மத்திய அரசு போட்ட பிளான் எல்லாம் இதுக்குதானா... டிரம்ப் கேட்டு கொண்டதால் இருக்குமோ?
ஹார்லி-டேவிட்சன் (Harley Davidson), உலகளவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் நிறுவனம். ஆனால், இந்தியாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க மட்டும் இன்னமும் போராடி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் நேரடி வணிகத்தையே ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் நிறுத்திவிட்டது. இதற்கு எல்லாம் முக்கிய காரணம் ஹார்லி-டேவிட்சன் பைக்குகளின் அதிகமான விலை என்பது ஊரறிந்த விஷயம். ஆனால், இந்த நிலை வரும் காலங்களில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதை வைத்து இதை கூறுகிறோம் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
மத்திய அரசின் 2025-26ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். குறைவான நேரத்தில் வாசிக்கப்பட்டு இருப்பினும், 2025-26 பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரிக்கான உச்சவரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டது உள்பட சில அட்டகாசமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில், பேட்டரிகளை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்களுக்கு முற்றிலுமாக வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், எலக்ட்ரிக் வாகனங்களின் விலைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் சேர்த்து, அதி செயல்திறன்மிக்க மோட்டார்சைக்கிள்களுக்கான இறக்குமதி வரிகளும் குறைத்துக் கொள்ளப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவானது ஹார்லி-டேவிட்சன் போன்ற விலைமிக்க பைக்குகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பெரிய உந்துதலாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டு பொருட்களை இந்தியாவிற்கு கொண்டுவந்து விற்பனை செய்வதை கடந்த பல வருடங்களாகவே இந்திய அரசு எதிர்த்து வருகிறது.

அந்த பொருட்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து விற்பனை செய்யுங்கள் என்பதுதான் மத்திய அரசின் விருப்பமாக உள்ளது. இதன் மூலமாக உள்நாட்டு வணிகம் மேம்படும் என்பது அரசாங்கத்தின் கணிப்பு. இது ஆட்டோமொபைல் துறைக்கும் பொருந்தும். இதன் காரணமாகவே, பல கார் & பைக் நிறுவனங்கள் கடந்த வருடங்களில் இந்தியாவிலேயே தங்களது தொழிற்சாலையை நிறுவி உள்ளன.
இருப்பினும், சில விலையுயர்ந்த கார் & பைக்குகள் மட்டும் முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் சூழலில், 1600சிசி-க்கு மேல் என்ஜினை கொண்ட பைக்குகளை முழுவதுமாக வெளிநாட்டில் உற்பத்தி செய்து இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கான இறக்குமதி வரி ஆனது 50%-இல் இருந்து 30% ஆக குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல், பாதி வாகனம் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு மீதி இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கான 1600சிசி+ பைக்குகளுக்கு விதிக்கப்பட்டுவந்த இறக்குமதி வரியும் 25%-இல் இருந்து 20% ஆக குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பாகங்களாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு, இந்தியாவில் முழு பைக்காக உருவாக்க திட்டமிடப்படும் 1600சிசி+ பைக்குகளுக்கான இறக்குமதி வரியும் 15%-இல் இருந்து 10% ஆக குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசின் இந்த இறக்குமதி வரி குறைப்பானது ஹார்லி-டேவிட்சன் மட்டுமின்றி மற்ற சூப்பர் பைக் நிறுவனங்களுக்கும் அனுகூலமாக இருக்கும். இதன் மூலமாக, 1600சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட என்ஜினை கொண்ட மோட்டார்சைக்கிள்களின் விலைகள் குறைய உள்ளன. ஆனால் அதேநேரம், வரி குறைப்பினால் உள்நாட்டு உற்பத்தி குறையும் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.


Click it and Unblock the Notifications









