கேடிஎம்-க்கு கொடுத்த வெற்றியை எங்களுக்கும் தாங்க.. இந்தியாவை நம்பி வரும் மற்றுமொரு ஆஸ்திரிய டூ-வீலர் பிராண்டு!
ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த மற்றுமொரு இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் அதன் கால் தடத்தைப் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே கேடிஎம் (KTM) எனும் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த முன்னணி மோட்டார்சைக்கிள் பிராண்டு இந்தியாவின் டூ-வீலர் பிரிவில் கொடிக்கட்டி பறந்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மற்றுமொரு ஆஸ்திரியன் பிராண்டும் இந்தியர்களை வளைத்துப் போடும் நோக்கில் அதன் கால் தடத்தைப் பதிப்பதற்கான முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள் (Brixton Motorcycles) எனும் பிராண்டே நம் நாட்டில் கால் தடம் பதிக்க இருக்கின்றது.
நிறுவனம் அதன் வருகையை ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இதுகுறித்த அறிவிப்பை பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள் அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே அந்நிறுவனம் அதன் நான்கு புதிய தயாரிப்புகளுக்கான புக்கிங் பணிகளை சீக்கிரமே தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் முதல் கட்டமாக நான்கு மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. வருகின்ற நவம்பர் மாதமே அவற்றை பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால் விரைவில் இந்த பைக்குகளுக்கான புக்கிங்குகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளையில், இந்த பைக்கிற்கு ஏற்கனவே ரிசர்வேஷன் பணிகள் தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ. 2,999 தொகையிலேயே ரிசர்வேஷன் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தைக்காக இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் கேஏடபிள்யூ வெலாஸ் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் கை கோர்த்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

மேலும், இந்த பைக்கின் உற்பத்தி பணிகள் மஹாராஷ்டிரா மாநிலம் கோலாபூரிலேயே மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள் அதன் புகழ்பெற்ற பைக் மாடல்களான கிராஸ்ஃபையர் (Crossfire) மற்றும் குரோம்வெல் (Cromwell) ஆகிய சீரிஸ்களில் உள்ள மோட்டார்சைக்கிள்களையே முதலில் விற்பனைக்குக் கொண்டு வரும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது.
கிராஸ்ஃபையர் சீரிஸின்கீழ் கிராஸ்ஃபையர் 500எக்ஸ் (Crossfire 500X) மற்றும் கிராஸ்ஃபையர் 500எக்ஸ்சி (Crossfire 500XC) ஆகிய இரண்டு தேர்வுகளும், குரோம்வெல் சீரிஸின்கீழ் குரோம்வெல் 1200 (Cromwell 1200) மற்றும் குரோம்வெல் 1200எக்ஸ் (Cromwell 1200X) ஆகிய தேர்வுகளே விற்பனைக்குக் களமிறக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இதில், முதல் ஒன்று 500 சிசி மோட்டார்சைக்கிள் ஆகும். இரண்டாவது ஒன்று 1200 சிசி இரண்டு சக்கர வாகனம் ஆகும். இந்தியாவில் அதிக சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள் அதன் அதிக சிசி டூ-வீலர்கள் பக்கம் இந்தியர்களை வளைத்துப் போடுவதற்கான முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது.
அதேவேளையில் முதல் கட்டமாக இந்தியாவின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள் விற்பனைக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் நிறுவனம் தேர்வு செய்திருக்கும் நகரங்களின் பட்டியலில் நம்முடைய சென்னையும் இடம்பிடித்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுதவிர, கோயம்பத்தூரும் அதன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளது.
தொடர்ந்து, புனே, மும்பை, நாஷிக், ஹைதராபாத், சூரத், கொச்சின், பெங்களூரு, பஞ்சிம் உள்ளிட்ட நகரங்களிலும் பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வர இருக்கின்றது. மேலும், தன்னுடைய மோட்டார்சைக்கிளின் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த ஆண்டின் இறுதிக்குள் சுமார் 15 புதிய டீலர்ஷிப்புகளை திறக்க பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள் திட்டமிட்டு இருக்கின்றது. மேலும், அடுத்த ஆண்டில் அதை ஐம்பதாகவும் உயர்த்த நிறுவனம் பிளான் போட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேடிஎம் நிறுவனம் ஆரம்பத்தில் இதுபோன்று சிறிய திட்டத்துடனேயே இந்தியாவில் கால் தடம் பதித்தது. இப்போது இந்தியர்களின் மனம் கவர்ந்த பிராண்டுகளில் அதுவும் ஒன்றாக மாறியிருக்கின்றது. இதைபோலேவே பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிளும் வெற்றி வாகையை நாட்டில் சூடுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








