ஹீரோ 2-வீலர்ஸ் மீது எப்படி இத்தனை பேர் நம்பிக்கை வைக்குறாங்க? ஹோண்டா எவ்வளவு முக்கினாலும் நடக்காது போல!!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக விளங்குகிறது. இத்தகைய நிறுவனத்தில் இருந்து கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 2-வீலர்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியா, உலகளவில் மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக விளங்குகிறது. இன்னும் சொல்ல போனால், உலகிலேயே இரு சக்கர வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகுவது நம் இந்தியாவில்தான். அப்படிப்பட்ட நம் நாட்டில் 2-வீலர்கள் விற்பனையில் நீண்ட வருடங்களாக ஹீரோ மோட்டோகார்ப் கொடிக்கட்டி பறந்து வருகிறது.

ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கிலான இரு சக்கர வாகனங்களை அசால்ட்டாக விற்பனை செய்துவரும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், கடந்த 2024 ஏப்ரல் மாதத்திலும் சுமார் 5 லட்சத்து 33,585 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2023ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தை காட்டிலும் 34.7% அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 4 லட்சம் 2-வீலர்களை கூட ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்யவில்லை.
அதேபோல், கடந்த 2024 மார்ச் மாதத்திலும் 4 லட்சத்து 90,415 இருசக்கர வாகனங்களை மட்டுமே இந்த நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, மார்ச் மாதத்தை காட்டிலும் ஏப்ரல் மாதத்தில் 9%, அதாவது 43 ஆயிரம் 2-வீலர்களை ஹீரோ மோட்டோகார்ப் அதிகமாக விற்பனை செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 5 லட்சத்து 33,585 வாகனங்களில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவையும் அடங்குகின்றன.

ஹீரோ வாகனங்கள் அதிகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. ஒட்டுமொத்த 5 லட்சத்து 33,585 வாகனங்களில் 5 லட்சத்து 13,296 வாகனங்கள் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்தவை ஆகும். அதாவது, ஏறக்குறைய வெறும் 20 ஆயிரம் 2-வீலர்களை மட்டுமே கடந்த ஏப்ரல் மாதத்தில் ஹீரோ நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
2023 ஏப்ரல் மாதத்தில் வெறும் 3 லட்சத்து 86,184 இருசக்கர வாகனங்களை மட்டுமே ஹீரோ நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், ஹீரோ மோட்டோகார்பின் உள்நாட்டு விற்பனை ஆனது 1 லட்சத்து 27,112 வாகனங்கள் அதிகரித்துள்ளது. அதேபோல், ஹீரோவின் வெளிநாட்டு ஏற்றுமதியும் 2023 ஏப்ரல் உடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஏப்ரலில் 10 ஆயிரம் யூனிட்களுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் ஸ்கூட்டர்களை காட்டிலும் அதன் பைக்குகளையே பெரிதும் நம்பியுள்ளது. குறிப்பாக, ஹீரோ ஸ்பிளெண்டர் ஆனது கடந்த பல வருடங்களாக இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலராக விளங்கி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 4 லட்சத்து 96,542 பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்துள்ளது. இதில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவையும் அடங்குகின்றன.
ஆனால், 2023 ஏப்ரல் மாதத்தில் வெறும் 3 லட்சத்து 68,830 பைக்குகளை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஸ்கூட்டர்களை பொறுத்தவரையில், கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் 37,043 ஹீரோ ஸ்கூட்டர்கள் உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரலில் 27,277 ஸ்கூட்டர்களை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு 2023 ஏப்ரல் மாதத்தில் ஹீரோ மோட்டோகார்பின் விற்பனை எல்லா வகைகளிலும் குறைவாகவே பதிவாகி இருந்தது. அல்லது, கடந்த 1 வருடத்தில் ஹீரோ மோட்டோகார்பின் 2-வீலர்ஸ் விற்பனை இந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது என சொல்வதா என தெரியவில்லை. ஏனெனில், 2023 ஏப்ரலில் ஹீரோ மோட்டோகார்ப் மட்டுமின்றி, ஹோண்டா, டிவிஎஸ், பஜாஜ் ஆட்டோ என மற்ற முன்னணி 2-வீலர் நிறுவனங்களின் விற்பனையும் குறைவாகவே பதிவாகி இருந்தது.


Click it and Unblock the Notifications









