எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் vs பெட்ரோல் ஸ்கூட்டர்.. எதை வாங்கலாம்? வாங்குவதற்கு முன்னாடியே தெரிஞ்சிக்க வேண்டிய தகவல்
இந்தியர்கள் மத்தியில் மின்சார இரண்டு சக்கர வாகனம் (Electric Two Wheeler)-களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்து இருக்கின்றது. இவை அதிகம் லாபம் தரக் கூடியவை சுற்றுச் சூழலுக்கு உகந்தவை என்றெல்லாம் கூறப்படுகின்றது. இதன் காரணத்தினாலேயே, அரசு சார்பிலும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு மானியம் மற்றும் வரிச் சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்தியாவில் இப்போதும் பெட்ரோல் (ICE) டூ-வீலர்களுக்கு மிக சிறப்பான வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது.
ஒரு பக்கம் மக்கள் தீவிரமாக மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறிக் கொண்டிருக்கும் அதேவேளையில், மறுபக்கம் இப்போதும் மக்கள் அதிகளவில் ஐசிஇ டூ-வீலர்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையால் யார் புத்திச் சாலிதனமானவர்கள் என்கிற கேள்வி பலருக்கு எழும்பி இருக்கின்றது. மேலும், பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், இந்த இரண்டில் எது சிறந்தது? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்? எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க போகின்றீர்கள் என்றால் அந்த ஸ்கூட்டரில் ஓர் முழு சார்ஜில் எத்தனை கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பதை அறிந்து, அதற்கு பின்னர் வாங்குவதே சிறந்தது. தற்போது சந்தையில் விலை குறைவாக பல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
ஆனால், அவற்றில் நம்முடைய விருப்பம்போல் அதிக கிமீ ரேஞ்ஜை பெற முடியாது. குறிப்பாக, பெரும்பாலான ஸ்கூட்டர்கள் முழு சார்ஜுக்கு 100 கிமீட்டருக்கும் குறைவான ரேஞ்ஜையே வழங்கும் வகையில் பேட்டரி பேக்கைக் கொண்டவையாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆகையால், மின்சார ஸ்கூட்டரை வாங்கும் முன் அதிக ரேஞ்ஜ் தரக் கூடிய மாடலை வாங்குவதே நல்லது.
பெட்ரோல் டூ-வீலரில் இந்த சிக்கல் இருக்காது. நொடிப்பொழுதில் பெட்ரோலை நிரப்பிவிட்டு அடுத்த சென்சூரி அடிக்கும் அளவிற்கான பயணத்தை மேற்கொள்ள முடியும். ஆனால், மின்சார வாகனம் அப்படி கிடையாது. அதை முழுமையாக சார்ஜ் செய்ய பல மணி நேரங்களை செலவிட வேண்டி இருக்கும்.
எங்கே சார்ஜ் செய்வது? இந்தியாவில் மின்சார வாகன விற்பனை மிகப் பெரிய அளவில் தற்போது சூடுபிடித்துக் காணப்படுகின்றது. ஆனால், இப்போதும் மின்சார வாகனங்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மிகவும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. மேலும், மந்தமான நிலையிலேயே அவற்றை கட்டமைக்கும் பணிகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே இந்த பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆகையால், மின்சார வாகனம் வாங்கும் முன் உங்கள் பகுதியில் சார்ஜிங் கட்டமைப்பு நல்ல நிலையில் இருக்கின்றதா என்பதை பார்த்துக் கொள்வது நல்லது. பெட்ரோல் டூ-வீலருக்கு இந்த விஷயத்தில் எந்த சிக்கலும் இருக்காது. திரும்பும் பக்கமெல்லாம் நாட்டில் பெட்ரோல் நிலையங்கள் இருக்கின்றன.
அப்படியே பெட்ரோல் பங்க் இல்லை என்றாலும், வேறு வண்டி பிடித்துச் சென்று பெட்ரோலை வாங்கி வந்து நிரப்பிக் கொள்ள முடியும். இதேபோல், மின்சார வாகனங்களுக்கும் பேட்டரி ஸ்வாப்பிங் மையங்கள் வாயிலாக முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், இந்த நிலையங்களும் நாட்டில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன.
