலெக்ட்ரிக் பைக் உற்பத்தி நிறுவனங்களுக்கு போட்டியாக அமையும்.

உலக தரம் வாய்ந்த எலெக்ட்ரிக் பைக்குகளாகவே நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் இருக்கின்றன. உதாரணமாக நிறுவனத்தின் ஜீரோ எஸ்ஆர்/எஸ் எலெக்ட்ரிக் பைக் இருக்கின்றது. இதில் பொருத்தப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 110 எச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
இத்துடன், இந்த இ-பைக்கில் 7.2 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றார். இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 301 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 200 கிமீ ஆகும். இத்தகைய சூப்பரான மற்றும் தரமான எலெக்ட்ரிக் பைக்குகளையே நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கின்றது.
இவையே விரைவில் இந்தியாவில் கால் தடம் பதிக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், இவை எப்போது விற்பனைக்கு வரும்? என்ன மாதிரியான விலையில் விற்பனைக்கு வரும்? இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைச் செய்யப்படுமா அல்லது உள் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுமா என்பது போன்ற எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் இ-வாகனங்களுக்கான தேவை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆகையால், ஜீரோவின் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு வரும் எனில் அது அமோக வரவேற்பை நாட்டில் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக மிகப் பெரிய டீலர் வலையமைப்பை ஹீரோ மோட்டோகார்ப் கொண்டிருக்கின்றது. இந்த ஒன்றே ஜீரோவை இந்தியாவில் ஹீரோவாக மாற்ற போதுமானது ஆகும்.


Click it and Unblock the Notifications









