90 வருஷத்துக்கு முன்ன உருவான பைக் கம்பெனி... அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா பஜாஜ் கைக்கு வர போகுது!!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. 2-வீலர்கள் மற்றும் 3-வீலர்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் உதவியுடன் சில ஐரோப்பிய பைக் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles), கேடிஎம் (KTM) மற்றும் ஹஸ்க்வர்னா (Husqvarna) என்பன அந்த சில ஐரோப்பிய பைக் நிறுவனங்கள் ஆகும். இவற்றில் சில நிறுவனங்கள் பஜாஜ் நிறுவனத்தின் மூலமாகவே, இழுத்த முடப்படாமல் இன்னமும் செயல்பட்டு வருகின்றன. அதாவது, ஐரோப்பிய நிறுவனங்கள் நம் இந்தியாவின் பஜாஜ் மூலமாகவே உயிர்பிப்புடன் உள்ளன.
அத்தகைய நிறுவனம் தான், கேடிஎம் ஆகும். ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் பஜாஜ் நிறுவனத்தை காட்டிலும் பழமையான பைக் உற்பத்தி நிறுவனம் ஆகும். இரு நண்பர்கள் மூலமாக 1934ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கேடிஎம் நிறுவனம் முதல் 55 வருட கால கட்டத்திற்கு பெரியதாக எந்தவொரு சறுக்கலையும் சந்திக்கவில்லை.

நிறுவனத்தை நிறுவிய நண்பர்கள் இருவரும் இறந்து போனாலும், அவர்களில் ஒருவரது மகன் கேடிஎம் நிறுவனத்தை தூக்கி பிடித்தது மட்டுமின்றி, மெல்ல மெல்ல நிறுவனத்தையும் வளர்க்க ஆரம்பித்தார். இருப்பினும், அவரும் 1989இல் இயற்கை எய்ததை அடுத்து, 1991க்கு பிறகு எந்த பக்கம் செல்வது என தெரியாமல் கேடிஎம் நிறுவனம் தடுமாறியது.
அப்போதுதான், ஆஸ்திரியா நாட்டை தாயகமாக கொண்ட பியர் மொபிலிட்டி ஏஜி (Pierer Mobility AG) நிறுவனத்தால் கேடிஎம் நிறுவனம் வாங்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் சறுக்கலை சந்தித்துவரும் கேடிஎம் நிறுவனத்தை காப்பாற்றி இருப்பது, பியர் மொபிலிட்டி ஏஜி நிறுவனம் கிடையாது; இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ ஆகும்.

பல்சர் (Pulsar) பைக்குகள் மூலமாக இலாபத்தை சம்பாதிக்க ஆரம்பித்த 2007ஆம் ஆண்டு சமயத்தில் அந்த இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பணத்தை பியர் மொபிலிட்டி ஏஜி நிறுவனத்தின் கேடிஎம் பிராண்டின் பங்கை வாங்க பஜாஜ் பயன்படுத்தியது. அதன்பின் ஒவ்வொரு வருடமாக கேடிஎம் பிராண்ட் மீதான தனது உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்த பஜாஜ் நிறுவனம், 2012ஆம் ஆண்டில் கேடிஎம் நிறுவனத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்தது.
இதன் மூலமாக பஜாஜ் ஆட்டோ உடன் இன்னும் நெருக்கமாகியதன் மூலம் 2013இல் கேடிஎம் நிறுவனத்தின் சுமார் 47.97% பங்கை பஜாஜ் பெற்றது. தற்போது, கேடிஎம் நிறுவனம் மீதான பஜாஜ் ஆட்டோவின் பங்கு மதிப்பு 49.9% ஆகும். இந்த நிலையில், கேடிஎம் நிறுவனத்தை பியர் மொபிலிட்டி நிறுவனத்திடம் இருந்து பிரித்து முழுவதுமாக தானே சொந்தமாக்கி கொள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாராகி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தனித்து செயல்பட வேண்டி கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் கேடிஎம் நிறுவனம் சார்பில் ஆஸ்திரியா நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு கேடிஎம் நிறுவனம் சார்பில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், எல்லா காரணங்களும் கேடிஎம் நிறுவனத்தை பெரியதாக்க வேண்டும் என்பதாக தான் இருந்தன. இந்த நிலையில், சுமார் 56.6 கோடி யூரோக்களை (ரூ.5,431 கோடி) பியர் மொபிலிட்டி நிறுவனத்திற்கு பஜாஜ் ஆட்டோ கடனுதவியாக வழங்க உள்ளது.
இதற்கான ஒப்பந்தங்கள் சமீபத்தில்தான் கையெழுத்தாகி முடிந்துள்ளன. கேடிஎம் நிறுவனத்தில் முதலீடுகள் வருகிற மே 23ஆம் தேதியோடு நிறைவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. வழக்கம்போல், கேடிஎம் நிறுவனத்தின் வணிகம் சமீப காலமாக மிகவும் சரிவை சந்தித்து வருகிறது. இத்தகைய நேரத்தில் கடனுதவியை கொடுத்து, கேடிஎம் நிறுவனத்தை வளைத்து போடலாம் என்பதுதான் பஜாஜ் ஆட்டோவின் ராஜ தந்திரமாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேடிஎம் நிறுவனத்தை பியர் மொபிலிட்டி நிறுவனத்தால் முறையாக பராமரிக்க முடியாததினால்தான், கேடிஎம் பைக்குகள் விற்பனை மீண்டும் சரிவை சந்தித்து வருகிறது. எனவே, தொடர்ச்சியாக வளர்ந்துவரும் பஜாஜ் ஆட்டோ உடன் கூட்டணி சேர்வதுதான் கேடிஎம் நிறுவனத்துக்கு சரியான முடிவாக இருக்கும். பஜாஜின் கண்ட்ரோலில் முழுவதுமாக வருவதன் மூலம், இனி வரும் காலங்களில் உருவாக்கப்படும் கேடிஎம் பைக்குகள் இந்தியாவிற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவைகளாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








