தமிழ்நாட்டை நல்லா யூஸ் பண்ணிக்குறாங்க! ஓசூரில் ரெடியாகும் எலக்ட்ரிக் பைக்கை முதலில் ஓட்டபோவது பெங்களூரு மக்கள்
ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X) எலக்ட்ரிக் பைக் சாலைக்குவர உள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஓலா எலக்ட்ரிக் பைக்கிற்கான முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இன்னமும் ஒரு ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக் கூட சாலைக்கு வரவில்லை. ஏனெனில், இந்த எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரி (Delivery) இன்னும் துவங்கப்படவில்லை. இந்த நிலையில், ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்கின் டெலிவிரிகள் எப்போது துவங்கப்பட உள்ளன என்பதை வீடியோ உடன் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டில் எஸ்1 (S1) என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மூலம் மார்க்கெட்டில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் நுழைந்தது. அதன்பின் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல்வேறு விதமான வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டன என்றாலும், எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தாண்டி எலக்ட்ரிக் பைக் எதுவும் ஓலாவில் இருந்து அறிமுகம் செய்யப்படவில்லை.

ஆனால், எலக்ட்ரிக் பைக்கை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் ஆரம்பத்தில் இருந்தே ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு இருந்தது. அதன்படி, நீண்ட மாதங்களாக முதல் எலக்ட்ரிக் பைக்கை வடிவமைக்கும் பணியில் ஈடுப்பட்டுவந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்தது.
அதாவது, படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாக பைக்கின் தோற்றம் வெளியாகின. மேலும், பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகளையும் ஓலா நிறுவனம் அறிவித்தது. அப்போதே பைக்கிற்கான முன்பதிவுகளும் துவங்கப்பட்டன. அதனை தொடர்ந்து, தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள ஓலா தொழிற்சாலையில் ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்குகள் உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கப்பட்டன.
தொழிற்சாலையில் பைக்கை உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கப்பட்டதால் அறிவிக்கப்பட்டதை போல் ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்குகளை புக் செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளை ஏப்ரல் மாதத்தில் இருந்து ஓலா நிறுவனம் துவங்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், சில காரணங்களினால் டெலிவிரிகளை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்குகளின் டெலிவிரிகள் எப்போதும் துவங்கப்படும் என்பதில் குழப்பமான சூழல் நிலவி வந்த நிலையில், மே 23ஆம் தேதியில் இருந்து இந்த பைக்கின் டெலிவிரிகளை துவங்குவதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் வீடியோ உடன் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த எக்ஸ் பதிவில், "எங்களது 10 இலட்ச வலிமையான கஸ்டமர்ஸ் சமூகம் இந்தியாவில் இவி புரட்சியை நடத்தி வருகிறது. தற்போது, நாங்கள் கம்பீரமான, தனித்துவமான மற்றும் எதிர்காலத்திற்கான ரோட்ஸ்டர் எக்ஸ் உடன் இந்த புரட்சியை முன்னோக்கி கொண்டு செல்கிறோம்! இந்த வெள்ளிக்கிழமையில் (மே 23) இருந்து டெலிவிரிகள் துவங்கப்படுகிறது" என ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போல் இல்லாமல், ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரி விஷயத்தில் புதிய யுக்தியை கையாள ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது, இந்த எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரிகளை முதற்கட்டமாக பெங்களூருவில் மட்டும் துவங்க ஓலா முடிவெடுத்துள்ளது. பெங்களூரு கஸ்டமர்களின் கைகளுக்கு செல்லும் ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்குகளில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுகின்றனவா? ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படுகிறதா? என்பதை முதலில் அறிந்துக்கொண்டு பின்னர் மற்ற நகரங்களில் டெலிவிரிகளை துவங்க ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் பைக்குகள் வணிகத்தில் புதிய ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவதாக ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு மட்டும் டெலிவிரி செய்து, அவர்களை பயன்படுத்த வைத்து அதன் மூலம் தீர்க்கமான முடிவை எட்ட ஓலா எலக்ட்ரிக் நினைப்பது நல்ல விஷயமாகும். ஏனெனில், ஒரு சில பிரச்சனைகள் அன்றாடம் தொடர்ந்து பயன்படுத்துவதினால் கூட ஏற்படலாம்.


Click it and Unblock the Notifications








