மத்திய அரசை புகழ்ந்து தள்ளும் ஹீரோ மோட்டோகார்ப்!! சும்மாவா ரூ.1,000 கோடி இலாபம் ஆச்சே...
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நடப்பு நிதியாண்டின் கடந்த 3ஆம் காலாண்டில் சுமார் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான இலாபத்தை கண்டுள்ளதாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களை பற்றியும் இனி விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவின் நம்பர் ஒன் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் ஒவ்வொரு மாதமும் அசால்ட்டாக 4 - 5 லட்ச இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. அதாவது, அந்த அளவிற்கு ஹீரோ 2-வீலர்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஹீரோவின் ஸ்பிளெண்டர் பைக்குகள் மட்டும் மாதத்திற்கு 2 -3 லட்சம் விற்பனையாகுகின்றன.

இதற்கிடையில் எலக்ட்ரிக் 2-வீலர்கள் உற்பத்தியில் 'விடா' என்ற பிராண்டில் நுழைந்திருக்கும் ஹீரோ மோட்டோகார்ப் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலும் கணிசமான இலாபத்தை வணிகத்தில் கண்டுள்ளது. இந்த வகையில், கடந்த 2023 அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான நடப்பு 2024-25ஆம் நிதியாண்டின் 3ஆம் காலாண்டில் சுமார் ரூ.1,073.40 கோடி இலாபத்தை ஹீரோ பெற்றுள்ளது.
இதனை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமே அதன் சமீபத்திய அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஹீரோ மோட்டோகார்ப் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, 2024-25ஆம் நிதியாண்டின் இந்த 3ஆம் காலாண்டில் ரூ.9,724 கோடி வருவாயை இந்த இந்திய 2-வீலர் நிறுவனம் பெற்றுள்ளது. இதில் முதலீடுகள் கழிய, நிறுவனத்திற்கு இலாபமாக ரூ.1,073.40 கோடி கிடைத்துள்ளது.

முந்தைய 2023-24ஆம் நிதியாண்டின் 3ஆம் காலாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் பெற்ற இலாபத்துடன் ஒப்பிடுகையில் இது 51% அதிகமாகும். அதேபோல், வருவாய் 21% அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் முதலீட்டில் பங்கை கொண்டுள்ளவர்கள் (Shareholder)-க்கு ஒரு பங்கிற்கு ரூ.75ஐ வழங்க ஹீரோ மோட்டோகார்ப் பரிந்துரைத்துள்ளது.
அதேநேரம், ஹீரோ மோட்டோகார்பின் 100 ஆண்டுகால நிறைவை கொண்டாடும் விதமாக பங்குதாரர்களுக்கு கூடுதலாக பங்கிற்கு ரூ.25ஐ வழங்கவும் ஹீரோ நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதன்படி பார்த்தால், பங்குத்தாரர்களுக்கான பங்கு தொகை கழிய, ஹீரோ மோட்டோகார்ப் நடப்பு நிதியாண்டின் கடந்த 3ஆம் காலாண்டில் வருவாயில் 3 சதவீதமும், இலாபத்தில் 1.8 சதவீதமும் வளர்ச்சிக் கண்டுள்ளது.

2023 அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரையில் மொத்தம் 14 லட்சத்து 60 ஆயிரம் வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்துள்ளது. 2022ஆம் ஆண்டின் இதே கடைசி 3 மாதங்களில் ஹீரோ விற்பனை செய்ததை காட்டிலும் இது 18% அதிகமாகும். இதுகுறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி நிரஞ்சன் குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அரசாங்கம் காட்டும் முக்கியத்துவம் ஆனது, அதன் சமீபத்திய இடைக்கால வரவு செலவு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியதில் தெரிந்தது. இது ஒரு சாதகமான வணிக மற்றும் பொருளாதார சூழலை உருவாக்கியுள்ளது. இது அதிக வளர்ச்சி மற்றும் வேலை உருவாக்கத்தை எளிதாக்குகிறது. பிரீமியம் பிரிவில் எங்களின் சமீபத்திய வெளியீடுகள் துவக்கத்திலேயே வெற்றியை பெற்றுள்ளன" என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனமாக இருப்பதினாலேயே உலகின் மிக பெரும் 2-வீலர் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகிறது. வெறும் 3 மாதங்களில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இலாபம் என்பது உண்மையில் ஆச்சிரியமான விஷயம் ஆகும். ஒரு நிதியாண்டில் அதிகப்பட்ச வருவாயை எந்தவொரு ஆட்டோமொபைல் நிறுவனமும் அதன் 3ஆம் காலாண்டில்தான் பெறும். ஏனெனில், அந்த சமயத்தில்தான் தீபாவளி உள்பட தொடர்ச்சியாக பண்டிகை நாட்கள் வருகின்றன.


Click it and Unblock the Notifications









