திரும்பி திரும்பி பார்த்துக்கிட்டே போகனும்ற அவசியம் இருக்காது.. அப்படி ஒரு அம்சத்தை தயாரிக்கும் சுஸுகி!
உலகின் முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் சுஸுகி-யும் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலக அளவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவிலும் சுஸுகியின் டூ-வீலர்களுக்கு சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே உலக இரண்டு சக்கர வாகன காதலர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, அந்நிறுவனம் ஓர் சூப்பரான அம்சத்தை இரண்டு சக்கர வாகனங்களுக்காக ரெடி செய்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாதுகாப்பான பயணத்தை வாகன ஓட்டிகளுக்கு உறுதிப்படுத்தும் நோக்கில், அந்நிறுவனம் முன் பக்கத்திலேயே வாகனத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது என்பதைக் காண்பதற்கான வசதியை ஏற்படுத்தி தரும் முயற்சியிலேயே களமிறங்கி இருக்கின்றது. அதாவது, பைக்கின் திரையில் பின்னால் நடப்பவற்றைக் காட்சிப்படுத்தும் கருவியையே தன்னுடைய இரண்டு சக்கர வாகனங்களில் அறிமுகம் செய்வதற்கான பணியில் சுஸுகி நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது.

இன்றைய நிலவரப்படி கார்களில் மட்டுமே இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் விற்பனையில் இருக்கும் எந்த இரண்டு சக்கர வாகனத்திலும் இந்த அம்சத்தை காண முடியாது. மேலும், இரண்டு சக்கர வாகனங்களுக்கு இந்த அம்சம் முற்றிலும் புதிது என்றே கூறலாம். இப்போதையை நிலவரப்படி இரண்டு சக்கர வாகனங்களில் பயணிக்கும்போது பின் பக்கத்தை பார்க்க வேண்டும் என்றால் ரியர் வியூ கண்ணாடிகள் வாயிலாக மட்டுமே பார்க்க முடியும்.
இல்லை என்றால் தலையை திருப்பி பார்க்கலாம். ஆனால், இது மிகவும் ஆபத்தான செயல் ஆகும். பலர் இவ்வாறு செய்தபோது மிகப் பெரிய ஆபத்தான சூழலுக்கு சிக்கியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், ரியர் வியூ கண்ணாடிகளும் வேகம் மற்றும் அதிர்வுகளின் காரணமாக அவை திசை மாறக் கூடும். இந்த மாதிரியான சூழல், வாகன இயக்கத்தில் இருக்கும் கவனத்தை திசை திருப்பி அதை சரி செய்ய நோக்கி நகர்த்தும்.

இந்த நிலையும் ஆபத்தான சூழலை ஏற்படுத்தக் கூடும். மேலும், ரியர் வியூ கண்ணாடிகளில் பிளைண்ட் ஸ்பாட் பிரச்னையும் உள்ளது. இந்த அனைத்து ஆபத்தான சூழல்களையும் கருத்தில் கொண்டே சுஸுகி நிறுவனம் இரண்டு சக்கர வாகனங்களில் பின் பக்கத்தை முன் பக்க திரையிலேயே காண்பதற்கான வசதி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது.
இந்த அம்சத்தை உருவாக்குவதற்காக சுஸுகி நிறுவனம் டோகைய் ரிகா எனும் நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது. இவர்கள் இருவரும் இணைந்தே இரண்டு சக்கர வாகனங்களுக்கான ரியர் வியூ கேமிராவை தயார் செய்ய இருக்கின்றனர். இந்த கேமிரா பைக்கின் வால் பகுதியில் நிலை நிறுத்தப்படும். பின் பக்கத்தில் நடைபெறும் காட்சிகளை இது அப்படி முன்பக்கத்தில் இருக்கும் டிஎஃப்டி திரை வாயிலாகக் காண்பிக்கும் வகையில் அது அந்த திரையுடன் இணைக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த கேமிரா சிறிய வாகனத்தின் நடமாட்டத்தையும் தெளிவாக காண்பிக்கும். எனவே பைக்கைச் சுற்றி நடைபெறுவதை எந்தவொரு சிக்கலுமின்றி கண்டுக்கொள்ள முடியும். அதேநேரத்தில், கண்ணாடிகளைப் போலவே, இந்த கேமராவும் பின்னால் இருக்கும் வாகனங்களின் தூரத்தை துள்ளியமாக தெரிவிக்காது. இதை சுஸுகியும் ஒப்புக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையைச் சமாளிக்க, திரையில் காட்சிகளை பெரிதாகக் காண்பிப்பதற்கான பணியில் சுஸுகி களமிறங்கி இருக்கின்றது. இதன் வாயிலாக ரைடர்களால் ஓரளவிற்கு தூரத்தை திறம்பட கணிக்க முடியும் என நம்பப்படுகின்றது.
ஆனால், இந்த அம்சத்தை எப்போது தன்னுடைய இரண்டு சக்கர வாகனங்களில் வழங்கும் என்பதை சுஸுகி இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இப்போது வரை வழக்கமான கண்ணாடிகளே பின்பக்கத்தை பார்ப்பதற்காக சுஸுகி வழங்கிக் கொண்டிருக்கின்றது. விரைவில் இந்த அம்சத்திற்கு பதிலாக அது ரியர்வியூ கேமராக்களை தன்னுடைய தயாரிப்புகளில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதலில் உயர்வகை பைக் மாடல்களிலேயே இதை சுஸுகி அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ வார்த்தைகளும் சுஸுகியிடமிருந்து வெளியாகவில்லை.
இந்த அம்சத்துடன் டூ-வீலர் விற்பனைக்கு வரும் எனில் அதற்கு இரண்டு சக்கர வாகன பிரியர்கள் மத்தியில் பேராதரவு கிடைக்கும் என நம்பப்படுகின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக மோட்டார் சைக்கிள் பயணம் மற்றும் பாதுகாப்பு திறன் பலமடங்கு மேம்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம்மில் பலர் வாகனத்தின் கவர்ச்சி தோற்றத்திற்காக ரியர் வியூ மிர்ரர்களை அகற்றிவிட்டு டூ-வீலர்களை இயக்கி வருகின்றோம். ஆபத்தை உணராமல் இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றோம். இதுமாதிரியான செயலுக்கும் போலீஸார் அபராதம் வழங்கி வருகின்றனர். ஆகையால், இந்த அம்சத்தை ஸ்டைலுக்காக பார்க்காமல் பாதுகாப்பிற்காக பார்த்து கண்ணாடிகளை மீண்டும் பொருத்திக் கொள்வதே நல்லது.


Click it and Unblock the Notifications








