பெட்ரோல் ஸ்கூட்டரே விற்பனையாக கூடாதுனு முடிவு பண்ணிருச்சா இந்த ஓலா.. அநியாயத்துக்கான விலையை கம்மி பண்ணிருக்கு!
தன்னுடைய மின்சார இரண்டு சக்கர வாகனத்தின் (Electric Two Wheeler) பக்கம் இந்தியர்களை ஈர்க்கும் பொருட்டு ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் மாபெரும் விலை தள்ளுபடியை தற்போது அறிவித்து இருக்கின்றது. பொதுவாக வாகன உற்பத்தியாளர்கள் விழாக் காலத்தின்போதே சலுகைகளை அறிவிப்பர்.
ஆனால், இந்த ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பெட்ரோல் டூ-வீலர்களை விற்பனையில் இருந்து ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிற ஒற்றை நோக்கிலேயே அவ்வப்போது சிறப்பு சலுகைகளை அறிவித்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், தற்போது ரூ. 25 ஆயிரம் வரை அது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையைக் குறைத்து நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

இந்த விலைக் குறைப்பானது ஓலாவின் எஸ்1 வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து தேர்வுகளுக்கும் பொருந்தும். மேலும், இந்த விலை தள்ளுபடியை #EndICEAge இன் கீழே நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. என்ட் ஐஸ் ஏஜ் என்பது ஹாலிவுட் திரைப்படத்தைக் குறிக்கும் சொல் அல்ல. இது ஐசிஇ எஞ்ஜின் கொண்ட வாகனங்களைக் குறிக்கும் சொல்லாகும்.
இதன் அடிப்படையிலேயே ரூ. 25 ஆயிரத்திற்கான தள்ளுபடியை ஓலா எலெக்ட்ரிக் அறிவித்து இருக்கின்றது. இந்த விலை குறைப்பால் எஸ்1 ப்ரோ (S1 Pro) தேர்வின் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 999ஆகவும், எஸ்1 ஏர் (S1 Air) தேர்வின் விலை 1 லட்சத்து 04 ஆயிரத்து 999ஆகவும் மற்றும் எஸ்1 எக்ஸ் பிளஸ் (S1 X+) தேர்வின் விலை ரூ. 84,999 ஆகவும் குறைந்திருக்கின்றது.

இந்த விலை குறைவால் ஓலாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அனைவருக்குமான மின்சார ஸ்கூட்டராக மாறி இருப்பது தெரிய வந்து இருக்கின்றது. அதாவது, ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை குறைக்கப்பட்டு இருப்பதால் அடித்தட்டு மக்களாலும் நுகரும் வாகனமாக ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மாறி இருக்கின்றன.
மற்றுமொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனமே இந்தியாவின் முதல் டொமஸ்டிக் வேல்யூ அடிசன் எனும் சான்றை பெற்ற நிறுவனம் ஆகும். பிஎல்ஐ திட்டத்தின் வாயிலாகவே இந்த சான்றை அது பெற்றிருக்கின்றது. பிஎல்ஐ சான்று என்பது முழுக்க முழுக்க உற்பத்தி உள்ளூர் மயமாக்கப்பட்ட மற்றும் உள்ளூர் தயாரிப்புகளை மட்டுமே வாகன தயாரிப்பில் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சான்றாகும்.
இதன் அடிப்படையிலேயே மத்திய அரசு அதன் மானிய திட்டத்தை வழங்குகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. எனவே நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தடையின்றி மானியம் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே எஸ்1 வரிசையில் உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையைக் குறைத்து இருக்கின்றது, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம்.
இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களைத் தன் வசம் ஈர்க்கும் பொருட்டு அதன் தயாரிப்புகளின் விலையை குறைப்பது மட்டுமின்றி, மேலும் சில திட்டங்களையும் வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், சமீபத்தில் ஓலா எலெக்ட்ரிக் அதன் சேவை விரிவாக்கம் திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, அடுத்த சில மாதங்களில் சர்வீஸ் மையங்கள் மற்றும் சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையை பலமடங்காக அதிகப்படுத்த இருப்பதை அது வெளிப்படுத்தியது.
இதுதவிர, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு வாரண்டி காலத்தையும் அது அதிகப்படுத்தயது. இப்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் ஓலா நிறுவனத்தின் கீழ் 400 சர்வீஸ் மையங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இதேபோல் 1,000 மின்சார சார்ஜிங் மையங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றின் எண்ணிக்கையையே அதிகப்படுத்த இருப்பதாக ஓலா தெரிவித்து இருக்கின்றது.
அதாவது, சர்வீஸ் மையத்தை 50 மடங்கு அதிகப்படுத்தவும், சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையை 10 ஆயிரமாகவும் உயர்த்தவும் அது திட்டமிட்டுள்ளது. மேலும், அடுத்த காலாண்டிற்குள் ஹைப்பர்சார்ஜர் மையங்களின் எண்ணிக்கையை 9 மடங்கு அதிகப்படுத்தவும் அது பிளான் போட்டுள்ளது. இவை அனைத்தும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெட்ரோல் டூ-வீலர்களுக்கு மிகப் பெரிய போட்டியை வழங்க வேண்டும் என்கிற எண்ணத்திலேயே ஓலா எலெக்ட்ரிக் இருக்கின்றது. இதன் வெளிப்பாடாகவே தற்போது அது சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கின்றது. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்த விலைக்கு நடைமுறையில் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இந்த மாத இறுதி வரை மட்டுமே விலை குறைவாக ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








