சுஸுகி பைக்கை வாங்கிட்டு இந்த கஷ்டத்தையும் அனுபவிக்கனுமா!! மறுபடியும் ஷோரூமுக்கு கொண்டு போங்க!
சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் (Suzuki Motorcycles) நிறுவனம் விற்கப்பட்ட அதன் ஜிக்ஸெர் (Gixxer) மற்றும் வி-ஸ்ட்ரோம் (V-Strom) பைக்குகளில் முறையாக உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்படாததை கண்டறிந்துள்ளது. இதனையடுத்து குறிப்பிட்ட நாட்களில் உற்பத்தி செய்யப்பட்ட சுஸுகி ஜிக்ஸெர் மற்றும் வி-ஸ்ட்ரோம் பைக்குகள் திரும்ப அழைக்கப்பட்டு உள்ளன.
விற்கப்பட்ட வாகனங்களில் ஏதேனும் பழுதுகளையோ அல்லது சிறப்பான பாகம் பொருத்தப்படாததையோ உற்பத்தி செய்த நிறுவனம் கண்டறிந்தால், அந்த வாகனங்கள் மீண்டும் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு திரும்ப அழைக்கப்படுவது அரிதாக நடக்கக்கூடியது. என்றாலும், கிட்டத்தட்ட அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இவ்வாறு தங்களது வாகனங்களை திரும்ப அழைத்துள்ளன.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுஸுகி கூட அவ்வாறு தனது கார்களை திரும்ப அழைத்ததை கடந்த வருடங்களில் பார்த்துள்ளோம். அந்த வரிசையில், சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் ஜிக்ஸெர் 250, ஜிக்ஸெர் எஸ்.எஃப்250 மற்றும் வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ் பைக்குகளை திரும்ப அழைத்துள்ளது. இந்த பைக்குகளின் என்ஜின் கேம்ஷாஃப்ட்டில் பிரச்சனையை கண்டறிந்ததை அடுத்து, இந்த திரும்ப அழைக்கும் முடிவை சுஸுகி கையில் எடுத்துள்ளது.
மேற்கூறப்பட்ட ஜிக்ஸெர் மற்றும் வி-ஸ்ட்ரோம் பைக்குகளில் 249சிசி, ஆயில்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் சிஸ்டத்தில் இடம்பெறுகின்ற எக்ஸாஸ்ட் கேம் லோப் பாகம் முறையாக பொருத்தப்படாததை சுஸுகி நிறுவனம் கண்டறிந்துள்ளது. என்ஜினை உருவாக்கும்போது அதன் சில பகுதிகளுக்கு சரியான முறையில் ஹீட் ட்ரீட்மெண்ட் கொடுக்காததினால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என சோதனைகளின் மூலம் சுஸுகி அறிந்துக் கொண்டுள்ளது.

இந்த பிரச்சனை உடைய என்ஜினை கொண்ட ஜிக்ஸெர் மற்றும் வி-ஸ்ட்ரோம் பைக்குகள் சடர்னாக பிரேக் கொடுக்கும்போது சற்று தடுமாற்றங்களை காணும் எனவும், அத்துடன் என்ஜின் பகுதியில் இருந்து இரைச்சல்களும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சுஸுகி கண்டறிந்துள்ளது. எந்த நாளில் இருந்து எந்த நாள் வரையில் உருவாக்கப்பட்ட சுஸுகி ஜிக்ஸெர் மற்றும் வி-ஸ்ட்ரோம் பைக்குகளில் இந்த பிரச்சனை இருக்கும் என்பது தெரியவில்லை.
சுஸுகி டீலர்கள் இவ்வாறு பாதிப்புக்கு உள்ளான என்ஜினை கொண்ட பைக்குகள் ஏராளமானவற்றை இதுவரையில் அடையாளம் கண்டுள்ளனர். அத்துடன், அவற்றை வாங்கிய வாடிக்கையாளர்களையும் சுஸுகி டீலர்கள் தொடர்புக் கொண்டு வருகின்றனர். சுஸுகி குறிப்பிடும் பாதிப்புக்கு உள்ளான என்ஜினை கொண்ட ஜிக்ஸெர் மற்றும் வி-ஸ்ட்ரோம் எஸ்.எஃப்250 பைக்குகள் சுஸுகியின் சர்வீஸ் செண்டரில் பழுதுப் பார்த்து கொடுக்கப்படும்.

இந்த சர்வீஸுக்கு கட்டணம் எதுவும் கிடையாது, இலவசமாக செய்துக் கொடுக்கப்படும் என சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த திரும்ப அழைப்பு நடவடிக்கை குறித்து இதுவரையில் எந்தவொரு அறிவிப்பும் சுஸுகி நிறுவனத்தில் இருந்து வெளி வரவில்லை.
சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகள் இவ்வாறு பழுது காரணமாக திரும்ப அழைக்கப்படுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. இதற்கு முன் ஏற்கனவே 2021இல் அதிக என்ஜின் அதிர்வுகள் காரணமாக ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் 250 எஸ்.எஃப் பைக்குகளை திரும்ப அழைத்து இருந்தது. அந்த சமயத்தில் மொத்தம், 199 ஜிக்ஸெர் பைக்குகள் திரும்ப அழைக்கப்பட்டு இருந்தன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பழுது காரணமாக விற்கப்பட்ட வாகனங்கள் திரும்ப அழைக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இத்தகைய நடவடிக்கைகள் சுஸுகி நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை வாடிக்கையாளர்கள் மத்தியில் குறைக்க நேரிடும். என்னதான் பழுதை இலவசமாக சரிப் பார்த்துக் கொடுத்தாலும், ஜிக்ஸெர் மற்றும் வி-ஸ்ட்ரோம் எஸ்.எஃப்250 பைக்குகளை வைத்திருப்பவர்களுக்கு தங்களது பைக்குகளின் மீது முழு நம்பிக்கை ஏற்படாது.


Click it and Unblock the Notifications









