குடும்பத்துடன் ஜாலியா டெலிவிரி பெற்றார்... இந்தியாவிலேயே இவர்தான் முதல் ஆள்!! நீங்களும் புக் பண்ணலாம்!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் இந்தியாவின் முதல் சிஎன்ஜி பைக்கை ஃப்ரீடம் 125 (Freedom 125) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். ஏனெனில், இந்திய ஆட்டோமொபைல் துறையில் எந்த பக்கம் திரும்பினாலும் பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கை பற்றி தான் பேச்சாக உள்ளது. இருப்பினும், ஜூலை 5ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவின் இந்த முதல் சிஎன்ஜி பைக்கிற்கான முன்பதிவுகள் மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மட்டுமே முதற்கட்டமாக துவங்கப்பட்டன.
இந்த நிலையில் ஃப்ரீடம் 125 பைக்கிற்கான முன்பதிவுகள் இந்தியா முழுவதும் துவங்கப்படுவதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இதன்படி, ஆன்லைனிலும், பஜாஜின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம் மையங்களிலும் இந்த சிஎன்ஜி பைக்கை விருப்பப்படுவோர் முன்பதிவு செய்யலாம். இந்திய அளவில் இந்த பைக்கிற்கான முன்பதிவுகள் இந்த ஜூலை மாத இறுதியில் அல்லது அடுத்த ஆகஸ்ட் மாதத்தில்தான் துவங்கப்படும் என எதிர்பார்த்தோம்.

ஆனால், எதிர்பார்த்ததை காட்டிலும் விரைவாகவே புக்கிங் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக பஜாஜ் நிறுவனம் கூறுவது என்னவென்றால், ஃப்ரீடம் 125 பைக் மக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளதாம். தற்போதுவரையில் மட்டுமே 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஃப்ரீடம் 125 பைக் குறித்து வினாவியுள்ளதாகவும், இந்த பைக்கை பெறுவதில் ஆர்வமாக உள்ளதாகவும் பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகவே, சூட்டோடு சூடாக புக்கிங்கை நாடு தழுவிய அளவில் ஏற்க பஜாஜ் துவங்கியுள்ளது. மேலும், மஹராஷ்டிரா மற்றும் குஜராத்தில் இந்த பைக்கை புக் செய்தவர்களில் சிலருக்கு ஃப்ரீடம் 125 பைக்கை டெலிவிரி கொடுக்கும் பணிகளையும் பஜாஜ் துவங்கியுள்ளது. இதன்படி, முதல் ஃப்ரீடம் 125 பைக்கை புனேவை சேர்ந்த பிரவீன் தோரட் என்பவர் தனது குடும்பத்துடன் வந்து டெலிவிரி பெற்றுள்ளார்.

இதனை ஒரு சிறிய நிகழ்ச்சி போல் ஏற்பாடு செய்து முதல் ஃப்ரீடம் 125 பைக்கை வாடிக்கையாளருக்கு டெலிவிரி செய்துள்ளனர். பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் சிறப்பம்சம் என்னவென்றால், மற்ற 125சிசி பைக்குகளை காட்டிலும் இந்த பைக்கில் எரிபொருள் செலவானது பாதியாக இருக்கும். இதன் மூலமாக, முதல் 5 வருடங்களில் சுமார் ரூ.75,000 வரையிலான எரிபொருள் செலவை மிச்சப்படுத்த முடியும் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, கார்பன் மாசு உமிழ்வும் இந்த பைக்கில் 26.7% குறைவாக இருக்கும் எனவும் கூறுகிறது. சிஎன்ஜி வாகனங்களில் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை நிரப்பி பயன்படுத்துவதற்காக டேங்க் வழக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கிலும் இருக்கைக்கு அடியில் சிஎன்ஜி டேங்க் வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் ட்ரெல்லிஸ் சட்டகத்தில் இந்த சிஎன்ஜி டேங்க் மிகவும் பாதுகாப்பாக கொடுக்கப்படும்.

இந்த டேங்கில் 2 கிலோ சிஎன்ஜி-ஐ நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 200கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், சிஎன்ஜி ஸ்டேஷன்கள் நாடு முழுவதும் இன்னும் விரிவாக்கம் செய்யப்படாததால், 2 லிட்டர் பெட்ரோல் டேங்கையும் இந்த பைக்கில் பஜாஜ் நிறுவனம் வழங்கியுள்ளது. ஆதலால், தேவைப்பட்டால் பெட்ரோலிலும் இந்த பைக்கை இயக்கலாம்.
ஃப்ரீடம் 125 பைக்கில் பின்பக்க சஸ்பென்ஷனுக்கு மோனோஷாக் வழங்கப்பட்டு இருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது. நீளமான இருக்கை, எல்இடி ஹெட்லேம்ப்கள், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி உள்ளிட்டவற்றை சிறப்பம்சங்களாக கொண்டுள்ள பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக் மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.95,000 ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக் அறிமுகம் செய்யப்பட்டு 2 வாரத்திற்குள் முதல் கஸ்டமரை சென்றடைந்து உள்ளது. இதில் இருந்து, இந்த சிஎன்ஜி பைக்கின் விஷயத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் எந்த அளவிற்கு தீவிரமாக உள்ளது என்பதை அறிய முடிகிறது. இதனால், வருங்காலங்களில் பஜாஜின் அடையாளமாக ஃப்ரீடம் 125 பைக் விளங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









