ஆக்டிவா, ஓலா ரெண்டு பேரும் ஓரமா போங்க.. பெரும் சோதனைகளை கடந்து விற்பனைக்கு வரும் ஆம்பியர் இ-ஸ்கூட்டர்!
இந்தியாவின் மின்சார இருசக்கர வாகன பிரிவில் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் முன்னணி நிறுவனங்களில் ஆம்பியர் (Ampere)ம் ஒன்றாகும். இந்த நிறுவனமே வெகுவிரைவில் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாகவும், அந்த வாகனத்தை தற்போது மிகப் பெரிய சோதனைக்கு உட்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஆம்பியர் (Ampere), விரைவில் நாட்டில் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. என்எக்ஸ்ஜி (NXG) எனும் அசத்தலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இந்த ஸ்கூட்டரையே டெஸ்ட்டிங் செய்யும் பணிகளை ஆம்பியர் நிறுவனம் தொடங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையில் காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையில் சுமார் 1,500 கி.மீ., தூர பயணத்தை அது தொடங்கி இருக்கின்றது. இந்தியாவின் அனைத்து விதமான நிலபரப்புகள் மற்றும் சாலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்டதே இந்த வாகனம் என்பதை நிரூபிக்கும் பொருட்டே இந்த நெடுந்தூர பயணத்தில் புதுமுக ஸ்கூட்டர் ஈடுபடுத்தப்படுகின்றது.
இதற்கான பயணத்தை அந்த வாகனம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. சமீபத்திலேயே கொடியசைத்து அந்த வாகனத்தை ஆம்பியர் நிறுவனம் புறப்பட செய்தது. வெகுவிரைவில் இந்த நெடுந்தூர பயணத்தை ஆம்பியரின் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறைவுற செய்ய இருக்கின்றது. 45 நாட்களில் இந்த முழு நீள பயணத்தையும் நிறைவு செய்துவிடும் என ஆம்பியர் கூறி இருக்கின்றது.

மேலும், இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் இந்த வாகனம் மிகப் பெரிய புரட்சியைச் செய்யும் என நிறுவனம் கருத்து தெரிவித்து இருக்கின்றது. இதற்கேற்ப நிறுவனம் இந்த இ-ஸ்கூட்டரில் அதிக சிறப்புகள் நிறைந்ததாக உருவாக்கி இருக்கின்றது. முக்கியமாக நவீன கால அம்சங்கள் பல வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஆனால், அவற்றின் விபரங்களை ஆம்பியர் வெளியிடவில்லை. அறிமுகத்தை முன்னிட்டு அதுபற்றிய விபரஙக்ளை நிறுவனம் விரிவாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், உயர் செயல்திறன், மாடர்ன் லுக் மற்றும் ஃபேமிலிக்கான வாகனம் என அனைத்திற்குமான டூ-வீலராக இந்த புதுமுக இ-ஸ்கூட்டர் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

நிறுவனம் இதன் வீலிலும் புதிய புரட்சியைச் செய்திருக்கின்றது. ஸ்டைல் மற்றும் ஸ்பீடு என இரண்டிற்குமான வீலாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், தொடுதிரை நவீன வசதிகளை வாரி வழங்கும் வகையில் இந்த வாகனத்தில் வழங்கி இருப்பதாக ஆம்பியர் தெரிவித்து இருக்கின்றது.
இந்த திரை வாயிலாக தடையில்லா நேவிகேஷன் மற்றும் இணைப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இது ரைடிங் அனுபவத்தை மேலும் பன்மடங்கு மேம்படுத்தும். ஆம்பியர் நிறுவனம் ஸ்கூட்டரின் நவீன அம்சங்களை நெக்ஸ்ஐஓ மற்றும் நெக்ஸ்.ஆர்மர் என வகைப்படுத்தி இருக்கின்றது. இவை உள்நாட்டிலேயே வைத்து தயார் செய்யப்பட்ட சொந்த தயாரிப்புகள் ஆகும்.

நெக்ஸ்.ஐஓ, கிளஸ்டரின் மூளையாகவும், மென் பொருளாகவும் செயல்படும். நெக்ஸ்.ஆர்மர் ஸ்கூட்டரின் ஃப்ரேம், மோட்டார், பேட்டரி மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றைக் குறிக்கும். மேலும், இந்த வாகனத்தை ஆர்க்டிக் டெர்ன்-ஐ தழுவியே ஆம்பியர் வடிவமைத்து இருக்கின்றது. இந்தியர்களின் பிரியமான ஸ்கூட்டர் மாடலான ஆக்டிவாவை பிரதிபலிக்கும் வகையிலும் இதன் லுக் இருக்கின்றது.
ஆகையால் இந்த வாகனத்தின் வருகை ஆக்டிவாவிற்கு லேசாக தலைவலியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில் இளம் தலைமுறையினரின் மனதைக் கவரக் கூடிய டிசைன் தாத்பரியங்களையே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தி இருப்பதாக ஆம்பியர் தெரிவித்து இருக்கின்றது. ஆகையால், இன்றைய கால இளம் தலைமுறையினரைக் கட்டாயம் இந்த வாகனம் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆம்பியரின் இந்த புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன் பதிவு பணிகள் நாட்டில் ஏற்கனவே தொடங்கிவிட்டன. விரைவில் இது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதை முன்னிட்டு இந்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன் விலை ரூ. 1.20 லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









