ஓலா எல்லாம் காணாமல் போயிடும்... ஏத்தரின் முதல் எலக்ட்ரிக் பைக்கை பார்க்க ரெடியாகுங்க!!
ஏத்தர் எனர்ஜி (Ather Energy), பெங்களூரை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் (EV Start-up) நிறுவனம். பெங்களூரில் தலைமையகத்தை கொண்டிருப்பினும், தமிழ்நாட்டில் ஓசூரில்தான் ஏத்தர் நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை செயல்படுகிறது. ஆரம்பத்தில் '450' என்கிற செயல்திறன் மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்துவந்த ஏத்தர் நிறுவனம், கடந்த 2024 ஏப்ரலில் 'ரிஸ்டா' (Rizta) என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.1.10 லட்சம் என்கிற குறைந்த விலையில் அறிமுகம் செய்து இந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டை ஸ்தம்பிக்க வைத்தது.
இந்த நிலையில், ஜனவரி 17ஆம் தேதியில் டெல்லியில் துவங்கவிருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியில் ஏத்தர் எனர்ஜி நிறுவனமும் கலந்துக் கொள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆட்டோ எக்ஸ்போவில் ஏத்தர் எனர்ஜியில் இருந்து என்னென்ன 2-வீலர்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்பது இப்போதுவரையிலும் உறுதியாக தெரியாத போதிலும், இந்த இரு வாகனங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.

2025 ஏத்தர் 450எக்ஸ் (450X): ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் 450எக்ஸ் ஒன்றாகும். இருப்பினும், வாடிக்கையாளர்களை மேலும் கவரும் விதமாக இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மேம்படுத்தி கடந்த ஜனவரி 4இல் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிமுகம் செய்தது.
முதன்முதலாக 2020ஆம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒவ்வொரு வருடமும் மறக்காமல் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதிய 2025ஆம் ஆண்டை முன்னிட்டு மேம்படுத்தப்பட்டுள்ள ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், நடைபெறவிருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியிலும் காட்சிக்கு நிறுத்தப்படலாம்.
புதிய 2025 ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் ஆனது 2.9kWh மற்றும் 3.7kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 2.9kWh பேட்டரி உடன் ரூ.1.47 லட்சமாகவும், 3.7kWh பேட்டரி உடன் ரூ.1.57 லட்சமாகவும் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025 450எக்ஸ் ஸ்கூட்டரில் மழை, சாலை மற்றும் ராலி என 3 விதமான டிராக்ஷன் கண்ட்ரோல் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஏத்தர் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் (Ather Electric Bike Concept): ஏத்தர் எனர்ஜி நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தாண்டி எலக்ட்ரிக் பைக்குகளையும் களமிறக்க கடந்த சில வருடங்களாக தயாராகி வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட முதலீடு ஈர்ப்பு கூட்டத்திலும் எலக்ட்ரிக் பைக்குகள் உள்பட புதிய தயாரிப்புகளை உருவாக்குவதற்கு நிதி தேவை என்றே முதலீட்டாளர்களை ஏத்தர் எனர்ஜி ஈர்த்தது.
இதனால், இந்த முறை ஆட்டோ எக்ஸ்போவில் குறைந்தது ஒரு ஏத்தர் எலக்ட்ரிக் பைக்கை ஆவது பார்க்கலாம். ஏத்தரின் முதல் எலக்ட்ரிக் பைக் விலைகள் அறிவிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை. குறைந்தப்பட்சம், ஏத்தர் எலக்ட்ரிக் பைக் குறித்த அறிவிப்பை ஆவது இந்த ஆட்டோ எக்ஸ்போவில் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முன்னணி எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. ஆதலால், ஒட்டுமொத்த நாடும் உற்று கவனிக்கும் 2025 ஆட்டோ எக்ஸ்போவை முடிந்தவரையில் நன்கு பயன்படுத்திக் கொள்ள ஏத்தர் எனர்ஜி முயற்சிக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








