ஓசூரில் தயாரிக்கப்படும் ஸ்கூட்டர்களுக்கு இவ்வளவு கிராக்கியா... கடல் கடந்து இந்தியாவை பெருமை படுத்த போகுது!!
ஏத்தர் எனர்ஜி (Ather Energy), பெங்களூரை சேர்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனம். எதிர்காலத்தில் எலக்ட்ரிக் பைக்குகளையும் உற்பத்தி செய்யும் யோசனையை வைத்துள்ளது. தற்போதைக்கு இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக உள்ளது. இந்த நிலையில், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவை தாண்டி வேறொரு வெளிநாட்டில் தனது வணிகத்தை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது. எந்த நாடு அது? அந்த நாட்டிற்காக என்னென்ன திட்டங்களை ஏத்தர் எனர்ஜி வைத்துள்ளது? என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் நீண்ட வருடங்களாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் ஈடுப்பட்டுவரும் நிறுவனங்களுள் ஒன்று ஏத்தர் எனர்ஜி ஆகும். இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான மார்க்கெட் பெரியதாக இல்லாத சமயத்திலேயே பவர்ஃபுல்லான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏத்தர் நிறுவனம் விற்பனை செய்ய ஆரம்பித்தது. சமீபத்தில்தான், பட்ஜெட் விலையிலான ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏத்தர் அறிமுகப்படுத்தியது.

இந்தியாவில் 208 டீலர்ஷிப் ஷோரூம்களையும், சுமார் 1973 பகுதிகளில் ஃபாஸ்ட்-சார்ஜிங் வசதிகளையும் ஏத்தர் எனர்ஜி கொண்டுள்ளது. இவ்வாறு சொந்த நாட்டில் ஓரளவிற்கு சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க்கை விரிவுப்படுத்தியுள்ள ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கடந்த 2023 நவம்பர் மாதத்தில் முதல்முறையாக இந்தியாவை தாண்டி முதல் வெளிநாடாக நேபாளத்தில் வணிகத்தை துவங்கியது.
இந்த நிலையில், 2வது சர்வதேச சந்தையாக இலங்கையில் ஏத்தர் எனர்ஜி அதன் மார்க்கெட்டை விரிவுப்படுத்த உள்ளது. இதுகுறித்து ஏத்தர் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எவால்யூஷன் ஆட்டோ என்கிற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் முதல் டீலர்ஷிப் ஷோரூமை இந்த 2024ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக திறக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாட்டில் ஏத்தர் எனர்ஜியின் சேல்ஸ் & சர்வீஸ்களை எவால்யூஷன் ஆட்டோ நிறுவனம் தான் கவனித்துக் கொள்ள உள்ளது. இந்த எவால்யூஷன் ஆட்டோ நிறுவனம் ஆனது இலங்கை நாட்டில் சென்சே கேபிட்டல் பார்ட்னர்ஸ், அட்மன் க்ரூப் மற்றும் சினோ லங்கா உள்ளிட்ட நிறுவனங்களின் கூட்டணியில் உருவான தனியார் நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனத்தின் உதவியுடன் சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க்கை உருவாக்குவது மட்டுமின்றி, இலங்கையில் ஃபாஸ்ட்-சார்ஜிங் நெட்வொர்க்கை விரைவாக விரிவுப்படுத்தவும் ஏத்தர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் முதன்மை வணிக அதிகாரி ரவ்னீட் சிங் போகேலா கூறுகையில், "இலங்கை சந்தைக்குள் நுழைவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

நேபாளத்திற்கு பின்னர் இலங்கையானது எங்களது உலகளாவிய விரிவாக்க திட்டங்களில் ஒரு அங்கமாக உள்ளது. பெட்ரோல் வாகனங்களின் விலை அதிகரிப்பு மற்றும் மின்சார வாகனங்களின் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் ஆகியவற்றுடன், இலங்கை சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக விருப்பம் காட்டப்பட்டுள்ளது. ஏத்தரின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அவற்றின் செயல்திறன், வடிவமைப்பு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றிற்காக அறியப்படுகின்றன.
இதன் மூலம், தரமான நவீன தயாரிப்புகளை பாராட்டும் இலங்கை வாடிக்கையாளர்களை கவரும் நோக்கத்தை நாங்கள் கொண்டுள்ளோம். எவால்யூஷன் ஆட்டோ பிரைவேட் லிமிடெட் உடனான எங்கள் கூட்டணி ஆனது, இலங்கையில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏத்தரின் வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்க எங்களுக்கு உதவும். அதேநேரத்தில், எலக்ட்ரிக் வாகன பயனர்களுக்கு பெரிய நெட்வொர்க்கில் சார்ஜிங் வசதியை வழங்குவதில் கவனம் செலுத்தும்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெங்களூரில் ஒரு இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக தோன்றி, இன்று 3 நாடுகளில் சந்தையை கொண்டிருப்பது எல்லாம் ஏத்தர் எனர்ஜியின் சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். நிச்சயமாக இத்தோடு ஏத்தர் நிறுவனம் நிற்க போவதில்லை. அடுத்தடுத்து, வேறு வேறு நாடுகளில் நெட்வொர்க்கை விரிவுப்படுத்த உள்ளது. இதில் இருந்து, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகரித்துவரும் தேவையை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









