85சதவீதம் எத்தனால் கலந்தாலும் இந்த பைக் நிக்காம சூப்பரா ஓடும்.. ஊரே இந்த கிளாசிக் 350 பைக்க பத்திதான் பேசுது!
தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், 'பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024' நடைபெற்று வருகின்றது. இத்தகைய ஓர் எக்ஸ்போ இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். ஆட்டோமொபைல்ஸ் துறை சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமுக வாகனங்களை காட்சிப்படுத்தும் ஓர் மேடையே இதுவாகும்.
உலக நாடுகள் பலவற்றில் இருந்து எண்ணற்ற நிறுவனங்கள் கலந்துக் கொண்டு தங்களின் வருகையை பதிவு செய்திருக்கின்றன. அந்தவகையில், இந்த சிறப்பு மேடையை பயன்படுத்தி முன்னணி நிறுவனங்கள் சில அவர்களின் புதுமுக வாகனங்கள் மற்றும் வாகன உலகம் சார்ந்த தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில், முதல் நாளான நேற்றைய தினத்தில் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு, அதன் புகழ்பெற்ற மோட்டார்சைக்கிள் மாடலான கிளாசிக் 350-ஐ வெளியீடு செய்தது. இந்த பைக்தான் ஏற்கனவே விற்பனையில் இருக்கிறதே இதை ஏன் இந்த உலக அரங்கில் வைத்து ராயல் என்பீல்டு காட்சிப்படுத்த வேண்டும் என்கிற கேள்வி உங்களுக்கு எழும்பி இருக்கலாம்.
இது தற்போது விற்பனையில் இருக்கும் கிளாசிக் 350இல் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். இது ஓர் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வகை வாகனம் ஆகும். ஆமாங்க, இந்த வாகனத்தால் 85 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளிலும் இயங்க முடியும். இத்தகைய சிறப்பு வசதிக் கொண்ட மோட்டார்சைக்கிளாகவே கிளாசிக் 350 உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

இதனையே ராயல் என்பீல்டு நிறுவனம் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024-இல் காட்சிப்படுத்தி இருக்கின்றது. இந்த வாகனத்தை தனித்துவமான நிற தேர்வால் ராயல் என்பீல்டு அலங்கரித்து இருக்கின்றது. ஃப்யூவல் டேங்க் மற்றும் சைடு பேனல் ஆகிய இரண்டிலும் டூயல் டோன் நிறங்களை அது வழங்கி இருக்கின்றது.
இதனால் மாடிஃபை செய்யப்பட்ட வாகனத்தை போல அந்த கிளாசிக் 350 காட்சியளிக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் தனித்துவமான தோற்றத்தில் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் கிளாசிக் 350 தெரிகின்றது. கிளாசிக் 350இல் இருக்கும் அதே எஞ்சினே மிகவும் லேசான மாற்றங்களே செய்யப்பட்டு இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.
ஆகையால், பெட்ரோல் மற்றும் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் ஆகிய இரண்டு கிளாசிக் 350 பைக்குகளும் ஒரே மாதிரியான திறனையே வேளியெற்றும் என்றும் கூறப்படுகின்றது. அந்தவகையில், 20.2 எச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் அது வெளியேற்றும். மேலும், 5 ஸ்பீடு கியர்பாக்ஸே இரண்டிலும் இடம் பெற இருக்கின்றது.
இதே எஞ்சினே மீட்டியோர், ஹண்டர் மற்றும் புல்லட் ஆகிய பைக்குகளிலும் இடம் பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. எஞ்சினை போலவே சிறப்பம்சங்கள் விஷயத்திலும் வழக்கமான பெட்ரோல் கிளாசிக் 350 மற்றும் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் கிளாசிக் 350 ஆகிய இரண்டும் ஒற்றுமையுடனேயே இருக்கும் என தெரிகின்றது.
ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் புதிய ஜே-பிளாட்பாரத்தை பயன்படுத்தியே கிளாசிக் 350 பைக்கை உற்பத்தி செய்திருக்கின்றது. இந்த பிளாட்பாரத்தின் வாயிலாகவே நடுத்தர டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ட்ரிப்பர் நேவிகேஷன் உள்ளிட்ட நவீன அம்சங்களை புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கில் ராயல் என்பீல்டு வழங்கியிருக்கின்றது.
மேலும், இந்த பைக் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், கொரியா, ஆஸ்திரேலியாக மற்றும் நியூசிலாந்து என பல நாடுகளில் கிளாசிக் 350 பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே மற்ற நாடுகளிலும் கிளாசிக் 350 பைக்கிற்கு வரவேற்பு அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, ஆண் மற்றும் பெண் என இருபாலரையும் கவர்ந்த மோட்டார்சைக்கிளாகவும் கிளாசிக் 350 காட்சியளிக்கின்றது. இத்தகைய ஓர் பைக்கையே தற்போது தயாரிப்பு நிறுவனம் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனமாக தயார் செய்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