பயன்பாட்டு செலவு: பயன்பாட்டு செலவு விஷயத்தில் மின்சார ஸ்கூட்டர்களே மிக சிறந்ததாக உள்ளன. பெட்ரோல் டூ-வீலர் ஒன்று லிட்டர் ஒன்றிற்கு 50கிமீ மைலேஜ் தருகின்றது என்றால், இன்றைய பெட்ரோல் விலையுடன் ஒப்பிடுகையில் அந்த வாகனத்தில் ஒரு கிமீ பயணிக்க 2ரூபாய் வரை ஆகின்றது என்றே பொருள். ஆனால், எலெக்ட்ரிக் டூ-வீலர்களில் சில ஒரு கிமீட்டர் பயணிக்க 50காசுக்கும் குறைவாகவே செலவாகிறது. சில எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் 10-20பைசா செலவிலேயே ஒரு கிமீ பயணத்தை வழங்குகின்றன.
பராமரிப்பு செலவு: இந்த விஷயத்திலும் மின்சார வாகனங்களே மிக சிறந்தவை ஆகும். ஏனெனில், பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானது. குறிப்பாக, ஆயில் மாற்றம், ஏர் ஃபில்டர் மாற்றம் என்பதை குறிப்பிட்ட சில கிமீட்டர் பயணத்திற்கு பின்னால் மாற்றியே ஆக வேண்டும்.
இதுவே மிக மிகப் பெரிய செலவை வழங்கக் கூடியவையாக பெட்ரோல் டூ-வீலரில் இருக்கின்றது. இதேபோல், எஞ்சின் மற்றும் பிற முக்கிய பாகங்களின் தேய்மானத்தாலும் மிக செலவுகள் பெட்ரோல் இரண்டு சக்கர வாகனங்களில் ஏற்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், மின்சார வாகனங்களுக்கு மிகவும் குறைவான பராமரிப்பே தேவைப்படுகின்றது.
மிகவும் குறைவான பாகங்களையே இது கொண்டிருப்பதால் பெரிய அளவில் பராமரிப்பு இதற்கு தேவைப்படுவதில்லை. தொடர்ந்து, பிரேக்கிங் சிஸ்டமும் இதில் நீடித்து உழைக்கும் தன்மைக் கொண்டதாகவே வழங்கப்படுகின்றன. குறிப்பாக, ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் நிறுத்தம் வேலையை பார்த்துவிடுவதால் பிரேக் கட்டை தேய்மானம் மிக குறைவாக அரங்கேறுகின்றது. ஆகையால், இதிலும் நமக்கு சிக்கனமே மிஞ்சும்.
சுற்றுச்சூழலின் நண்பன்: காற்றை மாசுபடுத்துவதில் பெட்ரோல் வாகனம் மிக முக்கியமான இடத்தில் இருக்கின்றது. ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்கள் அப்படி இல்லை. அவை சுற்றுச் சூழலுக்கு நண்பனாகக் கருதப்படுகின்றது. எனவேதான் அரசாங்கங்களும் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கின்றன. பூஜ்ஜியம் உமிழ்வையே எலெக்ட்ரிக் வாகனங்கள் கொண்டிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சார்ஜிங் கட்டமைப்பு பற்றாக் குறையால் மட்டுமே பலர் மின்சார வாகனத்தை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், விரைவிலேயே இந்த சூழல் இந்தியாவில் மாறும் என நம்பப்படுகின்றது. அந்த நாளை நோக்கியே இந்திய மட்டுமின்ற உலக நாடுகள் அனைத்தும் நகர்ந்துக் கொண்டிருக்கின்றன. அந்த நாளில் ஒட்டுமொத்த உலகையும் மின்சார வாகனங்களே ஆளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலே உள்ள வழங்கப்பட்ட தகவலை வைத்து உங்களுக்கு இன்றைய நிலவரப்படி எந்த வாகனம் பொருந்தும் என்பதை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








