பிஎம்டபிள்யூ கம்பெனியையே நம்ம டிவிஎஸ் தான் கை கொடுத்து தூக்கி விடுது! ஓசூர் ஆலையில் இனி இந்த பைக்கும் உற்பத்தி
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டாராட் (BMW Motorrad) நிறுவனங்கள் இணைந்து, 2 லட்சம் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்து ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளன. இந்த சாதனை, அவர்களின் நீண்டகால கூட்டணியின் வெற்றியைக் காட்டுகிறது. அத்துடன், இத்தாலியின் மிலனில் இந்த நவம்பர் மாத துவக்கத்தில் நடைபெற்ற EICMA 2025 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ எஃப்450 ஜிஎஸ் (BMW F 450 GS) பைக்கின் உற்பத்தியை டிவிஎஸ் மோட்டார் கம்பெனி தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள டிவிஎஸ் ஆலையில் இந்த புதிய பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக்கின் உற்பத்தி பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இவற்றை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்த இந்திய-ஜெர்மன் கூட்டணி வெற்றியின் அடையாளமாக, இரு நிறுவனங்களும் இணைந்து ஒரு கூட்டறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளன.

அதில், 2013 முதல் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இரு சக்கர வாகனங்களை இந்த கூட்டணி வழங்கி வருவதாகவும், இந்த கூட்டணியின் கீழ் உருவாக்கப்பட்ட பொதுவான 310சிசி பிளாட்ஃபார்மில் உற்பத்தி செய்யப்படும் பைக்குகள், உலகளவில் 100 சந்தைகளில் விற்கப்படுவதாகவும் பெருமிதத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த கூட்டணி நிறுவனங்களின் உலகளாவிய ரீச்-ஐ எடுத்துக்காட்டுகிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.என். ராதாகிருஷ்ணன் இதுகுறித்து கூறுகையில், "2 லட்சம் யூனிட் மைல்கல்லை நாங்கள் கொண்டாடுகிறோம். EICMA 2025-இல் அறிமுகப்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ எஃப்450 ஜிஎஸ் பைக்கின் மூலம் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. இது உயர் ரக மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்வதில் டிவிஎஸ் மோட்டரின் நிபுணத்துவத்தை பிரதிபலிக்கிறது" என்றார்.

பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்கஸ் ஃப்ளாஷ் கூறுகையில், "பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் (G310 R), ஜி310 ஜிஎஸ் மற்றும் ஜி310 ஆர்.ஆர் பைக்குகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ளன. மேலும், பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்தின் உலகளாவிய வளர்ச்சிக்கு இவை முக்கிய தூண்களாகும்.
புதிய பிஎம்டபிள்யூ எஃப்450 ஜிஎஸ் பைக்கின் அறிமுகம் எங்கள் கூட்டணி பயணத்தில் ஒரு அற்புதமான அத்தியாயத்தைக் குறிக்கிறது. இந்த வலுவான அடித்தளத்தின் மீது இன்னும் புதுமையான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் உலகத் தரம் வாய்ந்த மோட்டார்சைக்கிள்களை உருவாக்குவோம்" என்று அவர் தெரிவித்தார்.

புதிய பிஎம்டபிள்யூ எஃப்450 ஜிஎஸ் பைக் ஆனது, டிவிஎஸ் மோட்டார் கம்பெனியால் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒரு இணை-இரட்டை சிலிண்டர் என்ஜின் கொண்ட மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த புதிய அத்தியாயத்தின் மூலம், இரு நிறுவனங்களும் புதிய பிளாட்ஃபார்ம்களிலும் எதிர்கால தொழில்நுட்பங்களிலும் முதலீடு செய்கின்றன.
நகர்ப்புற மற்றும் பிரீமியம் பயணத்திற்கான வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்ய, கூட்டான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது டிவிஎஸ் மோட்டார் கம்பெனி மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டாராட் கூட்டணியின் தரம், செயல்திறன் மற்றும் புதுமையின் பாரம்பரியத்தை தொடர்கிறது. ஆதலால், இந்த கூட்டணியின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியாக புதிய பிஎம்டபிள்யூ எஃப்450 ஜிஎஸ் பைக் விளங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் மோட்டார் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டணி கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக சிறப்பானதாக இருந்து வருகிறது. இந்த இரு நிறுவனங்களும் மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தியில் தங்களது திறன்களையும், பாகங்களையும் பகிர்ந்துக் கொண்டு குறைந்த உற்பத்தி செலவில் பைக்குகளை உருவாக்கி விற்பனை செய்து வருகின்றன. அந்த வகையில் தற்போது உற்பத்தி துவங்கப்பட்டு இருக்கும் பிஎம்டபிள்யூ எஃப்450 ஜிஎஸ் பைக்கின் அடிப்படையிலான புதிய டிவிஎஸ் அட்வென்ச்சர் பைக் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









