ரிமைண்டர், அலாரம்-னு எல்லாத்தையும் செட் பண்ணி வச்சுக்கோங்க.. ராயல் என்பீல்டு இ-பைக் அறிமுக தேதி இதுதான்!
சென்னையை தலைமையமாகக் கொண்டு இயங்கும் உலகப் புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு (Royal Enfield), இப்போதைய நிலவரப்படி ஐசிஇ (பெட்ரோலில் இயங்கும்) மோட்டார்சைக்கிள்கள் தயாரிப்பில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே அது பெட்ரோல் டூ-வீலரை மட்டுமல்ல மின்சார இரண்டு சக்கர வாகனங்களை தயாரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், அது சீக்கிரமே அந்த மின்சாரத்தில் மோட்டார்சைக்கிளை அது வெளியீடு செய்ய இருக்கிறது என்கிற தகவலும் தற்போது வெளியாகி இருக்கின்றது.
வருகின்ற நவம்பர் மாதம் 4 ஆம் தேதி அன்றே அது அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ராயல் என்பீல்டு நிறுவனம் ஓர் டீசர் வீடியோவை அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கின்றது. விண்வெளியில் இருந்து ஓர் 'டிராப்' (Drop) பூமியை நோக்கி வருவதைப் போன்ற வீடியோவையே அது வெளியிட்டு இருக்கின்றது.

அதாவது, பாராசூட்டில் ஓர் பைக் பூமியை நோக்கி வருவதைப் போன்ற காட்சிகளே இடம் பெற்றிருக்கின்றன. அத்துடன், கடைசியாக '04.11.2024' தேதியும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. இந்த நாளையே குறித்து வைத்துக் கொள்ளுமாறு ராயல் என்பீல்டு தெரிவித்திருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, ராயல் என்பீல்டு இவி (Royal Enfield EV) எனும் புதிய கணக்கையும் சமூக வலைதளங்களில் தொடங்கி இருக்கின்றது.
இந்த கணக்கையும் டேக் செய்தே ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது வீடியோவை வெளியிட்டு இருக்கின்றது. இந்த பைக் அறிமுகம் செய்யப்படும் எனில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் மின்சார பைக்காக இது அமையும். டீசர் படத்தின் வாயிலாக மற்றுமொரு முக்கிய தகவலும் தற்போது தெரிய வந்திருக்கின்றது.
ஃப்யூவல் டேங்க் போன்ற அமைப்பை இந்த எலெக்ட்ரிக் பைக் கொண்டிருக்கும் என்பதும், அதற்கு மேல் ஓர் மூடி போன்ற அமைப்பும் இடம் பெற்றிருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், இ-பைக்கை சார்ஜ் செய்துக் கொள்வதற்கான போர்ட் அந்த ஃப்யூவல் டேங்க் போன்ற அமைப்பின் மீது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் வீடியோவின் அடிப்படையில் இது சிங்கிள் சீட்டர் டூ-வீலராக இருக்கலாம் என்றும் தெரிகின்றது. ஆனால், இந்த தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. விரைவில் எலெக்ட்ரிக் பைக் பற்றிய அனைத்து முக்கிய தகவல்களையும் ராயல் என்பீல்டு நிறுவனம் வெளியீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போது வெளியிட்டு இருக்கும் வெளியீடு தேதியை தவிர, இப்போது வரை ஒரு சின்ன தகவலைகூட ராயல் என்பீல்டு நிறுவனம் தன்னுடைய முதல் இ-பைக் பற்றி அதிகரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே ராயல் என்பீல்டு இ-பைக்கின் மீதான எதிர்பார்ப்பு மிகப் பெரிய அளவில் அதிகரித்துக் காட்சியளிக்கின்றது.
குறிப்பாக, அது எப்படி இருக்கும்? என்ன என்ன அம்சங்களைத் தாங்கி இருக்கும்? என்ன வேகத்தில் பயணிக்கும்? என பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தியா மற்றும் உலக சந்தையில் இப்போதைய நிலவரப்படி மிகப் பெரிய அளவில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்துக் காணப்படுகின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே ராயல் என்பீல்டு அதன் முதல் எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரும் பணயில் களமிறங்கி இருக்கின்றது. இது கிளாசிக் ஸ்டைலில் இருக்கும் என தெரிகின்றது. வட்ட வடிவ ஹெட்லைட், வட்ட வடிவ பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடி உள்ளிட்டவை இருக்கும் என கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி ரிவோல்ட், அல்ட்ராவைலட், ஒடைசி, மேட்டர் மற்றும் ஓலா போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே இ-பைக் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களின் வரிசையிலேயே விரைவில் ராயல் என்பீல்டு நிறுவனமும் இணைய இருக்கின்றது. ரூ. 5 லட்சத்திற்கும் குறைவான விலையிலேயே இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








