25 வருஷமா ஒரே பைக்கை பயன்படுத்தியதற்கு, அதிர்ஷ்டம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டிடுச்சு!
ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) பைக்கை நம்மில் பலர் அதிகமாக பயன்படுத்துகிறோம். சாலையில் எப்போதுமே குறைந்தது ஒரு ஸ்பிளெண்டர் பைக்கை ஆவது நிச்சயம் பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு பிரபலமான பைக்காக இருப்பினும், ஸ்பிளெண்டர் பைக்கை நீண்ட தொலைவு பயணங்களுக்கு அதிக பேர் பயன்படுத்துவதில்லை. ஏனெனில், குறுகிய தூர பயணங்களுக்கு ஏற்ற மாதிரி தான் ஸ்பிளெண்டர் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் உருவாக்குகிறது. ஏனெனில், அப்போதுதான் குறைவான விலையில் இந்த பைக்கை விற்பனை செய்ய முடியும். ஆனால், அப்படிப்பட்ட ஸ்பிளெண்டர் பைக்கை இங்கு ஒருவர் லடாக் வரையில் ஓட்டி சென்றுள்ளார்.
இதைவிட ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், 25 வருட பழைய ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் இந்த நபர் தனியாக செல்லவில்லை. அவரது தந்தையையும் பின்னால் அமர வைத்து ஓட்டி சென்றுள்ளார். இந்த தந்தை-மகன் கர்நாடகாவின் மங்களூருவை சேர்ந்தவர்கள் ஆவர். கிட்டத்தட்ட கேரளாவுக்கு அருகே அரபிக்கடலோரம் அமைந்துள்ள மங்களூருவில் இருந்து லடாக் வரையிலான பயணம் ஆனது நிச்சயம் மிக நீண்ட தொலைவு பயணமாக இருந்திருக்கும்.

பொதுவாக, இவ்வாறான தொலைத்தூர பயணங்களை விலையுயர்ந்த மற்றும் பவர்ஃபுல்லான பைக்குகளில் மேற்கொள்வதுதான் வழக்கம். குறிப்பாக, லடாக் போன்ற கரடு முரடான பாதைகளை கொண்ட பகுதிகளுக்கு நன்கு நீண்ட சஸ்பென்ஷனை கொண்ட பைக்குகளை பயன்படுத்துவது தான் வழக்கம். ஆனால், 25 வருட பழமையான ஸ்பிளெண்டர் பைக்கில் சென்றது மட்டுமில்லாமல், பின்னால் ஒருவரையும் அமர வைத்து அழைத்து சென்றிருப்பது மிகவும் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.
ஸ்பிளெண்டர் பைக்கில் இளைஞர் ஒருவர் இவ்வாறான கடினமான நீண்ட தூர பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைமை வரையில் தெரியவந்ததை அடுத்து, இந்த இளைஞருக்கு பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுவும் சாதாரணமான பரிசு அல்ல... சுமார் ரூ.13 லட்சம் மதிப்பிலான பைக்கை பரிசாக வழங்கி சிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ரூ.13 லட்சம் மதிப்பில் இந்த இளைஞருக்கு வழங்கப்பட்டு இருப்பது மிகவும் அரிதான ஹீரோ செண்டெனியல் (Centennial) என்கிற ஸ்பெஷல் எடிசன் பைக் ஆகும். மங்களூருவை சேர்ந்த இந்த இளைஞரின் பெயர், பிரஜ்வால் செனாய் (Prajwal Shenoy) ஆகும். ஹீரோ செண்டெனியல் பைக்கை டெலிவிரி பெற்றது, தனது வாழ்நாள் கனவு நிஜமாகியது போன்று உணர்வதாக பிரஜ்வால் செனாய் தெரிவித்துள்ளார்.
இந்த பைக்கை ஏன் அரிதான பைக் என சொல்கிறோம் என்றால், இதனை வெறும் 100 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்ய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த 100 ஹீரோ செண்டெனியல் பைக்குகளையும் எளிதாக வாங்கிவிட முடியாது. இந்த 100 பைக்குகளில் 75 பைக்குகளை ஏலம் மூலமாக ஹீரோ நிறுவனம் விற்பனை செய்துவிட்டது.
இதன் மூலமாக சுமார் ரூ.8.6 கோடி வரையில் ஹீரோ நிறுவனம் வருவாய் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் (Karizma XMR) பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செண்டெனியல் பைக் ஆனது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை நிறுவியவரான பிரிஜ்மோகன் லால் முஞ்சல் அவர்களின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.13 லட்சம் என்பது இந்த பைக்கின் விலை ஆகும். அதுவே, ஏலத்தில் இந்த பைக்கை விற்கும்போது கோடி ரூபாய் வரையில் கூட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு வருவாய் கிடைக்கும். இப்படிப்பட்ட பைக்கை தான் லடாக் வரையில் பயணம் செய்ததற்காக பிரஜ்வால் செனாய்க்கு வழங்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








