தினமும் 1348 பேர் இந்த வண்டிய வாங்குறாங்க! 65 கிமீ மைலேஜ் தரும், விலையும் ரொம்ப கம்மி தான்!
இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனம் தான் கம்பஷன் இன்ஜின் உடன் கூடிய மொப்பட்டை தயாரித்து வருகிறது. இந்த வாகனம் நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் பிரபலமாக விற்பனையாகி வருகிறது. முக்கியமாக கிராமப் பகுதிகளில் அதிகமாக விற்பனையாகி வருகிறது. ஆம் டிவிஎஸ் நிறுவனத்தின் எக்ஸ்எல் மொபட் பற்றி தான் நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம். இப்படியாக இந்த வாகனத்தின் விற்பனை குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டிவிஎஸ் நிறுவனத்தின் எக்ஸ்எல் மொபட் நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் வாகனமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த 2025ம் நிதியாண்டில் முதல் மூன்று மாதமான ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் இந்தியாவில் மொத்தம் 49.8 லட்சம் டூவீலர்கள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த ஆண்டு இதே முதல் மூன்று மாத காலகட்டத்தை ஒப்பிடும்போது 20% அதிகமாகும்.

இந்நிலையில் டிவிஎஸ் நிறுவனத்தின் குறைந்த பவர் கொண்ட டூவீலராக எக்ஸ்எல் மொபட் பட்டியலிடப்படுகிறது. இந்த டூவீலரும் சிறப்பான விற்பனையில் இருந்துள்ளது. கடந்த மூன்று மாதத்தில் மொத்தம் 1,22,715 டூவீலர்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்தாண்டு நடந்த விற்பனையை காட்டிலும் 16.58% அதிகமாகும். அதாவது ஒரு நாளுக்கு 1348 டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டுகள் விற்பனையாகி வருகின்றன.
இவ்வளவு அதிகமான விற்பனைக்கு மிக முக்கியமான காரணம் குறைந்த விலை தான். இதனால் சிறு வியாபாரிகள் கூட இந்த வாகனத்தை வாங்க விரும்பி வருகிறார்கள். முக்கியமாக இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் இந்த வாகனம் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் இந்த வாகனத்தின் மைலேஜ் சிறப்பாக இருக்கிறது. குறைவான எரிபொருளில் அதிக தூரம் பயணிக்க முடிகிறது.

அதேநேரம் இந்த வாகனம் அதிகமான எடையை சுமந்து சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பால் வியாபாரம் செய்பவர்கள், காய்கறி வியாபாரம் செய்பவர்கள், மீன் வியாபாரம் செய்பவர்கள் என தெருத்தெருவாக சென்று வியாபாரம் செய்யும் பலர் இந்த வாகனத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் கிராம பகுதிகளில் அதிகமாக இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு 2019ம் நிதியாண்டில் டிவிஎஸ் நிறுவனம் தனது ஒட்டுமொத்த விற்பனையில் 41% மொபட் விற்பனை தான் இருக்கிறது என தெரிவித்திருந்தது. இருப்பதிலேயே அதிகமாக கடந்த 2017ம் நிதியாண்டில் 8,90,518 வாகனங்கள் விற்பனையாக இருந்தது 2019ம் நிதியாண்டில் 8,80,234 வாகனங்கள் விற்பனையாக இருந்தது. அதுவரை தொடர்ந்து நல்ல விற்பனையில் தான் இருந்தது.

அதன் பிறகு மக்கள் பலர் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளை அதிகம் விரும்பத் துவங்கியதால் மொபட் விற்பனை ஓரளவு சரிவடைந்தது. இதுபோக பிஎஸ் 6 கட்டுப்பாடுகள் வந்த பிறகு பலர் இந்த வாகனத்தை வாங்க சற்று தயங்கினார்கள். இந்நிலையில் கடந்த நிதியாண்டில் மொத்தம் 4,81,803 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. இருந்தாலும் இது 2023ம் நிதி ஆண்டில் விற்பனையான எண்ணிக்கையை ஒப்பிடும்போது ஒன்பது சதவீதம் அதிகமாகவே இருக்கிறது.
இந்நிலையில் இந்த 2025-ம் நிதியாண்டு துவங்கிய முதல் மூன்று மாதத்திலேயே 1,22,715 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் முதல் மூன்று மாத விற்பனையை ஒப்பிடும்போது 16 சதவீதம் அதிகமாக இருக்கிறது. இந்த நிதியாண்டில் மிகப்பெரிய அளவில் இந்த ஸ்கூட்டரின் விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
டிவிஎஸ் நிறுவனம் இந்த எக்ஸ்எல் மொபாட்டில் எலெக்ட்ரிக் வெர்ஷனை கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக இருக்கிறது. இது குறித்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் நிறுவனம் ஏற்கனவே ஐ-க்யூப் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்து வருகிறது. அந்நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன எண்ணிக்கையை அதிகப்படுத்த நினைத்தால் நிச்சயம் எக்ஸ்எல் என்ற பெயரில் நிச்சயம் எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று கார், பைக் என வாகனம் ஓட்டும் பலரும் தங்கள் முதல் முதலில் வாகனம் ஓட்டும் பயிற்சியை இந்த வாகனத்தில் தான் எடுத்திருப்பார்கள். இதுதான் பலர் விரும்பும் வாகனமாக இருக்கிறது. இதன் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவது இந்த தயாரிப்பின் தரத்தை காட்டுகிறது. டிவிஎஸ் நிறுவனம் இதை தொடர்ந்து மேம்படுத்தினால் இன்னும் இதன் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications









