பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
இந்திய சந்தையில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலம் இயங்கும் வாகனங்கள் படிப்படியாக தங்கள் செல்வாக்கை இழந்து வருகின்றன. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் (CNG Vehicles) மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றன.
இந்தியாவின் பஜாஜ் (Bajaj) நிறுவனத்தை பொறுத்தவரையில், டூவீலர் சந்தையில் சேத்தக் (Chetak) என்ற பெயரில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை (Electric Scooter) விற்பனை செய்து வருகிறது. இதை தொடர்ந்து சிஎன்ஜி மூலம் இயங்க கூடிய மோட்டார்சைக்கிள் (Motorcycle) ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இதுதான் பஜாஜ் நிறுவனம் களமிறக்கவுள்ள முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த சிஎன்ஜி மோட்டார்சைக்கிள், அனேகமாக வரும் ஜூன் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சிஎன்ஜி மோட்டார்சைக்கிளில் 110 சிசி இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவுரங்காபாத் (Aurangabad) மற்றும் பண்ட் நகர் (Pant Nagar) ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் பஜாஜ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் இந்த சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் உற்பத்தி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால், ஹைட்ரஜன் (Hydrogen) மூலம் இயங்க கூடிய டூவீலர்களை விற்பனை அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா? என்பதை பஜாஜ் நிறுவனம் தற்போது ஆராய தொடங்கியுள்ளது. எல்லாம் சரியாக சென்றால், சேத்தக் பிராண்டின் கீழ், பஜாஜ் நிறுவனத்தின் ஹைட்ரஜன் டூவீலர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

இது மட்டும் சரியாக நடந்தால், இந்தியாவின் டூவீலர் சந்தையில் ஹைட்ரஜன் இன்ஜினை அறிமுகம் செய்த முதல் நிறுவனம் என்ற பெருமையை பஜாஜ் பெறும். பஜாஜின் துணை நிறுவனங்களில் ஒன்றான சிடிஎல் (CTL) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஆபிரஹாம் ஜோசப் (Abraham Joseph) சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். சேத்தக் டெக்னாலஜி லிமிடெட் (Chetak Technology Ltd) என்பதுதான் சுருக்கமாக சிடிஎல் என அழைக்கப்படுகிறது. இந்த நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்தியின் மூலம்தான், ஹைட்ரஜன் டூவீலர்களை களமிறக்குவதற்கான சாத்திய கூறுகளை பஜாஜ் நிறுவனம் ஆராய தொடங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
''இந்திய சந்தையில் ஹைட்ரஜன் டூவீலர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான சாத்திய கூறுகளை சிடிஎல் நிறுவனம் ஆராயும்'' என பஜாஜ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை ஆதரிப்பவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் இந்த தகவல் பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹைட்ரஜன் மூலம் இயங்க கூடிய வாகனங்கள், சுற்றுச்சூழலுக்கு நட்பானவை. ஏனெனில் அவை தீங்கு விளைவிக்கும் வாயுக்களை உமிழாது. அதேபோல் எரிபொருள் நிரப்புவதற்கு அதிக நேரம் ஆகாது என்பதும் இதன் மிகவும் முக்கியமான சிறப்பம்சம். அதாவது பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக கருதப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய அதிக நேரம் ஆகும்.
இது எலெக்ட்ரிக் வாகனங்களின் மிகப்பெரிய மைனஸ். ஆனால் ஹைட்ரஜன் வாகனங்களுக்கு 3-5 நிமிடங்களில் எரிபொருள் நிரப்பி விட முடியும். எனவே பஜாஜ் நிறுவனம் இந்திய சந்தையில் ஹைட்ரஜன் டூவீலர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தால், நல்ல வரவேற்பை பெறும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








