அந்த நாட்டுக்கே நாம தான் சப்ளை... கப்பலில் செல்லும் மேட்-இன்-இந்தியா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!!
ஏத்தர் எனர்ஜி (Ather Energy), இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்திற்கு நம் தமிழ்நாட்டில் ஓசூரில் தொழிற்சாலை உள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஓசூரில் இரு தொழிற்சாலைகளை ஏத்தர் எனர்ஜி கொண்டுள்ளது. இந்த அளவிற்கு சமீப காலத்தில் வளர்ச்சி கண்டுள்ள ஏத்தர் எனர்ஜி இந்தியாவை தாண்டி ஒரு வெளிநாட்டில் தனது வணிகத்தை துவங்கியுள்ளது. இந்த நிலையில், அந்த நாட்டிற்கான ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் நீண்ட வருடங்களாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் ஈடுப்பட்டுவரும் நிறுவனங்களுள் ஏத்தர் எனர்ஜியும் ஒன்றாகும். ஆரம்ப காலக்கட்டத்தில் செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே உற்பத்தி செய்துவந்த ஏத்தர் எனர்ஜி சமீபத்தில் ரிஸ்டா என்கிற பெயரில் தினசரி பயன்பாட்டிற்கான விலை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.

இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநகரங்களில் ஏத்தர் எனர்ஜி தனது சந்தையை விரிவுப்படுத்திவிட்டது. இதனால், சமீப காலமாக இந்தியாவின் அண்டை நாடுகளின் மீது ஏத்தர் எனர்ஜியின் கவனம் விழ ஆரம்பித்தது. அதன்படி, இலங்கையிலும் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வணிகத்தை விரிவுப்படுத்துவதாக சில மாதங்களுக்கு முன் ஏத்தர் எனர்ஜி தெரிவித்தது.
இந்த நிலையில், இலங்கை நாட்டில் விற்பனை செய்யப்படுவதற்கான ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் முதல் தொகுப்பு இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஓசூரில் உற்பத்தி செய்யப்பட்ட ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சென்னை துறைமுகம் வழியாக இலங்கைக்கு கப்பலில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அப்போது எடுக்கப்பட்ட படங்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தை நிறுவியவரும், தற்போதைய சிஇஓ-வுமான தருண் மெஹ்தா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் பதிவில், "ஏத்தரின் 2வது சர்வதேச சந்தை இந்த பண்டிகை காலத்தில் இருந்து நேரலையை துவங்கவுள்ளது. இந்தியாவில் உள்ள எங்களது தொழிற்சாலையில் இருந்து முதல் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இலங்கைக்காக சென்றுள்ளன" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அங்கு புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி சமயத்தின்போது டெலிவிரி செய்ய ஏத்தர் எனர்ஜி திட்டமிட்டுள்ளது. இலங்கையில் இந்த ஸ்கூட்டரின் விலை எவ்வளவு என்பதை இன்னும் ஏத்தர் எனர்ஜி அறிவிக்கவில்லை. இந்த நாட்டில் நுழைய போகும் விஷயத்தை கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் ஏத்தர் எனர்ஜி அறிவித்தது.

வரவிருக்கும் தீபாவளி பண்டிகை காலத்திற்குள் இலங்கையில் முதல் ஷோரூமை திறக்கும் முயற்சியில் ஏத்தர் எனர்ஜி உள்ளது. இதற்காக அட்மன் க்ரூப்பின் சென்சே கேபிட்டல் பார்ட்னர்ஸ் மற்றும் சினோ லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுடன் ஏத்தர் எனர்ஜி கூட்டணியில் உள்ளது. ஸ்கூட்டரை வாங்குபவர்களுக்காக இலங்கையில் இவி ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை நிறுவும் முயற்சியிலும் ஏத்தர் எனர்ஜி உள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அதே 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் இலங்கையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.55 லட்சம் ஆகும். இந்தியாவில் ஸ்டாண்டர்ட் மற்றும் புரோ என 2 விதமான வேரியண்ட்களில் ஏத்தர் 450 விற்பனை செய்யப்படுகிறது. இதில் பொருத்தப்படும் 2.9kWh பேட்டரி முழு சார்ஜில் அதிகப்பட்சமாக 115கிமீ தொலைவிற்கு ஸ்கூட்டரை இயக்கி செல்லும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவை தாண்டி ஏத்தர் எனர்ஜி சென்றிருக்கும் இரண்டாவது வெளிநாடு இலங்கை ஆகும். முன்னதாக, கடந்த ஆண்டில் நேபாளத்தில் தனது வணிகத்தை ஏத்தர் எனர்ஜி துவங்கியது. ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யாமல், முதலாவதாக செயல்திறன்மிக்க, அதேநேரம் விலை குறைவான 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருப்பதில் இருந்து இலங்கையில் தன்னை காஸ்ட்லீயான பிராண்டாக காட்டிக் கொள்ள ஏத்தர் எனர்ஜி விரும்புவது தெரிகிறது.


Click it and Unblock the Notifications









