இலவு காத்த கிளி மாதிரி ஆயிடுச்சே கடைசியில்... மஹாராஷ்டிராவுக்கு அடித்த ஜாக்பாட்!!
ஏத்தர் எனர்ஜி (Ather Energy), இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் என்றால் அது மிகையில்லை. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டாலும், கர்நாடகாவில் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்துக்கு தொழிற்சாலை இல்லை. தமிழ்நாட்டில் ஓசூரில் தான் இரு தொழிற்சாலைகளை கொண்டுள்ளது. இந்த நிலையில் 3வது தொழிற்சாலையை நிறுவும் பணிகளில் ஏத்தர் எனர்ஜி ஈடுப்பட்டு வருகிறது. இந்த 3வது தொழிற்சாலையாவது கர்நாடகாவில் அமையுமா என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. கர்நாடக அரசியல்வாதிகள், ஏத்தர் எனர்ஜி தனது புதிய தொழிற்சாலையை சொந்த மாநிலமான கர்நாடகாவில் திறக்க வேண்டும் என தங்களது ஆதங்கத்தை நேரடியாக வெளிப்படுத்துவதை கூட பார்க்க முடிந்தது.
கர்நாடக மாநில பாஜக எம்.எல்.ஏ ஒருவர், ஏத்தர் எனர்ஜி கர்நாடகாவில் ஹூப்ளி அல்லது தார்வாட் பகுதியில் தனது தொழிற்சாலையை நிறுவலாம் என பரிந்துரை செய்தார். கர்நாடக தொழில்வள துறை அமைச்சர் ஏத்தர் எனர்ஜியின் புதிய தொழிற்சாலையை கர்நாடகாவில் அமைக்க தொடர்ந்து வேண்டுக்கோள் விடுத்து வருவதாகவும் கூறியிருந்தார்.

ஆனால் கர்நாடக மாநில அரசின் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. ஏனெனில், ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் துணை நிறுவனர் ஸ்வப்னில் ஜெயின் புதிய தொழிற்சாலைக்காக மஹாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதனால், ஏத்தர் எனர்ஜியின் 3வது தொழிற்சாலை மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைய உள்ளது உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மஹாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் பிட்கின் என்கிற பகுதியில் புதிய தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை துறைமுகத்தில் இருந்து இந்த பிட்கின் பகுதி ஆனது ஏறக்குறைய 350கிமீ தொலைவில் உள்ளது. இந்த புதிய தொழிற்சாலையில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மற்றும் அவற்றிற்கான பேட்டரிகளை உற்பத்தி செய்ய உள்ளதாக ஏத்தர் எனர்ஜி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மஹாராஷ்டிரா மாநில துணை முதல்வர் திரு. தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், "மஹாராஷ்டிரா ஒரு சாதகமான வணிக சூழலை வழங்குகிறது மற்றும் முதலீடுகளுக்கான சிறந்த இடமாக தொடர்கிறது. இது நமது மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடிஜியின் பார்வை இந்தியாவின் ஸ்டார்ட்-அப் மற்றும் உற்பத்தி சூழலை வலுப்படுத்தி, உலகளாவிய போட்டியாளர்களுக்கு இணையாக அல்லது அவர்களை மிஞ்சுவதை நோக்கமாக கொண்டுள்ளதை காட்டுகிறது.
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி மையமாக மாநிலத்தின் நிலையை உறுதிப்படுத்தும் வகையில், மஹாராஷ்டிராவில் ஏத்தரை வைத்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார். தற்சமயம், ஏத்தர் எனர்ஜி நிறுவனத்துக்கு 200க்கும் அதிகமாக டீலர்ஷிப் ஷோரூம் மையங்கள் மற்றும் 1900க்கும் அதிகமான ஏத்தர் கிரிட் எனப்படும் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் நாடு முழுவதும் உள்ளன.

ஏத்தர் எனர்ஜியின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் செயல்திறன்மிக்கவை ஆக விளங்குகின்றன. இந்த நிறுவனத்தில் இருந்து 450எக்ஸ், 450எஸ் மற்றும் 450 அபெக்ஸ் போன்ற பெர்ஃபார்மன்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் ரிஸ்டா என்கிற பெயரில் விலை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
ஏத்தர் ரிஸ்டாவின் அறிமுகத்திற்கு பிறகு ஏத்தர் எனர்ஜியின் உற்பத்தி பணிகள் அதிகரிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, 3வது தொழிற்சாலையை நிறுவும் திட்டத்தில் ஏத்தர் எனர்ஜி இறங்கியது. ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள 2.9kWh பேட்டரி ஆனது அதிகப்பட்சமாக 123கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கக்கூடியதாக உள்ளது. ரிஸ்டாவின் மற்றொரு வேரியண்ட்டில் 3.7kWh பேட்டரி கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏத்தர் எனர்ஜியின் 3வது தொழிற்சாலை மஹாராஷ்டிராவில் அமையலாம் என கடந்த சில வாரங்களாகவே செய்திகள் உலாவி கொண்டிருந்தன. இதற்கு பயந்துதான் கர்நாடக அரசியல்வாதிகள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் காட்டினர். ஆனால் கடைசியில் அவர்கள் பயந்ததை போல் ஏத்தர் எனர்ஜியின் புதிய தொழிற்சாலை மஹாராஷ்டிராவில் அமைய உள்ளது.


Click it and Unblock the Notifications









