கிருஷ்ணகிரியில் தொழிற்சாலை அமைத்த ராசி... ஓலா தொட்டது எல்லாம் தங்கமா மாறுது!
ஓலா எலக்ட்ரிக் (Ola Electric), இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் ஒன்று. இருப்பினும், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தயாரிப்புகள் மூலமாகவே தனது எலக்ட்ரிக் 2-வீலர் (Electric 2-Wheeler) வாகனங்களுக்கான பேட்டரிகளை வழங்கி வந்தது. எலக்ட்ரிக் வாகனங்களில் முக்கியமானதே பேட்டரி (Battery) தான் என்பதால், ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மறைமுக மற்ற பேட்டரி உற்பத்தி நிறுவனங்களை சார்ந்திருந்தது.
ஆனால், இந்த நிலைமை இனி இல்லை. ஏனெனில், முழுக்க முழுக்க தனது தொழிற்சாலையிலேயே உருவாக்கப்பட்ட பேட்டரிகளை தனது எலக்ட்ரிக் வாகனங்களில் பொருத்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 4680 செல்களை கொண்ட பாரத் பேட்டரிகளை ஓலா எலக்ட்ரிக் 2-வீலர்களில் பொருத்தி உள்ளனர்.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த சிறப்புமிக்க நிகழ்வில் கலந்துக் கொண்ட ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் (Bhavish Agarwal), ஓலாவின் இந்த நடவடிக்கை நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வது மட்டுமின்றி, மார்க்கெட்டில் நிறுவனத்தின் நிலைப்பாட்டையும் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் லித்தியம்-இரும்பு பேட்டரி என்றும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களின் இதய பகுதியே பேட்டரிகள் தான் என்றும், பெரிய அளவில் செலவை கொடுப்பதும், வாகனத்திற்கு செயல்திறனை கொடுப்பதும் என எல்லாமே பேட்டரி தான் என்றும் சிஇஓ பாவிஷ் அகர்வால் பேசியுள்ளார்.

ஆதலால், எங்களது பேட்டரிகள் வரும்போது, ஒட்டுமொத்த வருவாய் எங்கேயோ சென்றுவிடும் என்றும், ஆதலால் இந்த காலாண்டில் இருந்து எங்களது பேட்டரிகள் வருவதாகவும் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள ஓலா தொழிற்சாலையில் புதிய தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்படும் இந்த பேட்டரிகள் விரைவாக சார்ஜ் ஆகக்கூடியவை ஆக உள்ளன.
அத்துடன், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் குறைந்த செலவு உள்ளிட்டவையும் ஓலாவின் லித்தியம் இரும்பு பேட்டரியின் சிறப்பம்சங்களாக உள்ளன. ஓலா உருவாக்கும் பாரத் பேட்டரிகள் 15 வருட ஆயுட்காலத்தை கொண்டவை ஆகும். மற்ற நிறுவனங்கள் உருவாக்கும் பேட்டரிகளை காட்டிலும் 5 மடங்கு அதிக திறன் கொண்டது என கூறப்படும் இந்த பேட்டரிகளை வெறும் 15 நிமிடங்களில் 80% சார்ஜ் நிரப்பி விடலாமாம்.

ஓலாவின் புதிய பாரத் பேட்டரி பொருத்தப்பட்ட புதிய ஓலா புரோ ஸ்போர்ட் (Pro Sport) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்டது. இந்தியாவிலேயே நாங்கள் மட்டுமே கமர்ஷியல் பேட்டரிகளை உருவாக்குவதற்கு என்று தொழிற்சாலையை அமைத்து செயல்பட்டு வருவதாக பெருமை கொள்ளும் ஓலா எலக்ட்ரிக் சிஇஓ பாவிஷ் அகர்வால், இதன் மூலமாக வெளிநாட்டு இறக்குமதிகளை சார்ந்திருக்க வேண்டிய தேவையும் குறைந்திருப்பதாக கூறியுள்ளார்.
மேலும், அரிதான புவி தனிமங்களின் பயன்பாட்டை தனது வாகனங்களில் குறைக்கும் விதமாக 'ஃபெரைட்' (Ferrite) மோட்டார் டெக்னாலஜியையும் பயன்படுத்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் துவங்கியுள்ளது. ஏனெனில், அரிதான புவி தனிமங்கள் கிடைப்பதில் உலகளவில் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதால், அவற்றின் பயன்பாட்டை குறைக்க உலகின் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில், அந்த வகையில் ஓலா நிறுவனம் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாவிஷ் அகர்வால் கூறுவதுபோல், எலக்ட்ரிக் வாகனங்களின் இதய பகுதியே அவற்றின் பேட்டரிகள் தான். இதனால்தான், அவற்றை பெறுவதும் செலவுமிக்கதாக உள்ளது. பேட்டரிகளை சொந்த நிறுவனத்திலேயே உற்பத்தி செய்ய பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இருப்பினும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சொந்தமாக பேட்டரிகளை உருவாக்கும் முயற்சியில் ஓலா இறங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications









