ஓலா இ-பைக்கை உருவாக்க ஓசூர் ஆலை இனி ஓய்வில்லாம ஓடும்! அரசிடம் இருந்து வந்த அனுமதி ஆர்டர்!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தின் 9.1 kWh திறன் கொண்ட ரோட்ஸ்டர் எக்ஸ்+ (Roadster X+) எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளுக்கு ஹரியானாவின் மனேசர் நகரத்தில் உள்ள சர்வதேச ஆட்டோமொபைல் தொழில்நுட்ப மையத்திடம் (iCAT) இருந்து மத்திய மோட்டார் வாகன விதிகள் (CMVR) 1989-இன் கீழ் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது ஓலா நிறுவனத்திற்கு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும்? இதனால் என்ன நடக்க போகிறது? என்பது பற்றிய விரிவான விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
ஓலா எலெக்ட்ரிக், இந்தியாவின் எலெக்ட்ரிக் 2-வீலர்கள் உற்பத்தி & விற்பனையில் வேகமாக முன்னேறி வரும் நிறுவனம். பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் ஓசூருக்கு அருகே உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. கடந்த சில வருடங்களில் நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக உருவெடுத்துள்ள ஓலா எலெக்ட்ரிக் அதன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளை சொந்தமாகவே உருவாக்கி வழங்கும் முனைப்புடன் உள்ளது.

இதற்காகவே, '4680 பாரத் செல்' (4680 Bharat Cell) என்கிற செல்களை கொண்ட பேட்டரிகளை முழுக்க முழுக்க தனது தொழிற்சாலையிலேயே ஓலா நிறுவனம் உருவாக்க ஆரம்பித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்த பேட்டரி ஓலாவின் எஸ்1 புரோ+ (S1 Pro+) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஏற்கனவே வழங்கப்பட ஆரம்பித்துவிட்டது. முழுக்க முழுக்க இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டு ஓலா உருவாக்கும் இந்த பேட்டரிகளை கொண்ட எஸ்1 புரோ+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டரை டெலிவிரி (Delivery) கொடுக்கும் பணிகள் கூட ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன.
இந்த நிலையில், எஸ்1 புரோ+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தொடர்ந்து 4680 பாரத் செல் பேட்டரியை கொண்ட ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலெக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்ய ஓலா தயாராகி வருகிறது. அதன் முதற்கட்டமாகவே இதற்கான ஒப்புதலை தற்போது மத்திய அரசாங்கத்திடம் இருந்து ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பெற்றுள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4680 பாரத் செல் பேட்டரி பேக்குடன் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இது ஆகும்.

இந்த அங்கீகாரத்தைத் தொடர்ந்து, ரோட்ஸ்டர் எக்ஸ்+ பைக் டெலிவிரிகளை ஓலா எலெக்ட்ரிக் தொடங்கவுள்ளது. எஸ்1 புரோ+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 5.1kWh திறனில் 4680 பாரத் செல் பேட்டரி வழங்கப்படும் நிலையில், ரோட்ஸ்டர் எக்ஸ்+ பைக்கில் 9.1kWh திறனில் வழங்கப்பட உள்ளது. 9.1kWh திறன் கொண்ட ரோட்ஸ்டர் எக்ஸ்+ ஆனது, 500 கி.மீ வரையிலான மிக நீண்ட ரேஞ்சை அளித்து எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் துறையில் புதிய அளவுகோலை நிர்ணயிக்க உள்ளது.
ஓலாவின் உள்நாட்டு 4680 பாரத் செல் தொழில்நுட்பத்தின் அதிக ஆற்றல் அடர்த்தி மற்றும் மேம்பட்ட வெப்ப செயல்திறனே இதற்கு காரணம் ஆகும். இது நகரங்களுக்கு அப்பாலும் தொலைதூரப் பயணங்களை நடைமுறைக்கு உகந்ததாக்குகிறது. இதன் மூலம், ரேஞ்ச் குறித்த அச்சத்தை முற்றிலும் நீக்கி, ரோட்ஸ்டர் எக்ஸ்+ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை மெட்ரோ அல்லாத இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு சந்தைகளுக்கும் கொண்டு செல்ல முடியும்.

ரோட்ஸ்டர் எக்ஸ்+ (9.1 kWh) எலெக்ட்ரிக் பைக்கை தொடர்ந்து, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது உள்நாட்டு 4680 பாரத் செல் தொழில்நுட்பத்தை மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் என தனது இருசக்கர வாகன வரிசை மொத்தத்திற்கும் விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளது.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தால் (MoRTH) நிர்ணயிக்கப்பட்ட எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான பாதுகாப்பு, மின்சாரம், செயல்திறன், சுற்றுச்சூழல் சோதனைகளைத் தொடர்ந்து இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கட்டுமானம் & செயல்படுத்துவதில் இருக்கும் பாதுகாப்பு, ரேஞ்ச், சாய்வான பாதையில் வாகனத்தை இயக்கும் திறன், உண்டாக்கும் ஒலி, எலெக்ட்ரோ மேக்னெட்டிக் பண்புகள் (EMC) மற்றும் பிரேக்கிங் செயல்திறன் உள்ளிட்ட விரிவான சோதனைகள் மூலம் உயர்ந்த பாதுகாப்பு தரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக தூர பயணங்களுக்கு கொண்டு செல்ல முடியாதது மற்றும் இந்தியாவின் தற்போதைய குறைந்த சார்ஜிங் உள்கட்டமைப்பு உள்ளிட்டவை இங்கு எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டிற்குத் தடையாக இருந்து வருகின்றன. அந்த தடைகளை உடைப்பதில் ஓலா எலெக்ட்ரிக்கின் பங்களிப்பு இன்றியமையாததாக மாறி வருகிறது. இதற்காக, முழுவதுமாக இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பத்தைக் உருவாக்கும் ஓலா எலெக்ட்ரிக்கின் பயணத்தில் ரோட்ஸ்டர் எக்ஸ்+ பைக்கிற்கான இந்த சான்றிதழ் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.


Click it and Unblock the Notifications









