பைக்கை ஓட்டும்போது அடிக்கடி கிளட்சை பிடிக்க தேவையில்ல! ஹோண்டா-வின் இ-கிளட்ச் தயார்!
புதிய தொழில்நுட்பங்களை வாகனங்களில் அறிமுகம் செய்வதில் ஒரு சில உற்பத்தியாளர்கள் முன்னோடியாக இருக்கின்றனர். அவர்களில் ஒருவராகவே ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் (HMSI) நிறுவனம் இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்நிறுவனம் ஓர் புத்தம் புதிய தொழில்நுட்பத்தை இரண்டு சக்கர வாகனங்களுக்காக தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு சக்கர வாகனங்களுக்கான தானியங்கி கிளட்ச் சிஸ்டத்தையே ஹோண்டா தயார் செய்திருக்கின்றது. இதற்கு இ-கிளட்ச் (e-Clutch) என அது பெயர் சூட்டி இருக்கின்றது. இந்த கருவியின் முக்கிய பணியே, கிளட்சே இல்லாமல் கியர் மாற்றத்தை அனுமதிப்பதுதான்.
இரண்டு சக்கர வாகன இயக்கத்தை எளிதாக்கும் பொருட்டே இந்த அம்சத்தை ஹோண்டா வடிவமைத்திருக்கின்றது. நம்மில் ஒரு சிலர் ஐஎம்டி கியர்பாக்ஸ் பற்றி அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றோம். அந்த கியர்பாக்ஸை ஒத்த அம்சமாகவே இந்த இ-கிளட்ச் இருக்கிறது. இன்டலிஜென்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (Intelligent Manual Transmission) என்பதையே ஐஎம்டி என அழைக்கின்றோம்.

இந்த அம்சம் கொண்ட வாகனங்களில் கியர் இருக்கும். ஆனால், கிளட்ச் இருக்காது. கிளட்ச்சை பிடிக்காமலே கியரை மாற்றிக் கொள்ள ஏதுவாகவே இது வடிவமைக்கப்பட்டு இருக்கும். இது குறிப்பாக மிகவும் நெரிசலான போக்குவரத்து நேரங்களில் மிகுந்த உதவியாக இருக்கும். இந்த இ-கிளட்ச் சிஸ்டத்தின் துள்ளியமான இயக்கத்திற்காக ஓர் மின்னணு கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தை ஹோண்டா பயன்படுத்தி இருக்கின்றது.
இதுவே அனைத்து நிலைகளிலும் சீரான செயல்பாட்டை உறுதி செய்கிறது. மேனுவல் கிளட்ச் பயன்பாட்டுடன் ஒப்பிடுகையில், இந்த அமைப்பு மென்மையான தொடக்கம், கியர் மாற்றுதல் மற்றும் நிறுத்துதல் ஆகியவற்றை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், இந்த இ-கிளட்ச் அம்சம் வழங்கப்பட்டு இருந்தாலும், கூடுதலாக மேனுவல் கிளட்ச் லீவரும் அதில் வழங்கப்படும் என கூறப்படுகின்றது.

எனவே இ-கிளட்ச் செயலில் இருந்தாலும், ரைடர்கள் இந்த லிவரைப் பிடித்து மேனுவலாக இயக்கிக் கொள்ள முடியும் என ஹோண்டா கூறுகிறது. ஆகையால், ஹோண்டாவின் இந்த அம்சத்தை வெறுப்பவர்களே இருக்க முடியாது என தெரிகின்றது. குறிப்பாக, இந்த தொழில்நுட்பம் அடிக்கடி கிளட்ச் பயன்படுத்தும் நீக்கும் என்பதால், இந்த அம்சத்திற்காக பைக்கை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது.
ஆனால், ஹோண்டா நிறுவனம் இந்த அம்சத்தை எப்போது அறிமுகம் செய்யும் மற்றும் எந்த பைக் மாடலில் முதலில் அறிமுகப்படுத்தும் என்பது பற்றிய எந்தவொரு விபரங்களையும் இதுவரை வெளியிடவில்லை. அதேவேளையில், நிறுவனத்தின் பிரீமியம் ரக மோட்டார்சைக்கிளிலேயே இந்த அம்சம் முதலில் இடம் பெறும் என நம்பப்படுகின்றது.
ஹோண்டா நிறுவனத்தைப் போலவே சுஸுகி நிறுவனம் அதன் இரண்டு சக்கர வாகனங்களில் ரியர் வியூ கேமிராக்களை வழங்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி பின் பக்கத்தை இரண்டு சக்கர வாகன ஓட்டி பார்க்க வேண்டும் எனில் கண்ணாடியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற சூழல் உள்ளது.
இந்த நிலையிலேயே, இந்த குறையைப் போக்கி பைக்கின் முன் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கும் திரை வாயிலாகவே பின்னால் நடப்பவற்றைக் காணும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சியில் சுஸுகி களமிறங்கி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஹோண்டா நிறுவனமும் புதுமையான அம்சமாக இ-கிளட்ச் அம்சத்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தன்னுடைய டூ-வீலர்களின் பக்கம் மேலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியாக ஹோண்டா நிறுவனம் அதன் இரண்டு சக்கர வாகனங்களில் புதிய மற்றும் நவீன கால தொழில்நுட்ப வசதிகளை அறிமுகம் செய்வதில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








