ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸ் (Brixton Motorcycles) இந்த நிறுவனமே இந்தியாவில் விரைவில் கால் தடம் பதிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் இரண்டு சக்கர வாகன பிரியர்களை குஷியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட அமெரிக்கா என உலக நாடுகள் பலவற்றில் ராஜ்ஜியம் செய்துக் கொண்டிருக்கும் ஓர் மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனமே பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸ் ஆகும். இந்த நிறுவனத்தின் பார்வையே தற்போது இந்தியாவின் பக்கம் திரும்பி இருக்கின்றது.

இதனால், இந்தியாவில் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி பிரீமியம் இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் தலைவலி ஏற்படும் சூழல் உருவாகி இருக்கின்றது. வாகனங்களுக்கான மிகப் பெரிய சந்தையாக இந்தியா விளங்கிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, நம் நாட்டில் இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிகப் பெரிய அளவில் டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையை உணர்ந்தே உலகின் முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை மையப்படுத்தி களமிறங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸ்-ம் அதன் இந்திய வருகையை உறுதி செய்திருக்கின்றது. இதற்காக அந்நிறுவனம் ஏற்கனவே ஓர் இந்திய நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகின்றது.

கேஏடபிள்யூ வெலோஸ் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் (KAW Veloce Motors Pvt Ltd), இந்த நிறுவனத்துடனேயே பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸ் அதன் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது. இந்த இந்திய நிறுவனமே பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸின் இந்திய வளர்ச்சிக்காக உழைக்க இருக்கின்றது. அதாவது, நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனையில் தன்னுடைய பெரும் உதவியை பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸ்-க்கு வழங்க இருக்கின்றது.
பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியாவின் எரிபொருள் மோட்டார்சைக்கிள் பிரிவை மையமாகக் கொண்டே அதன் கால் தடத்தைப் பதிக்க இருக்கின்றது. எதிர்காலத்தில் மின்சார வாகனங்களையும் அது விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இப்போது அதுபற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தையும் வெளியாகவில்லை. பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸ் இரண்டு ஆண்டுகளாக கேஏடபிள்யூ வெலாஸ் மோட்டார்ஸ் உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்திருக்கின்றது.

இந்த நிலையிலையே கூட்டணி உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விரைவில் பிரிக்ஸ்டன் நிறுவனத்தின் இரண்டு சக்கர வாகனங்களின் உற்பத்தி பணிகளை கேஏடபிள்யூ விரைவில் தொடங்க இருக்கின்றது. இதை அடுத்து விற்பனைக்கான பணிகளையும் அது மேற்கொள்ளும். உலக நாடுகளில் பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்திற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிகப் பெரிய வரவேற்பை பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸின் இரண்டு சக்கர வாகன மாடல்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் அதேமாதிரியான டிமாண்டையே அந்த நிறுவனத்தின் இரண்டு சக்கர வாகனங்கள் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தன்னுடைய இந்தியா வருகையைத் தொடர்ந்து இந்தியாவில் நான்கு மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய இருப்பதாக பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸ் அறிவித்து இருக்கின்றது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரிவை அலங்கரிக்கும் வகையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, அட்வென்சர், க்ரூஸர், டூரிங் மற்றும் ஸ்கிராம்ப்ளர் என அனைத்து பிரிவுகளையும் அலங்கரிக்கும் வகையில் அது அதன் பைக்குகளை விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் உற்பத்தி பணிகள் மஹாராஷ்டிராவிலேயே மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இங்கிருந்தே நாடு முழுவதிற்கும் இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றது. இந்தியாவிற்கு மட்டுமல்ல உலக நாடுகள் சிலவற்றிற்கும் இந்தியாவில் இருந்து பிரிக்ஸ்டன் பைக்குகள் விற்பனைக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன.
அந்தவகையில், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற சந்தைகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன. எனவே இந்தியாவில் தன்னுடைய மிகப் பெரிய வாகன உற்பத்தி மையமாக பிரிக்ஸ்டன் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனத்தின் பைக் உற்பத்தி பணிகள் விரைவிலேயே தொடங்கப்பட இருக்கின்றது.
மேலும், அது 2024 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதிலும் முக்கிய நகரங்களில் 15க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களை உருவாக்க திட்டமிட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டிற்குள் மேலும் 50 டீலர்கள் மையங்களையும் அது உருவாக்க திட்டமிட்டுள்ளது. எனவேதான் மிகப் பெரிய ராஜ்ஜியத்தை செய்யும் நோக்கில் பிரிக்ஸ்டன் அதன் பணிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகச் சந்தையில் பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் மிகப் பெரிய வெற்றிக் கண்டிருக்கலாம். ஆனால், இந்தியாவில் அது வெற்றி காணுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பாக, இதன் வருகை ராயல் என்பீல்டு, ஹோண்டா மற்றும் கேடிஎம் போன்ற நிறுவனங்களுக்கே போட்டியாக அமைய இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









