ஓலா, டிவிஎஸ் எல்லாம் என்ன கதி ஆக போகுதோ! ஓசூருக்கு பக்கத்துலேயே கோடிகளில் முதலீடுகளை குவிக்கும் ஏத்தர்
ஏத்தர் எனர்ஜி (Ather Energy), பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று. பெங்களூரை சேர்ந்த நிறுவனமாக இருப்பினும், ஏத்தர் எனர்ஜுக்கு நம் தமிழ்நாட்டில் ஓசூரில் தான் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. ஆனால், வாகனங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி & மேம்பாட்டு மையத்தை பெங்களூரில் கொண்டுள்ள ஏத்தர் நிறுவனம் தனது ஆராய்ச்சி & மேம்பாட்டு (R&D) மையத்தை விரிவாக்கம் செய்துள்ளது. அதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கு இன்னும் நிறைய பேர் தயாராக இல்லை என்றாலும், எலக்ட்ரிக் 2-வீலர்களின் விற்பனை சிறப்பாகவே முன்னேற்றம் கண்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணமாக விளங்கும் நிறுவனங்களூள் ஒன்றாக ஏத்தர் எனர்ஜியை சொல்லலாம். இந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான சந்தை பங்கை பிரபலமான ஹீரோ மோட்டோகார்ப் கொண்டுள்ளது.

இந்தியாவின் மென்பொருள் தலைநகரமாக விளங்கும் பெங்களூரில் இருந்து பல்வேறு இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கடந்த சில வருடங்களில் புதியதாக தோன்றியுள்ளன. அவற்றுள் ஒன்றுதான், ஏத்தர் எனர்ஜி ஆகும். வருடத்திற்கு வருடம் மெல்ல மெல்ல நெட்வொர்க்கை விரிவுப்படுத்திவரும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம், அதற்கேற்ப வாகனங்களை உற்பத்தி செய்யும் தனது திறனை மேம்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது, பெங்களூருவின் புறநகர் பகுதியில் உள்ள பெகுர் (Begur) என்கிற இடத்தில் புதியதாக ஆராய்ச்சி & மேம்பாட்டு மையத்தை ஏத்தர் திறந்துள்ளது. புதிய ஆர்&டி மையத்தில் ஏற்கனவே பணிகள் ஆரம்பித்துவிட்ட நிலையில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஆய்வு செய்யும் புகைப்படங்களை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

வருங்காலங்களில் புது, புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வடிவமைப்பதற்கும், ஸ்கூட்டர்களில் வழங்கப்படும் தொழிற்நுட்பங்களை உருவாக்குவதற்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்துக்கு இந்த புதிய ஆர்&டி மையம் உதவியாக இருக்கும். மொத்தம் சுமார் 38 ஆயிரத்து 692 சதுர அடி பரப்பளவில் இந்த மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த அளவுக்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த ஆர்&டி மையத்தில் ஒவ்வொரு விதமான ஆய்வுகளுக்கு என தனித்தனியாக ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், ஸ்கூட்டரை டிசைன் செய்வதற்கு, பேட்டரிகளை சோதனை செய்வதற்கு, மின்சாதன பொருட்களின் நம்பகத்தன்மையை சோதிப்பதற்கு என தனித்தனியாக பிரத்யேகமான ஆய்வுக்கூடங்கள் இந்த புதிய ஆய்வு மையத்தில் நிறுவப்பட்டுள்ளன.

கடந்த ஓர் ஆண்டில் ஈட்டிய மொத்த வருவாயில் கிட்டத்தட்ட 15%, அதாவது ரூ.238 கோடியை ஆராய்ச்சி & மேம்பாட்டு பணிகளுக்காக ஏத்தர் எனர்ஜி செலவு செய்துள்ளது. அதேபோல், ஏத்தர் எனர்ஜியில் பணியாற்றும் மொத்த பணியாளர்களில் சுமார் 46 சதவீதத்தினர் ஆராய்ச்சி & மேம்பாட்டு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்தவொரு ஆட்டோமொபைல் நிறுவனத்துக்கும் ஆராய்ச்சி & மேம்பாட்டு மையம் ஆனது அவசியமானது ஆகும். இன்னும் சொல்லப்போனால், ஓர் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதே அதன் ஆர்&டி மையம் மற்றும் அங்கு நடைபெறும் வேலைகள் ஆகும். ஏனெனில், இங்கு ஒப்புதல் அளிக்கப்படும் வாகனங்கள் தான் பின்னர் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன.


Click it and Unblock the Notifications









