பலருக்கு இப்படிப்பட்ட பைக்குகள் விற்பனையில் இருப்பதே தெரியாது! ஜிஎஸ்டி 2.0 இதையும் விட்டு வைக்கல!
மோட்டோ மோரினி (Moto Morini), இப்படியொரு பெயரில் பைக் நிறுவனம் மார்க்கெட்டில் உள்ளது என்பதே நம்மில் நிறைய பேருக்கு தெரியாது என நினைக்கிறேன். 1937ஆம் ஆண்டிலேயே நிறுவப்பட்ட இத்தாலிய பைக் நிறுவனம், மோட்டோ மோரினி ஆகும். இத்தாலியன்-ஸ்டைலில் மோட்டார்சைக்கிள்களை உருவாக்கும் இந்த நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் தற்போதைக்கு இரண்டே இரண்டு மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.
அவையாவன, சீமெஸ்ஸோ (Seiemmezzo) மற்றும் எக்ஸ்-கேப் (X-Cape) என்பன ஆகும். இதில், சீமெஸ்ஸோ மோட்டார்சைக்கிளின் விலையை குறைத்தது மட்டுமின்றி, இந்த பைக்கிற்கு குறுகிய கால சிறப்பு சலுகையையும் மோட்டோ மோரினி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்த நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மோட்டோ மோரினி நிறுவனத்தின் பிரபலமான மோட்டார்சைக்கிளாக சீமெஸ்ஸோ விளங்குகிறது. இந்தியாவில் இந்த பைக் ரெட்ரோ ஸ்ட்ரீட் (Retro Street) மற்றும் ஸ்க்ராம்ப்ளர் (Scrambler) என இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இரு மோட்டார் சைக்கிள்களுக்கும் சிறப்பு பண்டிகைக் கால சலுகையை மோட்டோ மோரினி அறிவித்துள்ளது.
இத்தாலிய கைவினைத்திறன், காலத்தால் அழியாத வடிவமைப்பு மற்றும் நவீன என்ஜீனியரிங்கிற்காக பாராட்டப்படும் சீமெஸ்ஸோ பைக்குகள் இனி எளிதாக ரூ.4,29,000 (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் இருந்து கிடைக்கும். முன்னதாக ரூ.5,20,000 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருந்து இந்த பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதன் மூலம் பார்க்கும்போது, சீமெஸ்ஸோ பைக்குகளின் விலைகள் ரூ.91,000/- வரை விலை குறைக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி, பண்டிகைக் கொண்டாட்டத்தை மேலும் அதிகரிக்க, செப்டம்பர் 21ஆம் தேதிக்குள் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.33,000/- வரை ஜி.எஸ்.டி சலுகையைப் பெறலாம் என மோட்டோ மோரினி அறிவித்துள்ளது. இதனால், இது சீமெஸ்ஸோ பைக்கை வாங்குவதற்கு சரியான நேரமாக அமைகிறது. இவற்றுடன், பைக்கை வாங்குபவர்களுக்கு நிதி வசதியை மேம்படுத்தும் நோக்கில், மோட்டோ மோரினி பிரத்யேக பண்டிகைக் கால நிதித் திட்டங்களை அறிவித்துள்ளது.
இதில் குறைந்த மாதத் தவணை (EMI) ஆப்ஷன்கள் மற்றும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் உள்ளன. வாடிக்கையாளர்கள் 60 மாதங்கள் வரையிலான தவணை காலம், உடனடி ஒப்புதல்கள், 95% வரை கடன் பாதுகாப்பு மற்றும் வருமானச் சான்று தேவையில்லை போன்ற பலன்களைப் பெறலாம்.

ரெட்ரோ தோற்றத்தை நவீன செயல்திறனுடன் இணைத்து சீமெஸ்ஸோ ரெட்ரோ ஸ்ட்ரீட் மற்றும் ஸ்க்ராம்ப்ளர் மோட்டார் சைக்கிள்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த பைக்குகளை சாகச பயணங்களுக்கு மட்டுமின்றி, அன்றாட பயன்பாட்டிற்கும் பயன்படுத்த முடிகிறது. இந்தக் குறிப்பிட்ட பண்டிகைக் கால விலை சலுகை, இந்திய பைக் ஆர்வலர்கள் இந்த இத்தாலிய மோட்டார் சைக்கிள்களை வாங்கவும், அதே நேரத்தில் சேமிப்புடன் பண்டிகையைக் கொண்டாடவும் உதவுகிறது.
இந்த மோட்டார் சைக்கிள்கள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மோட்டோ வால்ட் டீலர்ஷிப்களிலும் கிடைக்கின்றன. முன்பதிவு (Booking) மற்றும் டெஸ்ட் டிரைவ்கள் (Test Rides) தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த குறுகிய கால பண்டிகை சலுகை ஆனது செப்டம்பர் 22ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என மோட்டோ மோரினி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் மோட்டோ மோரினி நிறுவனம் மஹாவீர் க்ரூப்பின் (Mahavir Group) ஓர் அங்கமாக வகிக்கும் ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா (AARI) நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது. இந்தியா முழுவதும் 60க்கும் மேற்பட்ட டீலர்ஷிப் ஷோரூம்களை கொண்டிருக்கும் ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா நிறுவனத்தின் கீழ் தான் பெனெல்லி (Benelli) மற்றும் கீவே (Keeway) உள்ளிட்ட பிரபலமான நிறுவனங்கள் செயல்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மோட்டோ மோரினி பைக்குகள் முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்படாமல், பாகங்களாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் (Assemble) செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதினால்தான் அவற்றின் பைக்குகள் சற்று விலைமிக்க ஆக உள்ளன. ஆனால், தற்போது சுமார் ரூ.91,000 வரையில் சீமெஸ்ஸோ பைக்கின் விலை குறைக்கப்பட்டு இருப்பது இந்தியாவில் மோட்டோ மோரினி பிராண்டை ஓரளவிற்கு பிரபலமடைய வைக்கும்.


Click it and Unblock the Notifications








