கடல் கடந்து இந்தியாவை பெருமை படுத்தும் ஸ்கூட்டர் நிறுவனம்! எல்லா பக்கமும் கொடி பறக்குதா!!
ஏத்தர் எனர்ஜி (Ather Energy), பெங்களூரை சேர்ந்த முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம். குறிப்பாக, செயல்திறன்மிக்க மற்றும் வேகமாக இயங்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்ததாக ஏத்தர் எனர்ஜி உள்ளது. 'ஏத்தர் 450' எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது அதற்கு சான்றாகும். 450 ஸ்கூட்டர் மூலமாக மார்க்கெட்டில் தனக்கான ஒரு இடத்தை பிடித்த ஏத்தர் நிறுவனம், இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் தனது வாகனங்களை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, நம் அண்டை நாடு ஒன்றில் தனது முதல் ஷோரூமை ஏத்தர் திறந்துள்ளது. அதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவின் மென்பொருள் தலைநகராக விளங்கும் பெங்களூரில் இருந்து பல்வேறு இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கடந்த காலங்களில் இருந்து மார்க்கெட்டிற்கு வந்துள்ளன. அவ்வாறு 2018ஆம் ஆண்டில் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது. அதன்பின் 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.

அதன் பின்பு 2021இல் ஏத்தர் நிறுவனத்தின் மிக முக்கியமான மைல்கல்லாக, தமிழ்நாட்டின் ஓசூரில் நிறுவப்பட்ட தொழிற்சாலையில் ஏத்தர் ஸ்கூட்டர் உற்பத்தி பணிகள் துவங்கப்பட்டன. அதனை தொடர்ந்து, அடுத்தடுத்த வருடங்களில் 450எஸ் மற்றும் ரிஸ்டா என கொஞ்சம் விலை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய ஏத்தர் எனர்ஜி ஆரம்பித்தது. இதற்கிடையில், இந்தியாவின் அண்டை நாடுகளிலும் ஏத்தரின் கவனம் விழுந்தது.
அதன் விளைவாக, நேபாளத்தில் ஷோரூம்களை திறக்க ஆரம்பித்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம், அந்த நாட்டில் மொத்தம் 5 ஷோரூம்களையும், 16 ஏத்தர் கிரிட் ஃபாஸ்ட்-சார்ஜிங் நிலையங்களையும் கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து இலங்கையிலும் ஏத்தர் தனது கால் தடத்தை பதிக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி, இலங்கையில் தனது முதல் ஷோரூமை நாட்டின் தலைநகர் கொழும்புவில் தற்போது திறந்துள்ளது.

ஏத்தர் நிறுவனம் அதன் எக்ஸ்பிரியன்ஸ் ஷோரூம்களை 'ஏத்தர் ஸ்பேஸ்' என்கிற பெயரில் அழைக்கிறது. இலங்கையில் திறக்கப்பட்டுள்ள ஏத்தர் ஸ்பேஸ் மையம் மூலமாக அங்குள்ள மக்கள் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெஸ்ட் ரைடு செய்து பார்த்து வாங்கலாம். தற்போதைக்கு இலங்கையில் ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.
எவால்யூஷன் ஆட்டோ என்கிற பிரைவேட் நிறுவனத்தின் உதவியுடன் இந்த ஷோரூமை ஏத்தர் நிறுவனம் இலங்கையில் நிறுவி உள்ளது. இந்த எவால்யூஷன் ஆட்டோ ஆனது இலங்கையில் செயல்படும் அட்மன் குழுமத்தின் சென்சாய் கேபிட்டல் பார்ட்னர்ஸ் நிறுவனத்திற்கும், சினோ லாங்கா நிறுவனத்திற்கும் இடையேயான கூட்டணியில் உருவான நிறுவனம் ஆகும். அத்தகைய நிறுவனத்துடன் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏத்தர் எனர்ஜி இணைந்துள்ளது.

இலங்கையில் ஏத்தர் எனர்ஜியின் விநியோகஸ்தரராக எவால்யூஷன் ஆட்டோ செயல்பட உள்ளது. ஆனால், அதற்காக ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்வது, அவற்றிற்கான சர்வீஸ்களை வழங்குவது உள்ளிட்ட வேலைகளில் எவால்யூஷன் ஆட்டோ நிறுவனம் தலையிடாது. இந்த நிறுவனத்தின் பணி என்னவென்றால், இலங்கையில் ஏத்தர் கிரிட் ஃபாஸ்ட்-சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதாகும்.
ஏற்கனவே கூறியதுபோல், நேபாளம் நாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டிலேயே ஏத்தர் நுழைந்துவிட்டது. நேபாளத்தை எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பெரிய மார்க்கெட் என சொல்ல முடியாது. இருப்பினும், கடந்த 1 வருடத்திலேயே அங்கு 5 ஷோரூம்களை திறந்துவிட்டது. நேபாளத்துடன் ஒப்பிடுகையில் இலங்கை கொஞ்சம் பெரிய மார்க்கெட் என்பதால், வரும் மாதங்களில் அடுத்தடுத்த ஷோரூம்களை ஏத்தர் திறக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விரைவான சார்ஜிங் வசதி இருந்தால், மக்கள் நம்பிக்கையாக ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவர். ஆனால், சார்ஜிங் நிலையங்களை நாடு முழுவதும் கொண்டுவருவது கொஞ்சம் சவாலான பணி என்பதால், அதனை இலங்கையை சேர்ந்த எவால்யூஷன் ஆட்டோவிடம் ஏத்தர் நிறுவனம் ஒப்படைத்துள்ளது. இதனால், ஸ்கூட்டர்களுக்கான சேல்ஸ் & சர்வீஸை வழங்கும் வேலையை மட்டும் ஏத்தர் கவனித்தால் போதும்.


Click it and Unblock the Notifications









