ஸ்கூட்டர் பார்க்கவே ஒரு தினுசா இருக்கே... ஓலாவுக்கு சரியான போட்டி ரெடி!!
உலகளவில் மிக பெரிய எலக்ட்ரிக் 2-வீலர் சந்தை என்று பார்த்தால், அதில் நமது இந்தியாவும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில், அந்த அளவிற்கு எலக்ட்ரிக் 2-வீலர்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, புது, புது வெளிநாட்டு இவி நிறுவனங்கள் இந்திய மார்க்கெட்டில் அடுத்தடுத்து களம்புகுக்கின்றன. இந்த வகையில், இத்தாலி நாட்டை சேர்ந்த ஒரு எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனம் இந்தியாவில் தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. எந்த நிறுவனம் அது? அதன் தயாரிப்புகள் எப்படிப்பட்டவை? என்பது உள்ளிட்ட விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வி.எல்.எஃப் (VLF), இத்தாலியை சேர்ந்த எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனம். 1993ஆம் ஆண்டில் அலெசாண்ட்ரோ டார்டரினி என்பவரால் நிறுவப்பட்ட இந்த இவி நிறுவனம் அதன் இத்தாலியன் ஸ்டைல் 2-வீலர்கள் மூலமாக ஐரோப்பாவில் கணிசமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்திய 2-வீலர் சந்தையில் நுழைய விஎல்எஃப் திட்டமிட்டுள்ளது.

இதற்காக கவ் வெலோஸ் மோட்டார்ஸ் என்கிற தனியார் நிறுவனத்துடன் வி.எல்.எஃப் இணைய உள்ளது. இந்த இத்தாலியன் நிறுவனம் இந்தியாவில் முதற்கட்டமாக மேற்கொள்ளவுள்ள முக்கியமான நடவடிக்கை என்னவென்றால், இந்தியாவிலேயே உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதாகும். இதற்காகவே முக்கியமாக கவ் வெலோஸ் நிறுவனத்துடன் விஎல்எஃப் நிறுவனம் கூட்டணி சேர்கிறது.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, மஹாராஷ்டிரா மாநிலம் கொல்காபுர் என்கிற பகுதியில் இந்த இத்தாலி நிறுவனம் தொழிற்சாலையை நிறுவ உள்ளது. இந்த தொழிற்சாலை பணிகளுக்காக மட்டுமின்றி, அங்கு உற்பத்தி செய்யப்படும் எலக்ட்ரிக் வாகனங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதற்காகவும் கவ் வெலோஸ் நிறுவனத்தின் உதவியை நாட விஎல்எஃப் திட்டமிட்டுள்ளது.

வாகனங்கள் தயாரிப்பில் கவ் வெலோஸ் நிறுவனத்துக்கு சுமார் 60 வருடங்கள் அனுபவம் உள்ளது. இத்தாலி-ஸ்டைல் ஸ்கூட்டர்கள் கொஞ்சம் வித்தியாசமாகவும், புதுமையானதாகவும் இருக்கும் என்பதை ஏற்கனவே ஏப்ரிலியா, வெஸ்பா ஸ்கூட்டர்களில் பார்த்துள்ளோம். அவற்றிற்கு, விஎல்எஃப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எந்த விதத்திலும் சளைத்தவை கிடையாது.
"மிகவும் போட்டி மிகுந்த மற்றும் தொடர்ந்து வளர்ந்துவரும் சந்தையில் ஸ்டைலான மற்றும் வலுவான ஆளுமை கொண்ட தயாரிப்புகளை நாம் உருவாக்குவோம்" என்கிற அலெசாண்ட்ரா டார்டரினியின் கொள்கையின்படி விஎல்எஃப் செயல்பட்டு வருகிறது. அலெசாண்ட்ராவின் இந்த கோட்பாட்டிற்கு மிகவும் சரியான நாடு நம் இந்தியா ஆகும்.
முதற்கட்டமாக வருகிற தீபாவளி பண்டிகை காலத்தில், இத்தாலியில் விற்பனையில் உள்ள டென்னிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்ய வி.எல்.எஃப் திட்டமிட்டு வருகிறது. அதற்கு முன்னதாக, தங்களது பிராண்டை இந்தியா முழுவதும் விளம்பரப்படுத்தும் பணியிலும் விஎல்எஃப் ஈடுப்பட உள்ளது. இதன்படி, ரோடு ஷோக்கள் மற்றும் ஆட்டோ எக்ஸ்போ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வது போன்ற செயல்பாடுகளில் விஎல்எஃப் தன்னை உட்படுத்த உள்ளது.
அதேபோல், இந்தியா முழுவதும் டீலர்ஷிப் நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவதிலும் வி.எல்.எஃப் தீவிரமாக உள்ளது. முடிந்தவரையில், இந்த 2024ஆம் ஆண்டிற்குள் 15 டீலர்ஷிப் மையங்களை நிறுவ வி.எல்.எஃப் விரும்புகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிவதற்குள் இதனை 50 ஆக அதிகரிக்க வி.எல்.எஃப் திட்டமிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்டைலிஷான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வழங்கும் திறன் கொண்டிருப்பதால், வி.எல்.எஃப்-இன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கவனத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பொதுவாகவே இத்தாலியன் நிறுவனங்களின் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விலைமிக்கவையாக விளங்குகின்றன. இந்த விஷயத்தில் வி.எல்.எஃப் சரியான முடிவை எடுத்தால்தான், இந்திய மார்க்கெட்டில் நிலைத்து நிற்க முடியும்.


Click it and Unblock the Notifications








