குறித்து வெச்சிக்கோங்க... பந்தயம் அடிக்க போகும் இந்தியாவின் முதல் சிஎன்ஜி பைக் - பஜாஜ் தயாரித்தால் மிஸ் ஆகாது!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் இந்திய மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் புதிய அத்தியாயத்தை எழுதும் விதமாக முதல் சிஎன்ஜி பைக்கை இன்று (ஜூலை 5) அறிமுகம் செய்கிறது. இது பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் முதல் சிஎன்ஜி பைக் ஆகும். இதன் காரணமாகவே, இந்த பைக்கின் அறிமுகம் குறித்து பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த முதல் சிஎன்ஜி பைக்கை பற்றி பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இயக்குனர் ராகேஷ் சர்மா என்ன கூறுகிறார்? வாருங்கள் அதனை பற்றி இனி பார்க்கலாம்.
இந்தியாவில் சிஎன்ஜி வாகனங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளதாக தெரிவித்துள்ள ராகேஷ் சர்மா, நாட்டில் ஒவ்வொரு மாதமும் 100 புதிய சிஎன்ஜி குழாய்கள் பதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் நாட்டில் சிஎன்ஜி கிடைக்கும் சதவீதம் தற்போதைக்கு 60%ஆக இருந்தாலும், கூடிய விரைவில் அது 80%ஆக அதிகரிக்கும் என நம்பிக்கை உடன் தெரிவித்துள்ளார். ராகேஷ் சர்மாவிடம் மேலும் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் அளித்துள்ள பதில்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

பெட்ரோல் பைக்குகள் மற்றும் எலக்ட்ரிக் பைக்குகளுடன் ஒப்பிடுகையில் சிஎன்ஜி பைக்குகளுக்கு எந்த அளவிற்கு மதிப்பு உள்ளது? என கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்த பைக் எங்களது கடந்த 2- 3 வருட கடின உழைப்பின் வெளிப்பாடு ஆகும். இதற்கு மிக பெரிய மார்க்கெட் உள்ளது. ஒவ்வொரு மாதமும் நாட்டில் விற்பனையாகும் 10 இலட்ச மோட்டார்சைக்கிள்களில் கிட்டத்தட்ட 70% அவற்றின் எரிபொருள் திறனை பார்த்தே வாங்கப்படுகின்றன.
எங்களது முழு முயற்சியும் அதில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக 3-வீலர் சிஎன்ஜி வாகனங்களில் நாங்கள் கொண்டுள்ள அனுபவங்கள் இதில் முக்கிய பங்காற்றி உள்ளன. கிட்டத்தட்ட 50% குடும்பங்களின் முக்கியமான 4 மாதாந்திர செலவுகளில் ஒன்றாக எரிபொருள் செலவு உள்ளது. ஆதலால், இது அவர்களுக்கு பெரிய சேமிப்பாக இருக்கும்.

அதுமட்டுமின்றி, இந்திய அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் நம்பிக்கையின்படி சிஎன்ஜி ஆனது குறைவான கார்பன் மாசு உமிழ்வை கொண்டுள்ளது. இந்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் சிஎன்ஜி நெட்வொர்க்கிற்காக பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் கிட்டத்தட்ட 70% மாவட்டங்கள் சிஎன்ஜி நெட்வொர்க்கில் உள்ளன. எரிவாயு நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இவற்றின் உதவியுடன் சிஎன்ஜி பைக்கின் மூலமாக எரிபொருள் செலவை பாதியாக குறைக்கிறோம் என்றார்.
4-சக்கர சிஎன்ஜி வாகனம் முதல்முறையாக ஒன்று அறிமுகமானதற்கு பிறகு நிறைய நிறுவனங்கள் தங்களது சிஎன்ஜி வாகனங்களை அறிமுகம் செய்தன. டாக்ஸி உள்ளிட்ட கமர்ஷியல் வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டன. இதுபோன்று உங்களது முதல் சிஎன்ஜி பைக்கும் 2-வீலர் மார்க்கெட்டில் மாற்றத்தை கொண்டுவருமா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, ஆம், நீங்கள் சொல்வது சரிதான். எங்களது எதிர்பார்ப்புகளும் அவ்வாறுதான் உள்ளது.

2-வீலர் வாங்கும் 70% மக்கள் வாகனத்தின் எரிபொருள் திறனை முக்கியமானதாக பார்க்கிறார்கள் எனும்போது, இந்திய 2-வீலர் மார்க்கெட்டின் 70% அதில் கவராகி விடுகிறது. பஜாஜ் சிஎன்ஜி பைக் இந்த மாற்றத்தை துவங்கி வைக்கலாம். ஆனால், அதை விட முக்கியமானது என்னவென்றால், இந்த மாற்றம் வாடிக்கையாளர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும், அதைதான் நாங்கள் பார்க்க விரும்புகிறோம். எரிவாயுவை வழங்கும் நிறுவனங்களுக்கும் நிறைய பொறுப்புகள் உருவாகும் என்றார்.
சிஎன்ஜி பைக்குகளில் அடுத்த 5 வருடத்திற்கு என்ன திட்டங்களை வைத்துள்ளீர்கள்? சிஎன்ஜி பைக்குகளை ஏற்றுமதி செய்ய போகிறீர்களா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, சிஎன்ஜிக்கு மாறுவதில் இந்தியா தனித்துவமானதாக விளங்குகிறது. உலகின் சில நாடுகள் ஏற்கனவே சிஎன்ஜி நெட்வொர்க்கில் பங்கெடுக்க ஆரம்பித்துவிட்டன. தற்போதைய நிலவரப்படி, 6 நாடுகள் எங்களது சிஎன்ஜி வாகனங்களை பெறுவதற்கு ஏற்ற நாடுகளாக உள்ளன என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் ஆட்டோ இயக்குனர் ராகேஷ் சர்மா இன்னும் பல விஷயங்களை பற்றி கலந்துரையாடினார். அவற்றுள் முக்கியமானவைகளை மட்டுமே இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். பஜாஜின் முதல் சிஎன்ஜி பைக்கின் பெயர் என்னவாக இருக்கும் என்பது குறித்து கூட ராகேஷ் சர்மா பேசினார். இந்தியாவின் முதல் சிஎன்ஜி பைக் பஜாஜ் ஃப்ரீடம் 125 என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்படுகிறது. மக்கள் மத்தியில் பஜாஜ் ஃப்ரீடம் கவனத்தை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









