16 வயசுல இப்படி ஒரு திறமையா!.. 15,000 ரூபாவ வச்சு சொந்தமா ஒரு எலெக்ட்ரிக் பைக்கையே தயார் பண்ணிட்டாரு!
மத்திய, மாநில அரசாங்கங்கள் மக்களை மின்சார வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்தும் முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக மானியம் மற்றும் வரி சலுகை உள்ளிட்டவற்றை இன்றைய தேதி நிலவரப்படியும் அரசுகள் வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவைச் சேர்ந்த ஓர் 16 வயது சிறுவன், வெறும் ரூ. 15 ஆயிரம் செலவில் எலெக்ட்ரிக் பைக்கை தயார் செய்திருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் மேலும் ஒரு சுவாரஷ்யம் என்னவென்றால் அவர் வெறும் பழைய கழிவு பொருட்களை வைத்தே அந்த எலெக்ட்ரிக் பைக்கை தயார் செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
இதனால்தான் இந்த சிறுவனை ஒட்டுமொத்த இந்திய வாகன உலகமும் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்க்கின்றது. இவரின் படைப்பு நாட்டில் நிலவும் புத்திசாலித்தனம் மற்றும் சமயோசிதத்தன்மைக்கு ஒரு சான்றாக விளங்குகின்றது. இந்த இளம் படைப்பாளியின் பெயர் ரிஸ்வான் என்பது தெரிய வந்திருக்கின்றது. பீகார் மாநிலத்தைப் பூர்வீமாகக் கொண்ட இவர் தற்போது மாநிலத்திலும், சோசியல் மீடியாவிலும் மிகவும் பிரபலமான நபராக மாறிவிட்டார்.

தன்னுடைய இந்த மின்சார வாகனத்திற்கு அவர் இவி இசட் பிளஸ் (EV Z+) எனும் பெயரைச் சூட்டி இருக்கின்றார். இவ்வாறு பொதுவெளியிலும் அவர் தன்னுடைய மின்சார பைக்கை குறிப்பிட்டு வருகின்றார். இந்த பைக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 2 மணி நேரங்கள் ஆகும் என்றும், அவ்வாறு, முழுமையாக சார்ஜ் செய்தால் 50 கிமீ தூரம் வரை அதில் பயணிக்க முடியும் என ரிஸ்வான் தெரிவித்து இருக்கின்றார்.
அலுவலகம் சென்று வர அல்லது நகர்ப்புற பயன்பாட்டிற்கு போதுமான ரேஞ்ஜ் திறன் இதுவாகும். இதுமட்டுமில்லைங்க பிரீமியம் இரண்டு சக்கர வாகங்களில் வழங்கப்படக் கூடிய திருட்டைத் தவிர்க்கும் அம்சத்தையும் இந்த இ-பைக்கில் ரிஸ்வான் வழங்கி இருக்கின்றார். சாவி வாகனத்திற்கு அருகில் இருந்தால் மட்டுமே ஸ்டார்ட் ஆகும் வகையிலேயே ரிஸ்வான் இந்த இ-பைக்கை வடிவமைத்திருக்கின்றார்.
எனவே, விலை உயர்ந்த எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கே சவால் விடுக்கும் வகையில் ரிஸ்வான் தயார் செய்த இவி இசட் பிளஸ் இ-பைக் இருப்பதை நம்மால் அறிய முடிகின்றது. இந்தியாவில் இதை விட குறைவான செலவில் வேறு யாருமே இ-பைக்கை தயாரித்திருக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதேநேரத்தில் இந்தியர்கள் பலரின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இந்த அளவு குறைவான விலைக் கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களே இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே விலை குறைவாக மின்சார வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றது என்பதை ரிஸ்வான் தன்னுடைய இ-பைக்கின் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கின்றார்.
இன்றைய நிலவரப்படி இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆனால், மலிவு விலையில் குறிப்பிட்ட சில இ-வாகனங்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக, இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவின் தலைவனாக ஓலா எலெக்ட்ரிக் விளங்கிக் கொண்டிருக்கின்றது.
மாதந்தோறும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் டூ-வீலர்களை அது விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சவால் விடும் நோக்கில் ஏத்தர் எனெர்ஜி, டிவிஎஸ் மற்றும் பஜாஜ் ஆகியவை தங்களின் பிராண்டுகளின்கீழ் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த வரிசையில் விரைவில் ஹீரோ மோட்டோகார்ப்-ம் இணைய இருக்கின்றது. இந்த நிறுவனம் அதன் விடா வி1 பிராண்டில் புதிய விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே முன்னணி நிறுவனங்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பீகார் மாநில இளைஞர் ரூ. 15 ஆயிரம் செலவில் எலெக்ட்ரிக் பைக்கைத் தயார் செய்திருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த அளவிற்கு மலிவு விலையில் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் விற்பனைக்கு கிடைக்கும் எனில் நாட்டில் பெட்ரோல் டூ-வீலர்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் மின்சார வாகனங்களே விற்பனையாகக் கூடும். ஆனால், இதற்கு சாத்தியமே இல்லை என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.


Click it and Unblock the Notifications








