3 மாசத்துல 1 யூனிட்கூட விற்பனை ஆகல.. ஹீரோ நிறுவனத்தின் மானத்தை வாங்கிய தயாரிப்பு..
ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் என்றாலே நாட்டின் மொத்த இரண்டு சக்கர வாகன உலகமும் மிரண்டு போகும். அந்த அளவிற்கு மாபெரும் ஜாம்பவான் நிறுவனமே அது ஆகும். இந்த நிறுவனத்தின் மானத்தையே அதன் தயாரிப்பு காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கின்றது. விற்பனையில் அதளபாதாளத்திற்கு அது வீழ்ந்திருக்கின்றது. ஹீரோ கரிஷ்மா 210 (Hero Karizma 210) பைக் மாடலே அது ஆகும். இதன் ஒரு யூனிட் கூட விற்பனையாகவில்லை என்கிற அதிர்ச்சி அளிக்கும் தகவல்களே தற்போது வெளியாகி இருக்கின்றது.
போன மாசத்தில் மட்டுமல்ல கடந்த மூன்று மாதங்களாகவே அது ஒரு யூனிட் விற்பனையாகவில்லை. இதனால்தான் இப்போது வெளியாகி இருக்கும் தகவல் பேரதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, இந்தியர்கள் ஒருத்தர்கூடவா இந்த பைக்கை வாங்க முன் வரவில்லை என்றே பலரையும் ஆச்சரியமடையச் செய்திருக்கின்றது.

இந்தியாவில் கரிஷ்மா பைக்கிற்கு பெரிதும் எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருப்பதாக எண்ணி புதிய அவதாரத்தில் கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் 210 (Karizma XMR 210) எனும் பெயரில் இந்த பைக்கை ஹீரோ நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. 2023 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி அன்றே இந்த பைக்கை நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
அறிமுகமாக இந்த பைக்கிற்கு ரூ. 1.73 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த நிலையிலேயே விற்பனைக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிவடையாத நிலையில் அது விற்பனையில் மாபெரும் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இதனால் இந்த பைக்கை எப்போது வேண்டுமானாலும் ஹீரோ நிறுவனம் விற்பனையில் இருந்து அகற்றப்படலாம் என்கிற சூழல் உருவாகி இருக்கின்றது. ஏனெனில், இந்த பைக்கிற்கு கிடைக்கும் வரவேற்பு தொடர்ச்சியாக குறைந்தே இப்போது பூஜ்ஜியம் யூனிட்டுகள் என்கிற நிலையை அடைந்திருக்கின்றது. சென்ற ஆண்டு மார்ச் மாதமே இந்த பைக் கடைசியாக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிய மாதம் ஆகம்.
1,874 யூனிட்டுகள் வரை ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் 210 பைக் அந்த மாதத்தில் விற்பனையாகி இருந்தது. இதற்கு அடுத்தடுத்து வந்த மாதங்கள் துரதிர்ஷ்டவசமான மாதங்கள் ஆகும். ஆமாங்க, 2024 ஏப்ரலில் முழுமையாக 1,000 ஆயிரம் யூனிட்டுகள் கூட இந்த பைக் விற்பனையாகவில்லை.

947 யூனிட்டுகள் மட்டுமே அது விற்பனையாகி இருந்தது. இவ்வாறே தொடர்ச்சியாக விற்பனைச் சரிந்துக் கொண்டே வந்து தற்போது பூஜ்ஜியம் யூனிட்டுகள் என்கிற நிலைக்கு கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் 210 வந்திருக்கின்றது. வரவேற்பு பூஜ்ஜியம் என்கிற நிலையை எட்டி இருப்பதால் கரிஷ்மா 210 பைக் எப்போது வேண்டுமானாலும் சந்தையை விட்டு வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இல்லையெனில் இந்த பைக்கின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு வேறு ஏதேனும் மாற்றங்களை செய்து அது விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தைகளும் இதுவரை நிறுவனத்திடம் இருந்து வெளியாகவில்லை. அதேவேளையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர், அதாவது, ஜனவரி மாதத்தில் கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் 210 பைக்கின் காம்பேட் எடிசன் எனும் சிறப்பு பதிப்பின் டீசரை ஹீரோ வெளியிட்டு இருந்தது.
ஆகையால், விரைவில் கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் 210 பைக் சிறப்பு பதிப்பாக நாட்டில் விற்பனைக்கு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சிறப்பு பதிப்பு அலங்கரிப்பு விஷயத்தில் மட்டுமே இப்போது விற்பனையில் இருக்கும் கரிஷ்மா-விடம் இருந்து மாறுபட்டுக் காட்சியளிக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. எஞ்சின் விஷயத்தில் இரண்டுமே ஒரே மாதிரியானதாகவே இருக்கும்.
அந்தவகையில், கரிஷ்மா பைக்கில் 210 சிசி லிக்யூடு கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 25.15 பிஎச்பி பவரையும், 20.4 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளையே இந்த பைக் மாடல் தன்னுள் தாங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹீரோ கரிஷ்மா எப்போது வேண்டுமானாலும் மீண்டும் சந்தையில் விற்பனையில் இருந்து வெளியேறலாம் என்கிற நிலையே இப்போது உருவாகி இருக்கின்றது. இருப்பினும், இந்த பைக் மறு அவதாரம் எடுத்தோ அல்லது சிறப்பு பதிப்பாகவோ விற்பனைக்கு வரக் கூடும் என்கிற நம்பிக்கையும் எங்களுக்கு உண்டு.


Click it and Unblock the Notifications









