டிரெயின்ல ஆனியன் சமோசாகூட இவ்ளோ வித்திருக்குமா தெரியல! செம்மையா கல்லா கட்டிய மின்சார வாகன பிரிவு!
இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு (எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்கு) நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால், கடந்த மார்ச் மாதம் யாரும் நம்ப முடியாத அளவிற்கு எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் மிக மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கின்றன.
குறிப்பாக, ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) மட்டும் தனி ஆளாக 50 ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-களை விற்பனைச் செய்திருக்கின்றது. இதேபோல் இன்னும் பல பிராண்டுகள் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைச் செய்து சாதனைப் படைத்திருக்கின்றன.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் மின்சார இரண்டு சக்கர வாகனங்களை விற்பனைச் செய்துக் கொண்டிருக்கும் ஆரம்ப நிலை நிறுவனங்கள்கூட இரண்டு மடங்கு மூன்று மடங்கு என விற்பனையில் மிகப் பெரிய வளர்ச்சியை 2023 - 24 ஆம் நிதியாண்டில் சந்தித்து இருக்கின்றன.
இதன் விளைவாக சென்ற நிதியாண்டின் ஒட்டுமொத்த 9.44 லட்சம் யூனிட்டுகளாக அதிகரித்து இருக்கின்றது. ஆமாங்க, இந்த அளவு அதிக எண்ணிக்கையிலேயே இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் 2023-24 நிதியாண்டில் விற்பனையாகி இருக்கின்றன. அதேநேரத்தில் 2024 மார்ச் மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 36 ஆயிரத்து 544 யூனிட்டுகள் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் இந்திய சந்தையில் விற்பனையாகி இருக்கின்றன.
இவை அனைத்தும் கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே விற்பனையானவை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அளவு மிகப் பெரிய எண்ணிக்கையில் வேறு எந்த மாதத்திலும் இந்தியாவில் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் விற்பனையானது இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனங்கள் சலுகைகளை 2024 மார்ச் மாதத்தில் வாரி வழங்கியதே இந்த அமோக விற்பனைக்கு பின்னால் இருக்கும் ஓர் முக்கிய காரணியாகும்.
அதேவேளையில், மற்றுமொரு மிகப் பெரிய முக்கிய காரணியாக ஃபேம்2 திட்டம் இருக்கின்றது. மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஓர் திட்டமே ஃபேம்2 ஆகும். இந்த திட்டத்தின் வாயிலாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகளை அரசு வழங்கிக் கொண்டு இருக்கின்றது.
இந்த திட்டத்தின் கடைசி நாள் 31 மார்ச் 2024 ஆகும். இதன் நிறைவை முன்னிட்டே, அதாவது, வரும் நாட்களில் மின்சார வாகனங்களுக்கு அரசின் மானியம் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற எண்ணத்திலேயே பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை மார்ச் மாதத்தில் வாங்கியிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கு முன்னதாக 2023 மே மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் விற்பனையாகி இருந்தன என்பது கவனிக்கத்தகுந்தது. அப்போது சுமார் 1.05 லட்சம் யூனிட்டுகள் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனையாகின. ஆனால், இந்த சாதனையையும் 2024 மார்ச் மாதம் தற்போது முறியடித்திருக்கின்றது.
எனவே மின்சார வாகனங்கள் மீது மக்களுக்கு அதிகரித்து காணப்படும் மோகமும் இந்த விற்பனை வளர்ச்சிக்கு ஓர் காரணம் இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகின்றது. இந்தியாவின் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்கள் பிரிவில் ஓலாவே முன்னோடி நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. பலமாதங்களாக அதுவே முதல் இடத்தில் இருக்கின்றது.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி 26,478 யூனிட்டுகள் விற்பனையுடன் டிவிஎஸ் இரண்டாவது இடத்திலும், 17,933 யூனிட்டுகள் விற்பனையுடன் பஜாஜ் ஆட்டோ மூன்றாவது இடத்தில் இருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் பெங்களூருவைச் சேர்ந்த ஏத்தர் எனெர்ஜி இருக்கின்றது. 17,221 யூனிட்டுகள் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சென்ற மார்ச் மாதத்தில் விற்பனையாகி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தொடர்ச்சியாக எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்துக் கொண்டிருப்பதையே இந்த புள்ளி விபரங்கள் நமக்கு தெரிவிக்கின்றன. வரும் நாட்களில் பெட்ரோல் டூ-வீீலர்களுக்கு டஃப் கொடுக்கும் மின்சார டூ-வீலர்களின் விற்பனை வளரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும், விரைவில் மத்திய அரசு ஃபேம் திட்டத்தின் அடுத்தக்கட்டதை அறிமுகம் செய்யும் என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








