ஸ்கூட்டரிலும் வருகிறது சிஎன்ஜி தேர்வு.. பஜாஜுக்கு போட்டியாக டிவிஎஸ் களமிறக்க போகும் ஸ்கூட்டர் இதுதான்!
பிரபல இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் (Bajaj), உலகின் முதல் சிஎன்ஜி (CNG) பைக் மாடலான ஃப்ரீடம் 125 (Freedom 125)-யை இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. யாருமே எதிர்பார்த்திராத மிக குறைவான விலையிலேயே இந்த பைக்கை பஜாஜ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ரூ. 95 ஆயிரம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே அந்த பைக் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த நிலையிலேயே பஜாஜ் நிறுவனத்திற்கு போட்டியாக மற்றுமொரு இந்திய நிறுவனம் சிஎன்ஜியில் இயங்கும் டூ-வீலரை உற்பத்தி செய்யும் பணியில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தை தாயகமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி (TVS Motor Company)யே, பஜாஜ்-க்கு போட்டியாக இந்தியாவில் சிஎன்ஜி டூ-வீலரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் அதன் புகழ்பெற்ற ஜுபிடர் (Jupiter) ஸ்கூட்டர் மாடலிலேயே சிஎன்ஜி ஆப்ஷனை அறிமுகம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இது விற்பனைக்கு வரும் பட்சத்தில் அதுவே உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டராக இருக்கும். உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை விற்பனைக்குக் கொண்டு வந்த நிறுவனம் என்கிற அந்தஸ்தத்தை பஜாஜ் பெற்ற நிலையில், உலகின் முதல் ஸ்கூட்டரை உருவாக்கிய நிறுவனம் என்கிற மகுடத்தை டிவிஎஸ் சூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுகுறித்து ஆட்டோ கார் புரஃபஷ்னல் செய்தி தளத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில், டிவிஎஸ் நிறுவனம் மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களை தயாரிக்கும் பணியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருவதாகவும், அது சிஎன்ஜியில் இயங்கும் வாகனங்களுக்கான மோட்டாரை ஏற்கனவே தயார் செய்ய தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்து இருக்கின்றது.
தற்போது உருவாக்கப்பட்டு இருக்கும் சிஎன்ஜி பவர்டிரெய்ன் நிறுவனத்தின் புகழ்பெற்ற ஸ்கூட்டர் மாடலான ஜூபிடரிலேயே பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிஎன்ஜி ஸ்கூட்டர் தற்போது யு740 (U740) என்ற குறியீட்டுப் பெயரில் அடையாளம் காணப்படுகின்றது. 125 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டராகவே இது வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நிறுவனத்தின் திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால், 2024 இன் பிற்பகுதியிலோ அல்லது 2025 இன் தொடக்கத்திலோ இந்த ஸ்கூட்டர் வெளியீட்டைக் காணும் என கூறப்படுகின்றது. மேலும், உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் நிறுவனத்தின் ஓசூர் ஆலையில் வைத்தே தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவின் மூன்றாம் மாபெரும் இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக டிவிஎஸ் மோட்டார் விளங்கிக் கொண்டிருக்கின்றது.
நிறுவனத்தின் டூ-வீலர்கள் சுமார் 18 சதவீதம் சந்தைப் பங்கைக் கொண்டிருக்கின்றன. 3.15 மில்லியன் யூனிட்டுகள் இதுவரை விற்பனையாகி இருக்கின்றன. இந்த நிலையிலேயே உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டரை விற்பனக்குக் கொண்டு வரும் பணியில் தற்போது டிவிஎஸ் களமிறங்கி இருக்கின்றது. இது எப்போது விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்கிற விபரங்கள் வெளியாகவில்லை.
விரைவிலேயே இதுபற்றிய தகவல்கள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே சிஎன்ஜியில் இயங்கும் வசதி உடன் பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக் ம்டுடமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஒரு கிலோ சிஎன்ஜி 102 கிமீ மைலேஜையும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 65 கிமீ மைலேஜையும் வழங்கும்.
மேலும், இதில் இரண்டு கிலோ சிஎன்ஜியையும், இரண்டு லிட்டர் பெட்ரோலையும் நிரப்பிக் கொள்ள முடியும். ரூ.95,000 முதல் ரூ. 1.10 லட்சம் வரையிலான விலையில் ஃப்ரீடம் 125 விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். தற்போது, ஜூபிடர் 125 ரூ.79,299 தொடங்கி ரூ. 90,480 வரையில் விற்கப்படுகின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஜுபிடர் சிஎன்ஜி விற்பனைக்கு வரும் எனில் இதைவிட சற்று அதிக விலையைக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனத்தின் சிஎன்ஜி ஸ்கூட்டர் பயன்பாட்டிற்கு வரும், அதனால் சுற்றுச்சூழலுக்கு கணிசமான அளவு உகந்த சூழல் ஏற்படும். மேலும், எளிய மக்கள் மத்தியில் அந்த வாகனத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, அதிக மைலேஜை விரும்புவோர், வர்த்தக ரீதியாக டூ-வீலரை பயன்படுத்துவோரின் பேராதரவு இதற்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








