மாசத்துக்கு ஒன்னு அறிமுகம் செய்வாங்க போலையே.. இன்னொரு விலை குறைவான இ-ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வர போறாங்களா
ஜீலியோ இ-பைக்ஸ் (ZELIO Ebikes) நிறுவனம், வெகு விரைவில் இந்தியாவில் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. ஜீலியோ இ-பைக்ஸ் ஓர் மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவை அதகளப்படுத்தும் விதமாக புதிய வாகனத்தை அறிமுகம் செய்யும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இந்த நிறுவனம் சமீபத்திலேயே எக்ஸ் மென் (X Men) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
இது ஓர் குறைந்த வேகத்தில் இயங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். ஐந்து விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ரூ. 64,543 என்கிற ஆரம்ப விலையில் இருந்து இது விற்பனைக்குக் கிடைக்கும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஜீலியோ இ-பைக்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையிலேயே ஜீலியோ இ-பைக்ஸ் நிறுவனம் மற்றுமொரு புதிய வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்தான் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதுதவிர, இது ஓர் அதி வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக ஓர் முழு சார்ஜில் 100 கிமீ தூரம் வரையில் இந்த எலெக்ட்ரக் ஸ்கூட்டரில் பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. அதுதவிர, 180 கிலோ வரையிலான எடையையும் அதனால் தாங்க முடியும் என்றும் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க அதிக தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவும் இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, இயக்கம் மற்றும் பயன்பாடு இரண்டிலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிக சிறந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பைக்கின் முழு வரைபடம் வெளியிடப்படவில்லை.
இதேபோல், பெயரும் வெளியிடப்படவில்லை. விரைவில் இந்த விபரங்கள் உட்பட புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அனைத்து முக்கிய விபரங்களையும் அது வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாதத்திலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஜீலியோ இ-பைக்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.
எனவே ஜூலை 30 ஆம் தேதிக்குள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அது அறிமுகம் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தினசரி பயன்பாட்டிற்கு உகந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இது இருக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதுதவிர, அலுவலகம் செல்வோர், டெலிவரி சேவையில் ஈடுபட்டு வருபவர் என அனைவருக்குமான வாகனமாகவும் இது இருக்கும் என்றும் ஜீலியோ இ-பைக்ஸ் கூறி இருக்கின்றது.
இந்த ஸ்கூட்டரின் விலையும் அறிவிக்கப்படவில்லை. விரைவிலேயே இதுவும் அறிவிக்கப்பட இருக்கின்றது. லெஜண்டர், லெஜண்டர் பிளஸ், கிரேசி, கிரேசி ஐ, கிரேசி பிளஸ், ஈவா இசட்எக்ஸ், ஈவா, ஈவா இசட்எக்ஸ் பிளஸ், இசட்பி-எஸ், இசட்ஜி-எஸ், எக்ஸ் மென், லாஜிக்ஸ், மிஸ்ட்ரி ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களே இப்போதே நிலவரப்படி ஜீலியோ இ-பைக்ஸ் நிறுவனத்தின்கீழ் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே ஜீலியோ தன்னுடைய தயாரிப்புகளை மிக தீவிரமாக விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஓலா எலெக்ட்ரிக் மற்றும் ஏத்தர் எனெர்ஜி ஆகியவற்றிற்கு மிகப் பெரிய அளவில் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








