ஒரு வழியா இந்த இ-ஸ்கூட்டரின் உற்பத்தியை தொடங்கிட்டாங்க! எப்போ அறிமுகம் பண்ணாங்க இப்பதான் இதையே செய்யறாங்க!
பிகாஸ் (BGauss) நிறுவனம், கடந்த ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் தன்னுடைய புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடலான ஆர்யூவி350 (RUV350) மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதை உறுதிப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அந்த மாதத்தின் இறுதியில் அதிகாரப்பூர்வமாக ஆர்யூவி350 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அன்றைய தினமே அதன் விலை மற்றும் சிறப்பு வசதிகள் பற்றிய விபரங்களையும் பிகாஸ் நிறுவனம் வெளியிட்டது. ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 எனும் குறைவான விலையே இந்த ஸ்கூட்டருக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த நிலையிலேயே, இப்போது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி தொடங்கி இருப்பதாக நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. சுமார் இரண்டு மாதங்கள் கழித்து இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தியைத் நிறுவனம் தொடங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஓலா எலெக்ட்ரிக், ஏத்தர் எனெர்ஜி, டிவிஎஸ் மற்றும் பஜாஜ் ஆகிய நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியளிக்கும் நோக்கில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலே பிகாஸ் ஆர்யூவி350 மாடல் ஆகும்.

சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்டிருப்பதில் மிகவும் அசத்தலான தயாரிப்பாக இது காட்சியளிக்கின்றது. இந்தியர்களுக்காக இந்தியாவிலேயே வைத்து தயாரிக்கப்பட்ட ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலே இதுவாகும். பெரிய ஸ்டோரேஜ் வசதியை இருக்கைக்கு அடியில் இந்த ஸ்கூட்டர் கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்துடன், இதன் பாடியை மெட்டலால் தயார் செய்திருப்பதாகவும் பிகாஸ் தெரிவித்து இருக்கின்றது.
ஆகையால், ஆண்டுகள் கடந்தும் இந்த வாகனம் நீடித்து உழைக்கும் என தெரிகின்றது. இத்தகைய அம்சத்தைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா-விற்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுதவிர, அட்வான்ஸ்டு ரைடு அனுபவத்தை வழங்கும் பொருட்டும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் நவீன கால அம்சங்கள் பலவற்றை பிகாஸ் மிக தாராளமாக வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட 5 அங்குல டிஎஃப்டி திரை ஒன்று இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரையின் வாயிலாக செல்போனுக்கு வரும் அழைப்பு, குறுஞ்செய்திகள் உள்ளிட்டவற்றையும் அறிந்துக் கொள்ள முடியும். இதுதவிர, திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதி, பகல்-இரவு நேரத்திற்கு ஏற்ப காட்சிப்படுத்தலை அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளும் வசதி ஆகியவற்றையும் இந்த திரைக் கொண்டிருக்கும்.
மேலும், முக்கிய ஆவணங்களைச் சேகரிக்கும் வசதி, சார்ஜ் அளவு போன்ற முக்கிய தகவல்களையும் இது வழங்கும். இதுதவிர, ஹில் ஹோல்டு, க்ரூஸ் கன்ட்ரோல், ரிவர்ஸ் மோட், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஃபால் சென்ஸ் ஆகியவற்றையும் இந்த ஸ்கூட்டரில் வழங்கி இருப்பதாக பிகாஸ் தெரிவித்து இருக்கின்றது.
இத்துடன், சென்டர் மற்றும் சைடு ஸ்டாண்டு சென்சாரும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய தரமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தியையே தற்போது பிகாஸ் தொடங்கி இருக்கின்றது. நிறுவனத்தின் மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி ஆலை மஹாராஷ்டிரா மாநிலம் சக்கன்-னிலேயே அமைந்திருக்கின்றது.
அங்கேயே ஆர்யூவி350-இன் உற்பத்தி பணிகள் தொடங்கி இருக்கின்றன. எனவே விரைவில் இந்த வாகனத்தின் டெலிவரி பணிகளும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆர்யூவி350 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓர் முழு சார்ஜில் 145 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், இதில் ஹைப்பர் டிரைவ் வகை எலெக்ட்ரிக் மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 75 கிமீ ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் திருட்டை தவிர்க்கும் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருக்கின்றது. நிகழ்நேர வாகனத்தை டிராக் செய்தல், ஜியோ ஃபென்சிங் போன்ற அம்சங்களே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால், இந்திய மின்சார வாகன உலகின் அசத்தலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக ஆர்யூவி350 காட்சியளிக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய சூழலை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் நோக்கிலேயே பிகாஸ் நிறுவனம் ஆர்யூவி350 மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு இந்திய மின்சார ஸ்கூட்டர் காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








