நாளை அறிமுகமாகிறது படகை போல நீளமா இருக்கும் இ-ஸ்கூட்டர்.. என்ன இந்த ஸ்கூட்டர் மணிக்கு 120கிமீ வேகத்துல போகுமா!
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த தேவையை உணர்ந்து உலகின் முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ மோட்டாராட் (BMW Motorrad), அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடல் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. சிஇ 04 (CE 04) எனும் மாடலையே அது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுவே நிறுவனம் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர முதல் எலெக்ட்ரிக் டூ-வீலர் மாடல் ஆகும்.
மிகவும் தனித்துவமான தோற்றத்தைக் கொண்ட ஓர் இ-ஸ்கூட்டர் மாடலே இதுவாகும். வாட்டர் பைக்-கைப் போன்ற தோற்றத்தில் இது காட்சியளிக்கின்றது. மேலும், ஸ்கேட் போர்டு ஸ்டைலிலும் அது காட்சியளிக்கின்றது. இந்த மாதிரியான தோற்றத்தில் நாட்டில் வேறு எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உருவாக்கத்தில் மிகவும் கட்டுமஸ்தான பாடி பேனல்களை பிஎம்டபிள்யூ மோட்டாராட் பயன்படுத்தி இருக்கின்றது. இவையே இ-ஸ்கூட்டரின் தனித்துவமான தோற்றத்திற்கு காரணமாக உள்ளது. தோற்றத்தில் மட்டுமில்லைங்க சிறப்பம்சங்களை தாங்கி இருப்பதிலும் பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்தின் இந்த தயாரிப்பு நம்மை ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையிலேயே இருக்கின்றது.
இணைப்பு மற்றும் நேவிகேஷன் தகவலை வழங்கும் வசதி 10.25 அங்குல டிஎஃப்டி திரை, ஸ்மார்ட்போன் மற்றும் ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்வதற்கு ஏதுவான பெட்டகம் ஆகியவை இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த பெட்டகம் ஓர் காற்று மற்றும் நீர் புகா பெட்டகம் ஆகும்.
ஆகையால், அதில் வைக்கப்படும் பொருட்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கும். இதுதவிர, ஓர் 'சி' டைப் யுஎஸ்பி சார்ஜரும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. தானியங்கி ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டைனமிக் டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் செய்யும் வசதி உள்ளிட்டவையும் இந்த பிஎம்டபிள்யூ சிஇ 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுபோன்று இன்னும் பல பிரீமியம் அம்சங்கள் இதில் இடம் பெற இருப்பது குறிப்பிடத்தகுந்தது. ரேஞ்ஜ் தருவதிலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறந்த ஒன்றாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், ஓர் முழு சார்ஜில் 130 கிமீ தூரம் வரை பிஎம்டபிள்யூ சிஇ 04-வில் பயணிக்க முடியும்.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 121 கிமீ என்றும் கூறப்படுகின்றது. இத்தகைய அதீத வேகத்திற்காக 15 kW எலெக்ட்ரிக் மோட்டாரே சிஇ 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இதனால் வெறும் 2.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் மணிக்கு 50 கிமீ வேகத்தை எட்டிவிடும் என கூறப்படுகின்றது.
பேட்டரி பேக்கை பொருத்த வரை 8.9kWh திறன் கொண்ட பேக்கே இந்த ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கின்றது. ரைடிங் மோட்-ஐப் பொருத்த வரை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரோடு, ரெயின் மற்றும் ஈகோ ஆகியவையே வழங்கப்பட இருக்கின்றன. இத்துடனேயே டைனமிக் டிராக்சன் கன்ட்ரோல் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட உள்ளது.
இதன் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவிலேயே இதன் விளைகள் அறிவிக்கப்பட உள்ளன. ரூ. 10 லட்சம் இதற்கு விலை நிர்ணயம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தனித்துவமான ரைடு அனுபவத்தை வழங்கும் மிகப் பெரிய அளவில் நம்பப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்களுக்கான தேவை மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பிஎம்டபிள்யூ அதன் அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த டூ-வீலரை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இதற்கு இந்திய பணக்காரர்கள் மற்றும் மின்சார இரண்டு சக்கர வாகன ஆர்வலர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








