மத்திய அரசு இப்படி காலை வாரி விடும்னு யாரும் எதிர்பார்க்கல! இப்படியே போனால் வெளிநாட்டு கம்பெனி எதுவும் வராது!!
எலக்ட்ரிக் வாகனங்களினால் பசுமையான சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்பதால், உலக நாடுகள் பலவற்றின் அரசாங்கங்கள் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், நமது இந்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டில் ஃபேம்-2 (FAME-2) என்கிற திட்டத்தை அறிமுகம் செய்து எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும், அவற்றை வாங்கும் கஸ்டமர்களுக்கும் மானியம் வழங்க ஆரம்பித்தது.
இதன் விளைவாக, மற்ற பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இணையாக எலக்ட்ரிக் வாகனங்களின் விலைகள் குறைந்தன. இதன் மூலமாக, எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரிக்க ஆரம்பித்தது. குறிப்பாக, எலக்ட்ரிக் 2-வீலர்/ 3-வீலர்களை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்ட துவங்கினர்.

இதனால் அவற்றை உற்பத்தி செய்யும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் புதியது, புதியதாக மார்க்கெட்டிற்கு வர துவங்கின. ஆனால், அவ்வாறு மார்க்கெட்டிற்கு வந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை கடந்த 1 வருடமாக அதிகமாக பார்க்க முடிவதில்லை. அதாவது, அந்த நிறுவனங்களில் இருந்து கடந்த வருடங்களில் இருந்த அளவிற்கு, கடந்த 1 வருடத்தில் புதிய அறிமுகங்கள் இல்லாததை கண்கூடாக பார்க்க முடிகிறது.
இதற்கு காரணம், கடந்த 2024ஆம் ஆண்டின் மார்ச் 31ஆம் தேதியோடு ஃபேம்-2 திட்டம் முடிவுக்கு வந்தது ஆகும். ஃபேம்-2 திட்டத்தை நீட்டிப்பது குறித்த எந்த அறிவிப்பும் கடந்த ஆண்டின் துவக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டில் இடம்பெறாத போதே சுதாரித்துக் கொண்ட இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் சில அப்போதே மார்க்கெட்டில் இருந்து கழன்றுவிட்டன.

சில இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தங்களது அடுத்தக்கட்ட முதலீடுகளை குறைத்துக் கொண்டன. இதனாலேயே இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் இருந்து கடந்த 1 வருடத்தில் பெரியதாக எந்த புதிய அறிமுகங்களையும் பார்க்க முடிவதில்லை. இது அந்த நிறுவனங்களின் வணிகத்தை நேரடியாக பாதிக்க ஆரம்பித்துள்ளது.
பிரதமர் இ-டிரைவ் (PM E-Drive) உள்ளிட்ட சில திட்டங்கள் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக அமலில் உள்ளன என்றாலும், அவை நேரடியாக கஸ்டமருக்கு பலன் அளிப்பதாக உள்ளதால், வாகனத்தை உருவாக்கும் கம்பெனிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளிக்கின்றன. ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), டிவிஎஸ் (TVS) போன்ற முன்னணி நிறுவனங்கள் ஓரளவுக்கு சமாளிக்கின்றன என்றாலும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நேரடியாக பிரச்சனையை எதிர்க்கொண்டு வருகின்றன.

சில வருடங்களுக்கு முன்பு வரையில் விற்பனையில் கலக்கிக் கொண்டிருந்த ஒகினவா (Okinawa), அமோ மொபிலிட்டி (AMO Mobility), பென்லிங் (Benling), ஹீரோ எலக்ட்ரிக் (Hero Electric) போன்ற இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இந்த 2025ஆம் ஆண்டில் கடந்த ஜூன் வரையில் முறையே 1,422 மற்றும் 25 மற்றும் 95 மற்றும் 382 எலக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதேபோன்று, 2023ஆம் ஆண்டில் சுமார் 67 ஆயிரம் எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்திருந்த ஆம்பியர் நிறுவனமும் இந்த 2025இல் இதுவரையில் கிட்டத்தட்ட 27 ஆயிரம் எலக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இவ்வாறு இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வணிகம் குறைந்துக் கொண்டே வருவதை தடுக்கும் விதமாக மத்திய அரசு புதியதாக ஏதேனும் திட்டத்தை உடனடியாக கொண்டுவருவது அவசியமாகிறது. ஏனெனில், ஆட்டோமொபைல் துறை என்று மட்டுமின்றி, எந்தவொரு துறையிலும் புது, புது ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மார்க்கெட்டில் முளைப்பது எந்த ஒரு நாட்டிற்கும் அவசியமானது ஆகும்.


Click it and Unblock the Notifications









