பெட்ரோல் டூவீலர்களின் விற்பனைக்கு தடை விதிக்க அரசு திடீர் முடிவு! ஒன்னு விடாம மொத்தமா ஒழிச்சு கட்ட போறாங்க!
பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலமாக இயங்கும் வாகனங்கள், கார்பன் மோனாக்ஸைடு, கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களை உமிழ்கின்றன. இவை காற்று மாசுபாடு, பருவ நிலை மாற்றம் போன்ற அபாயகரமான பிரச்னைகளுக்கு காரணமாக அமைகின்றன. அத்துடன் சுவாசிப்பதில் பிரச்னை போன்ற தீங்குகளையும் இவை மனிதர்களுக்கு ஏற்படுத்துகின்றன. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் தள்ளப்பட்டுள்ளன. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.
இந்தியா தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை அதிகரித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு நட்பானவையாக கருதப்படுவதுதான் இதற்கு காரணம். எனவே இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாடு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் டெல்லியில் (Delhi), பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டிற்கு மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் மேலும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து டெல்லி அரசு தற்போது தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக டெல்லியில் பெட்ரோல், டீசல் கார்களை வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஒரு குடும்பம் அதிகபட்சமாக 2 பெட்ரோல், டீசல் கார்களை மட்டுமே வாங்க முடியும் என கூறப்படுகிறது. அதேபோல் பெட்ரோல் மூலமாக இயங்கும் டூவீலர்களை வாங்குவதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த தடை வரும் 2027ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்தால், டெல்லியில் பெட்ரோல் மூலமாக இயங்கும் டூவீலர்களின் விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்படும். எனவே எலெக்ட்ரிக் டூவீலர்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்படுவார்கள்.
இந்த கட்டாயம் காரணமாக எலெக்ட்ரிக் டூவீலர்களை வாங்க முன்வரும் பொதுமக்களுக்கு மானியம் உள்ளிட்ட பண சலுகைகளை டெல்லி அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஹைப்ரிட் வாகனங்களை வாங்குபவர்களுக்கும் சலுகைகள் கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஹைப்ரிட் வாகனங்களுக்கான வரிகளை குறைக்க டெல்லி அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இது நடக்கும்பட்சத்தில், ஹைப்ரிட் வாகனங்களின் விலை சுமார் 15 சதவீதம் வரை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த நடவடிக்கைகள் மூலம் டெல்லியில் காற்றின் தரத்தை உயர்த்த முடியும் என அரசு நம்புகிறது. ஆனால் இவை அனைத்தும் தற்போது ஆலோசனை அளவில் மட்டுமே உள்ளன. இவை இறுதியான முடிவுகள் அல்ல. கார் மற்றும் டூவீலர் நிறுவனங்கள், பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு, அதற்கு ஏற்ற வகையில், இந்த பரிந்துரைகளில் மாற்றங்கள் செய்யப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பது என்பது, காற்று மாசுபாடு பிரச்னையுடன் சேர்த்து, கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் தொகையை குறைப்பதற்கும் உதவி செய்யும். எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றுதான்.


Click it and Unblock the Notifications








