கேடிஎம் டியூக் யாரெல்லாம் வெச்சிருக்கீங்க? பல லட்ச ரூபா கொடுத்து வாங்கும் பைக்குகளையும் நம்ப முடியல!!
கேடிஎம் (KTM) நிறுவனம் உலக அளவில் தனது 125 டியூக் (125 Duke), 250 டியூக், 390 டியூக் மற்றும் 990 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பதாக அறிவித்துள்ளது. அதாவது, ஏற்கனவே கஸ்டமர்களுக்கு விற்கப்பட்ட இந்த பைக்குகளை அவற்றில் பழுது ஒன்றை கண்டறிந்ததை அடுத்து கேடிஎம் நிறுவனம் திரும்ப அழைக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகம் முழுக்கவே விற்பனை செய்த பின் ஆட்டோமொபைல் வாகனங்கள் திரும்ப அழைக்கப்படுவது வாடிக்கையான ஒன்றே. என்னதான் பார்த்து, பார்த்து உருவாக்கினாலும் சில பிரச்சனைகள் சில காலத்திற்கு பின்பே வாகனத்தை உருவாக்கிய நிறுவனங்களுக்கே தெரிய வருகின்றன. அத்தகைய சமயங்களில் விற்கப்பட்ட வாகனங்களை திரும்ப அழைத்து பழுதை சரிச்செய்து தரும் பணியை பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

அந்த வரிசையில் தான் தற்போது ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த கேடிஎம் நிறுவனமும் மேலே குறிப்பிடப்பட்ட அதன் குறிப்பிட்ட பைக்குகளை திரும்ப அழைக்கிறது. பைக்குகளின் பெட்ரோல் டேங்க் மூடியின் சீல்களில் தரம் குறைவாக இருக்கலாம் என்பதை நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்த பிரச்சனை அனைத்து பைக்குகளிலும் இல்லை... 2024ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கேடிஎம் 125 டியூக், 250 டியூக், 390 டியூக் மற்றும் 990 டியூக் பைக்குகளில் மட்டும் ஆகும்.
தரச் சோதனைகளின் போது, 2024ஆம் ஆண்டு மாடல் பைக்குகளின் பெட்ரோல் டேங்க் மூடி சீல்கள் சில தரத் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்று கேடிஎம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சில பெட்ரோல் டேங்க் மூடி சீல்களில் சிறிய விரிசல்கள் ஏற்பட்டு, எரிபொருள் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனைத் தடுக்கும் வகையில், கேடிஎம் நிறுவனம், உரிமையாளர்களைத் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு, அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தில் பழுதை சரிபார்ப்பதற்கான நேரத்தை ஒதுக்கி, சீல்களை மாற்றிக்கொள்ள அறிவுறுத்துகிறது. கேடிஎம் நிறுவனத்தின் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கை ஆனது உலகளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஆகும்.
அதன்படி, இந்தியாவிலும் இந்த கேடிஎம் பைக்குகளை வாங்கிய கஸ்டமர்கள் இந்த திரும்ப அழைக்கப்படும் நடவடிக்கைக்கு உட்படுகின்றனர். இந்தியாவில் 990 டியூக் பைக் விற்பனை செய்யப்பட்டதே கிடையாது. 125 டியூக் பைக்கின் விற்பனையை இந்தியாவில் கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் கேடிஎம் நிறுத்தியது. இருப்பினும், 2024இல் உற்பத்தி செய்யப்பட்ட 125 டியூக் பைக்குகள் திரும்ப அழைக்கப்படுகின்றன.

கடைசியாக விற்பனையில் இருந்த சமயத்தில் கேடிஎம் 125 டியூக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.09 லட்சத்தில் இருந்து துவங்கின. 250 டியூக் மற்றும் 390 டியூக் பைக்குகள் இப்போதும் விற்பனையில் உள்ளன. தங்களது மோட்டார்சைக்கிள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய உரிமையாளர்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள 'சேவை' (service) பிரிவிற்குச் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம்.
கேடிஎம் 250 டியூக் ஆனது ஸ்டாண்டர்ட் என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் ரூ.2.12 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பைக்கில் 249.07சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. மறுப்பக்கம், கேடிஎம் 390 டியூக் பைக்கை பொறுத்தவரையில், 398.63சிசி என்ஜின் உடன் ஸ்டான்டர்ட் என்கிற ஒற்றை வேரியண்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.2.97 லட்சமாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகளவில் மோட்டார்சைக்கிள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் கேடிஎம் நிறுவனமும் ஒன்று. குறிப்பாக, செயல்திறன்மிக்க பைக்குகளை ஓரளவிற்கு குறைவான விற்பனை செய்வதினால் இந்தியா உள்பட பல நாடுகளில் இந்த நிறுவனத்தின் பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இருப்பினும், இவ்வாறான திரும்ப அழைக்கும் நடவடிக்கையை கேடிஎம் மேற்கொள்ள வேண்டியதாக உள்ளது. பாதிக்கப்பட்ட பைக்குகளை வைத்திருப்பவர்கள் தங்கள் அருகிலுள்ள கேடிஎம் சேவை மையத்தை தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களைப் பெறலாம்.


Click it and Unblock the Notifications









